அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள் | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life
செயல்பாடு:1
கொடுக்கப்பட்டுள்ள சில வகை உணவுப் பொருள்களில், அவற்றின் மூலப்பொருள்கள் மற்றும்ஆதாரத்தினை எழுதுக.
விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்
பால்
பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குகளில் பாலூட்டிகளின் பால் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகிறது. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளின் முக்கியமான ஆதார ஊட்டச்சத்து மிக்க உணவாகப் பால் கருதப்படுகிறது. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம்.
❖ நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
❖ நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
❖ புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு (க்ரீம்), வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.
முட்டை
பல்வேறு வகையான பெண் பறவைகள் அதாவது கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம் அவை பின்வருமாறு
❖ முட்டை நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.
❖ இது புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும்.
❖ ஆறு கிராம் எடையுள்ள முட்டை (Egg) உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டுள்ளது. காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. எந்த வயதினரும், தினமும் முட்டையை உண்பது நல்லது.
செயல்பாடு : 2
நல்ல முட்டை எது அழுகிய முட்டை எது என்பதை உங்களால் பிரித்தறிய முடியுமா?
1. ஒரு பாத்திரத்தில் நிறைய நீரை எடுத்துக்கொள்ள வேண்டும்
2. அதில் முட்டையை வைக்க வேண்டும்
3. முட்டை, நீரில் மூழ்கினால் அது நல்லமுட்டை, முட்டை நீரில் மிதந்தால் அது அழுகிய முட்டையாகும்.
தேன்
தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன
❖ தேன் என்பது தேன் கூட்டிலிருந்து நம்மால் பிரித்தெடுக்கப்படும் இனிப்பான சாறாகும்.
❖ மலைப்பகுதியில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகின்றது.
❖ தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்
செயல்பாடு : 3
நோக்கம்: தேன் சுத்தமானதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்தல்.
தேவையான பொருள்கள் : நீர் மற்றும் தேன்
செய்முறை : ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும். பின் அதைக் கவனித்துப் பாருங்கள்.
அறிவன : நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேன். பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.
வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும், மேலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும், தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.
இறைச்சி
விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி எனப்படும். இதனைத் தான் நாம் இறைச்சியாக உண்கிறோம். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும், அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கும். மனிதர்களில் சிலர், கோழி, ஆடு, முயல், பன்றி, வெள்ளாடு, ஒட்டகம், எருமை, மீன், நண்டு, இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.
❖ விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாகப் பயன்படுகிறது.
❖ இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது. மேலும், கோழி இறைச்சி பெருமளவில் மனிதர்கள் பலர் பயன்படுத்துவதால், அவை வணிக ரீதியாக கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்க்க உதவுகிறது.