Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் - தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule

   Posted On :  15.03.2022 09:45 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்

தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு

பாளையங்களின் தோற்றம்

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர். தளவாய் அரியநாத முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக மாற்றப்பட்டன. விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.

பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகச் செலுத்துவதற்கும் தேவையான போது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர். இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார். இத்துடன் கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.

புவியியல் அடிப்படையில், பரவியிருந்த பாளையங்களை மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப் பிரிக்கலாம். மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு பேசுவோர் குடியேறியிருந்தார்கள். அவை பாளையக்கார நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பாளையக்காரர்களின் கிளர்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல் செய்யும் உரிமையை கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது. பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 

பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கலை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது. அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும் பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது. இந்த முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர். பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.

மாபுஸ்கான் (ஆற்காடு நவாபின் மூத்த அண்ணன்) இந்தப் பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மாபுஸ்கான் கர்னல் ஹெரானுடன் திருநெல்வேலிக்குப் படையெடுத்துச் சென்றார். அவர்கள் மதுரையை எளிதாகக் கைப்பற்றினர். பாஞ்சாலக்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அது திரும்ப வரவழைக்கப்பட்டது. ஹெரான் ஊர் திரும்பும் வழியில் நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க உத்தரவு வந்தது. அந்தப் பாளையத்தை ஆட்சி செய்த புலித்தேவர் மேற்குப் பாளையக்காரர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். பீரங்கி உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை, படைவீரர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் ஹெரானின் தாக்குதல் கைவிடப்பட்டது. அவரது படை மதுரைக்குத் திரும்பியது.

நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மியானா, முடிமய்யா, நபிகான் கட்டக் ஆகிய பதான் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர். அவர்கள் ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராகத் தமிழ்ப் பாளையக்காரர்களை ஆதரித்தனர். அவர்களுடன் புலித்தேவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. ஊற்றுமலை, சுரண்டை, தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம் கொண்டான், வடகரை ஆகிய பாளையங்களின் ஆட்சியாளர்களும் புலித்தேவரின் கூட்டமைப்பில் சேர்ந்தனர். திருவிதாங்கூருக்குக் களக்காடு திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்.

இன்னொரு பக்கம் ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். நவாபின் வலுப்படுத்தப்பட்ட படை திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது. கம்பெனியைச் சேர்ந்த 1000 வீரர்களுடன், நவாப் மூலம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 600 வீரர்களும் இப்போது மாபுஸ்கானிடம் இருந்தார்கள். கூடவே, கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது. அவர் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.

புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள். கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப்கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்து சேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை. பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டு வந்ததால், 1760 செப்டம்பரில் தான் பீரங்கிகள் வந்து சேர்ந்தன. யூசுப் கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தினார். இது ஏறத்தாழ இரு மாதங்கள் நீடித்தது.

யூசுப் கானின் இயற்பெயர் மருதநாயகம். அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் இருந்தபோது, இசுலாம் சமயத்தைத் தழுவினார். 1752இல் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்த யூசுப் கான் 1752-54இல் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார். ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 1756 முதல் 1761 வரை ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். யூசுப்கான் ஹைதர் அலியைத் தோற்கடித்து, சோழவந்தானைக் கைப்பற்றினார். லாலியின் மதராஸ் முற்றுகை (1758-59)யின்போது யூசுப்கானின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. அவர் நிர்வாகப்பொறுப்பில் இருந்தபோது மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தார். மதுரை கோவில்களில் வழிபாடு நடத்துவதற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கினார். மதகுருக்கள் வசமிருந்த கோவில் நிலங்களை மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் அவரை ஆற்காடு நவாபுக்கு பணிசெய்ய ஆணையிட்டதால், அவர் கிளர்ச்சியில் இறங்கினார்.

1761மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யூசுப் கான் வசமாயின. புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரெஞ்சுக்காரர்களின் தலையீடு இல்லாமல் ஆனது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. திருவிதாங்கூர், சேத்தூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர். கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

கோட்டைகளை யூசூப் கான் கைப்பற்றிய பிறகு, எங்கோ தஞ்சம் புகுந்த புலித்தேவர் தனது பாளையத்துக்குத் திரும்பி, மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாளையக்காரர்களைத் திரட்டத் தொடங்கினார். இம்முறை ஆங்கிலேயர் அனுப்பிய கேப்டன் கேம்பெல் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றினார். புலித்தேவரின் இறுதி நாட்கள் குறித்த உறுதியான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.

வேலு நாச்சியார்


இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார். வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார். இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார். ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்.

வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார். நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.

ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார். ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார். சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார்.

சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதி செய்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார். 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன்


வேலு நாச்சியார் இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்த போது, வீரபாண்டிய கட்ட பொம்மனின் எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருந்தது. கட்டபொம்மன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த பாளையக்காரர் ஆவார். கட்டபொம்மன் நாயக்கர் என்பது அவரது குடும்பப் பட்டமாகும். கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் கர்னல் ஹெரான் காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார். 1760இல் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தந்தையின் இறப்புக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்குப் பொறுப்பேற்றார். கம்பெனிக்கும் தென்சீமை பாளையத்தாருக்கும் தொடர்ந்து மோதல் இருந்ததால், கம்பெனிக்கு அவர்கள் கப்பம் செலுத்துவது ஒரு பிரச்சனையாகவே நீடித்தது. 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் அவருக்கே உரிய ஆணவத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.

நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், வரி வசூலிப்பது மிகக்கடினமான வேலை ஆனது. கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மிகவும் தொலைவிலிருந்த தெற்குப்பகுதியில் போர் செய்வது ஆபத்து எனக் கம்பெனி கருதியது. அது பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இரு வாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, திருநெல்வேலி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிப்பதற்காகச் சொக்கம்பட்டி, சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்தபோது வீரபாண்டியக் கட்டபொம்மன் அவரைச் சந்திக்க முயன்றார். ஆனால் இராமநாதபுரத்தில்தான் கலெக்டரைச் சந்திக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது

இந்த அவமதிப்பையும் மீறி, கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் இராமநாதபுரத்தை அடைந்தார். கலெக்டரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அன்றே தரப்பட்டது.

விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது. ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது. திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது. ‘பகோடா மரத்தை உலுக்குதல்என்ற சொலவடை இங்கிலாந்து மக்களிடையே நிலவியது. ஒருவரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் வாய்ப்புகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை இதன் மூலம் நாம் உணரலாம். தமிழில் இதனை வராகன் என்பர்.

கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார். கட்டபொம்மன் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் கணக்குகளைச் சரிபார்த்து அவர் அறிந்துகொண்டார். இந்தச் சந்திப்பின் போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்ட பொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது. சந்திப்பின் இறுதியில் ஜாக்சன் இருவரையும் இராமநாதபுரம் கோட்டையில் தங்கும்படி கூறினார். அங்கு திடீரென வந்த வீரர்கள் கட்டபொம்மனைக் கைது செய்யவே வந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. கட்டபொம்மனும் அமைச்சரும் தப்ப முயன்றனர். கோட்டை வாசலில் நடந்த மோதலில் லெப்டினெண்ட் க்ளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டார்கள். சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் மட்டுமே தப்ப முடிந்தது.

பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் என்று சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார். இதற்கிடையே ஆளுநர் எட்வர்டு கிளைவ் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரண்டையும்படி அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, கட்டபொம்மன் கம்பெனி விசாரணைக்குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். கலகக் குற்றச்சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவித்த குழு, கலெக்டர் நடந்து கொண்ட விதத்துக்காக அவரைக் கண்டித்தது. லூஷிங்டன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இறுதியில் ஜாக்சன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் கட்டபொம்மன் தனது பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற கொதிப்புடன்தான் இருந்தார். இந்தச் சூழலில் மருது பாண்டியர்கள் திண்டுக்கல் கோபால நாயக்கருடனும் ஆனைமலை யாதுல் நாயக்கருடனும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். இதே விருப்பத்துடன் இருந்த கட்டபொம்மனும் மருது பாண்டியரும் நெருக்கமானார்கள்.

கட்டபொம்மன் சிவகிரி பாளையக்காரருடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி திறந்த சமவெளிப்பகுதியில் எளிதாகத் தாக்குதலுக்குள்ளாகும் விதத்தில் அமைந்திருந்தது. சிவகிரிக் கோட்டை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக தாக்குதல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது.

கட்ட பொம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சிவகிரி பாளையக்காரரின் மகன் வீரபாண்டியன் தன் வீரர்களுடனும் கூட்டணியில் இருந்த பிற தலைவர்களுடனும் தளவாய் குமாரசாமி நாயக்கரின் தலைமையில் மேற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றார். சிவகிரிபாளையம் கம்பெனிக்குக் கட்டுப்பட்டதாக இருந்ததால், வீரபாண்டியனின் இந்நடவடிக்கையை சென்னைக் கம்பெனி அரசு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.

1799 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். திருவனந்தபுரம் அரசரின் படையும் ஆங்கிலேயருடன் இணைந்தது. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.

1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார்.

நாகலாபுரம், மன்னர் கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்கள் கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளிலிருந்த சில குறிப்பிட்ட கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியிருந்தார்கள். கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார். இக்கூட்டமைப்பை ஏற்படுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியவற்றின் பாளையக்காரர்களையும் அதில் சேரும்படி வலியுறுத்தினார்.

1799 செப்டம்பர் 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். கட்டபொம்மன் சந்திப்பைத் தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார். செப்டம்பர் 5ஆம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியைச் சென்றடைந்தது.

கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயப்படை கோட்டையின் தகவல் தொடர்புக்கான வழிகளைத் துண்டித்தது. கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. கர்னல் வெல்ஷ் என்பார் தனது நினைவுக் குறிப்புகளில், கட்டபொம்மனது படைவீரர்களின் வீரத்தைப் பதிவிட்டுள்ளார். கம்பெனிப் படைக்குக் கூடுதல் எண்ணிக்கையில் வீரர்கள் தேவைப்பட்டனர். செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன. அவர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் சுவர்கள் உடைந்து கோட்டை பலவீனம் அடைந்ததால், கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது. கோலார்பட்டியில் நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார். நாலாபுறமும் எதிர்ப்பைக் காட்டிய தலைவர்களுக்குரிய பிற பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. ஆங்கிலேயப்படையைக் கண்டதும், மேற்குப் பாளையத்தாரும் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைவதற்குச் சிவகங்கைக்கும் திண்டுக்கல் மலைக்குன்றுகளுக்கும் விரைந்தனர்.

1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். அது கேலிக்கூத்தான விசாரணையாகவே இருந்தது. கட்டபொம்மன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒத்துக்கொண்டார். அவர் சிவகிரிக்கு எதிராக ஆயுதந்தரித்த வீரர்களை அனுப்பியதையும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயப்படைகளுக்கு எதிராகப் போரிட்டதையும் ஒத்துக்கொண்டார். அக்டோபர் 16ஆம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். கட்ட பொம்மனுடைய வீரச்செயல்களைக் கருப்பொருளாகக் கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் மக்களிடையே அவரது நினைவை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

மருது சகோதரர்களும் 1801 தென்னிந்தியக் கிளர்ச்சியும்

ஆற்காடு நவாப் 1772ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்திருந்தார். இது பாளையக்காரர்கள், பாளையக்காரர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினரின் ஆட்சிப்பகுதிகளிலுமிருந்த காவல் தலைவர்களைப் பாதித்தது. அதிருப்தியடைந்த காவல்காரர்களும் அவர்களின் தலைவர்களும் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிராகப் பாளையக்காரர்களுடன் சேர்ந்தார்கள். சிவகங்கை பெரிய உடைய தேவர், நவாப் படைக்கு எதிரான சண்டையில் உயிரிழந்ததால் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் நவாப் படையை வெளியேற்றினார்கள். பெரிய உடைய தேவர், வேலு நாச்சியார் ஆகியோரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர். அவர்கள் அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய சிவகங்கைக் காட்டின் நடுவில் இருந்த காளையார் கோவில், கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது. வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவருடைய சகோதரர் ஊமைத்துரை கமுதியைச் சென்றடைந்தார். அங்கிருந்து அவரைச் சின்ன மருது சிவகங்கையின் தலைநகரான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.


நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடிசூட்டினார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் முத்துக்கருப்பத் தேவரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். மேலும் அரசின் தெற்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். கிளர்ச்சியாளர்களின் வீரர்கள் மதுரைக்குள்ளும் நுழைந்தனர். ஜூலையில் ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள பழைய நாடு என்னும் பகுதியைக் கைப்பற்றினார். 1801இல் சின்ன மருதுவின் மகன் செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த படைகளும் இணைந்து, கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன. தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செவத்த தம்பியின் படையில் சேர்ந்தனர். தஞ்சாவூர் ஸ்தானிகர் ஆக இருந்த கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன் படைகளைத் திரட்டி, மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றார். தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். இருப்பினும் வீரர்கள் ஆங்கிலேயர் படை பின் தொடர்தலிலிருந்து தப்பித்து, கடந்து சென்ற பகுதிகளை எல்லாம் அழித்து நாசமாக்கி சென்றனர்.

Tags : Early Resistance to British Rule ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்.
11th History : Chapter 18 : Early Resistance to British Rule : Early Resistance of Southern Palayakkarars against the British Early Resistance to British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்