Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

வரலாறு - பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms

   Posted On :  15.03.2022 10:31 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரானபோது தக்காண தென்னிந்தியாவும் நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

 

கற்றல் நோக்கங்கள்

கீழ்கண்டவை பற்றி அறிதல்

I

பாமினி, விஜயநகர அரசுகளைப் பற்றி அறிவதற்கான ஆதாரங்கள்

பாமினி சுல்தானியம் உருவாக்கப்படுதலும் வலிமைப்படுத்தப்படுதலும்

பாமினி அரசுகளுக்கும் விஜயநகருக்கும் இடையிலான நெடிய போர்கள்

முகமது கவானின் இராணுவ வெற்றிகளும் சாதனைகளும்

கோல்கொண்டா கோட்டையின் இராணுவ முக்கியத்துவம்

II

சங்கம சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்ட விஜயநகர அரசின் தோற்றமும் வளர்ச்சியும்

விஜயநகர்-பாமினி மோதலுக்கான காரணங்களும் விளைவுகளும்;

சாளுவ அரச வம்சத்தின் குறுகிய கால ஆட்சியும் தொடர்ந்துவந்த கிருஷ்ண தேவராயரின் சிறப்பு மிக்க வளர்ச்சியும்

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர அரசின் வீழ்ச்சியும்

விஜயநகர அரசின் நிர்வாகம், சமூகம், பொருளாதாரம்

நாயக்க அரசுகளின் எழுச்சி

 

அறிமுகம்

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரானபோது தக்காண தென்னிந்தியாவும் நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம் தற்போதைய மகாராஷ்டிரா), துவார சமுத்திரத்தின் ஹொய்சாலர் (கர்நாடகா), வாரங்கலின் காகதியர் (தற்போதைய தெலங்கானாவின் கிழக்குப்பகுதி), மதுரையின் பாண்டியர் (தென் தமிழ்நாடு) ஆகும். 1310 ,1304 ஆகிய ஆண்டுகளில் மாலிக் காபூரின் இரு படையெடுப்புகளில் இந்தப் பழைய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்டன; சேர்த்துவைக்கப்பட்டிருந்த தங்கள் செல்வங்களின் பெரும் பகுதியையும் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்பின்போது இழந்தன. துக்ளக் அரச வம்சம் தனது படைத்தளபதிகளின் மூலம் தென்னிந்தியப் படையெடுப்புகளைத் தொடர்ந்து நடத்தியது. முகம்மது பின் துக்ளக் (1325 - 1351) பரந்த தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென தலைநகரைக்கூட தேவகிரிக்கு மாற்றினார் (தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). ஆனால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாயினர். மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது அவரின் தென்பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர். இதன் காரணமாக 1333இல் மதுரையில் சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவானது. 1345இல் வடக்குக் கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார். அவர் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரசவம்சத்தைத் (1347-1527) தோற்றுவித்தார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக 1336ஆம் ஆண்டு விஜயநகர அரசு சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரைத் தலைநகராகக் கொண்டு (தற்போதைய ஹம்பி) தோற்றுவிக்கப்பட்டது. அடுத்த நூற்றாண்டுகளில் இவ்வரசுகள் தங்களுக்குள் வளமான ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்தவும் இவர்களின் இராணுவத்திற்குத் தேவைப்படும் குதிரைகளை இறக்குமதி செய்யவும், மேற்குக் கடற்கரையிலுள்ள கோவா, ஹோனாவர் துறைமுகங்களைக் கட்டுப்படுத்தவும் இடைவெளியில்லாமல் கடுமையாகப் போரிட்டனர்.

ஆதாரங்கள்

இக்காலப் பகுதியைப் பற்றி அறிய இலக்கியம், கல்வெட்டு, தொல்பொருள் போன்ற பலவகை ஆதாரங்கள் கிடைக்கின்றன. பாமினி அரசவையிலிருந்த வரலாற்றாசிரியர்கள், பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள் பற்றிப் பாரசீக மொழியில் எழுதிய பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் சில சார்புத் தன்மையோடு மிகைப்படுத்திய தகவல்களைக் கொண்டிருந்தாலும், அவை போர்கள், அரண்மனைச் சதிகள், இருதரப்புக்களை சார்ந்த மக்களின் வாழ்க்கை, துயரங்கள் ஆகியன பற்றிய போர்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டுள்ளன. கல்வெட்டுகளில் அது போன்ற செய்திகள் இல்லை. விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவபையுதயம் போன்ற இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ணதேவராயரின் கீழ் இருந்த நாயங்காரர் முறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது. 14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவிற்கு வந்த பல அயல்நாட்டுப் பயணிகள் தங்கள் பயணங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அம்சங்களின் முக்கியத்துவத்தை அறிய உதவுகிறது.. மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணியான இபன் பதூதா (1333-45), பாரசீகப் பயணியான அப்துர் ரசாக் (1443-45), ரஷியப் பயணியான நிகிடின் (1470-74), போர்த்துகீசிய நாட்டு வணிகர்களானடோமிங்கோ பயஸ், நூனிஸ் (1520-37) ஆகியோரின் குறிப்புகள் குறிப்பிடத் தகுந்த முறையில் அதிகமான செய்திகளை முன்வைக்கின்றன. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்களும் இலக்கியச் சான்றுகள் தரும் செய்திகளோடு அதிகச் செய்திகளை வழங்குகின்றன. கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் உள்ளன. நாணயச் சான்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.

விஜயநகர அரசர்கள்வராகன்என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர். (இது தமிழில் பொன் என்றும் கன்னடத்தில் ஹொன்னு என்றும் குறிப்பிடப்பட்டது.) இந்தத் தங்க நாணயங்கள் வெவ்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களையும் காளை, யானை, கன்ட பெருண்டா என்ற கற்பனைப் பறவை (இரட்டைக் கழுகு வடிவத்தில் உள்ள இந்த உருவம் தனது அலகிலும் நகத்திலும் யானையைக் கொத்திக்கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது) ஆகிய விலங்கு உருவங்களையும் தாங்கியுள்ளன. நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.



Tags : History வரலாறு.
11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms : Bahmani and Vijayanagar Kingdoms History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்