பருவம் 3 இயல் 8 | 3 ஆம் வகுப்பு தமிழ் - அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள் | 3rd Tamil : Term 3 Chapter 8 : Arivutum tholaikatchi seithigal
8. அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்
ஒருநாள் மாலைப்பொழுது. இளவரசி, பூங்குழலி இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். அப்பொழுது திடீரென்று வானில் ஒலி கேட்டது. மேலே பார்த்ததும் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து பேரொலியுடன் இடி இடிக்கத் தொடங்கியது. அச்சமயம் பெய்த மழைத் தூறல், இளவரசியையும் பூங்குழலியையும் நனைத்தது.
இளவரசி : நாம் வீட்டிற்குச் செல்வதற்குள் முழுவதுமாக நனைந்து விடுவோம்போல் இருக்கிறதே! அதோ, அந்தக் கடையில் சிறிதுநேரம் நின்றுவிட்டு, மழைவிட்டதும் செல்வோமா?
பூங்குழலி : சரி. நாமாவது மழையில் நனையாமலிருக்க இங்கே ஒதுங்கி விடுகிறோம். ஆனால், வானில் பறக்கின்றதே விமானங்கள். அவற்றின் பாதையை இந்தக் கருமேகங்கள் மறைக்காதா?
இளவரசி : அதனால்தான் விமானம், கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது.
பூங்குழலி : அது எப்படி உனக்குத் தெரியும்?
இளவரசி : நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைப் பார்த்தேன். அதில் விமானம் பறப்பது பற்றி விரிவாகக் கூறினார்கள்.
பூங்குழலி : அப்படியா? தொலைக்காட்சியில் இது பற்றியெல்லாம் சொல்கிறார்களா?
இளவரசி : ஆம். பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. விமானம் உயரத்தில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் அதன் பயணம் பாதிக்கப்படுவதில்லை என்பதைக் குறும்படம் மூலம் விளக்கினார்கள்.
பூங்குழலி : கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே! வேறு என்னென்ன நிகழ்ச்சிகளைத் நீ தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறாய்? மழை, தூறலாகத்தான் இருக்கிறது. பேசிக்கொண்டே செல்வோமா?
இளவரசி : கொஞ்சம் பொறு, பூங்குழலி. மழை இன்னும் விடவில்லை. சற்றுநேரம் கழித்துச் செல்வோம். இடிச்சத்தம் காதைப் பிளக்கிறது.
பூங்குழலி : இடிதானே இடிக்கிறது. மழை, பெரிதாகப் பெய்யவில்லையே, மழை வந்தால் மரத்தடியில் ஒதுங்கி நின்று விடலாமே!
இளவரசி : இல்லை பூங்குழலி. மரத்தடியில் நின்றால், இடிதாக்கி உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதைத் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்திருக்கிறேன்.
பூங்குழலி : ஓ! சரி, சரி... வேறு என்னவெல்லாம் நீ தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறாய்?
இளவரச : பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.
பூங்குழலி : தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கும் ஒரு கருவியென நான் நினைத்திருந்தேன். அதனால்தான் திரைப்படம், திரைப்பாடல்கள், நாடகத் தொடர்கள் போன்றவற்றையே அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஆனால், நீ கூறியதுபோல் புதிய செய்திகளை அறிந்துகொள்ளவும், அறிவை விரிவு செய்யவும் தொலைக்காட்சி உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இனி, நானும் இவை போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைவேன்.
இளவரசி : மகிழ்ச்சி. இனி, நாள்தோறும் புதுப் புதுச் செய்திகளைத் தோழிகளுக்கு நாம் இருவருமே சொல்லலாம். சரி, இப்போது மழை நின்றுவிட்டது வா, வீட்டுக்குப் போகலாம்.