தென்னிந்தியா - வரலாறு - ஆதிசங்கரர் (788 - 820) | 11th History : Chapter 9 : Cultural Development in South India
ஆதிசங்கரர் (788 - 820)
பக்தி இயக்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரைத் தொண்டு, சரணடைதல், தியாகம் என்னும் குறிக்கோள்களின் மூலம் ஒன்று திரட்டி மைய நீரோட்ட அரசியலோடு ஒருங்கிணைத்தது. படிப்பறிவில்லாதவரும் கூட இக்குறிக்கோள்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் பக்தி இலக்கியங்கள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருட் செறிவோடு இசைப்பட கருத்துக்களை முன்வைத்தன. ஆதிசங்கரரின் வருகையோடு இக்கருத்துக்கள் குறித்த விவாதங்கள் சமஸ்கிருத மொழியில் பேசப்பட்டதால் ஒரு சிலர் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.
ஆதிசங்கரரின் வருகை
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அரச வம்சங்களுக்கு அரசு என்ற ஒன்றை உருவாக்க ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதின் பின்னணியில் ஒரு புதிய கோட்பாடு கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த சங்கரர் என்பவரால் முன்வைக்கப்பட்டது. மாயை கோட்பாடு குறித்துப் பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களோடு விவாதம் செய்து வென்றார். அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதத் தத்துவங்களில் வேரூன்றி இருந்தது. பௌத்த மதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்த மடங்களை நிறுவ அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய இடங்களில் மடங்கள் உருவாயின. பிராமண மடாதிபதிகள் அவற்றிற்குத் தலைமை தாங்கினர். சங்கரர் சைவ, வைணவ வழிபாடுகளைச் சம அளவில் முக்கியத்துவம் கொண்ட வேத மதத்தின் கூறுகளாகவே கருதினார். சங்கரரின் சிந்தனைப்பள்ளி, துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல், சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது.