குடிமையியல் | சமூக அறிவியல் - நடுவண் அரசு | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
நடுவண்
அரசு
• குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத்
தலைவர் ஆகியோரின் அதிகாரங்களைப் பற்றி அறிதல்
• பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றி அறிதல்
• மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றி புரிந்துகொள்ளுதல்
• உச்ச நீதிமன்றம் பற்றி அறிதல்
அறிமுகம்
இந்திய
நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில்
அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78
வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகின்றன. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்
இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி
முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.
நடுவண்
அரசு மூன்று அங்கங்களைக் கொண்டது.
அவை நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியனவாகும். நடுவண் நிர்வாகம் என்பது
குடியரசுத் தலைவர்,
துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரைத் தலைவராகக்
கொண்ட அமைச்சரவைக் குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரை உள்ளடக்கியது
ஆகும். நடுவண் சட்டமன்றமானது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை
(ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) ஆகியனவாகும். நடுவண்
நீதித்துறை உச்சநீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.