இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - இராணுவ ஒப்பந்தங்களின் உருவாக்கம் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
இராணுவ
ஒப்பந்தங்களின் உருவாக்கம்
அமெரிக்க
ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பியத் தோழமை நாடுகளும் சேர்ந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த
அமைப்பை 1949இல் ஏற்படுத்தி சோவியத்
நாட்டின் ஆக்கிரமிப்புப் போக்கை ஐரோப்பாவிற்குள் தடைசெய்ய
முற்பட்டன. இவ்வொப்பந்தம் வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நாடுகளுக்கிடையே
ஏற்படுத்தப்பட்ட இராணுவக் கூட்டு ஒப்பந்தமாகும். இதன் முக்கிய உறுப்பு நாடுகள்
கனடா, பெல்ஜியம்,
டென்மார்க்,
பிரான்ஸ்,
ஐஸ்லாந்து,
இத்தாலி,
லக்ஸம்பர்க்,
நெதர்லாந்து,
நார்வே,
போர்த்துகல்
மற்றும் இங்கிலாந்து ஆகியன. பின்னர் 1952இல்
துருக்கியும் கிரீசும் இவ்வொப்பந்தத்தில் இணைந்து கொண்டன. ஜெர்மனி 1955ஆம்
ஆண்டு இவ்வொப்பந்தத்தில் இணைந்தது. நேட்டோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமானது வடக்கு
அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்.
தென்கிழக்கு
ஆசிய ஒப்பந்த அமைவு என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பை
முன்னிறுத்தியதாகும். மணிலா ஒப்பந்தம் (1954), அமெரிக்க
ஐக்கிய நாடு, பிரான்ஸ்,
இங்கிலாந்து,
நியூஸிலாந்து,
ஆஸ்திரேலியா,
பிலிப்பைன்ஸ்,
தாய்லாந்து
மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின்
உறுப்பு நாடுகள் இப்பகுதியில் பொதுவுடைமைச் சிந்தனை பரவுவதையும் அக்கொள்கை
செல்வாக்குப் பெறுவதையும் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நேட்டோ
கூட்டமைப்பில் இருந்தது போன்று நிரந்தரப் படைகளையோ,
ஒருங்கிணைந்த
கட்டுப்பாட்டையோ சீட்டோ கொண்டிருக்கவில்லை.
நேட்டோவிற்கு
எதிராக சோவியத் நாடு தன் ஆதரவு நாடுகளைக் கொண்டு உருவாக்கியதே வார்சா
ஒப்பந்தமாகும். ஐரோப்பாவை சேர்ந்த எட்டு முக்கிய நாடுகளான அல்பேனியா,
பல்கேரியா,
ஹங்கேரி,
செக்கோஸ்லோவியா,
கிழக்கு
ஜெர்மனி, போலந்து,
ருமேனியா,
ரஷ்யா
ஆகியவை டிசம்பர் 1954இல் மாஸ்கோவில் கூடி ஒரு
கலந்துரையாடலை நடத்தின. இவை மீண்டும் மே 14,
1955இல் கூடி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இதுவே ‘வார்சா
உடன்படிக்கை’ என்று அழைக்கப்படுகிறது. இந்நாடுகள் மாஸ்கோவைத் தலைமையிடமாகக்
கொண்டு ஒரு கூட்டு இராணுவ முகமையை நிறுவின. 1991இல்
வார்சா ஒப்பந்தத்தை சோவியத்தின் பிளவு முடிவுக்குக் கொண்டு வந்தது.
துருக்கி,
ஈராக்,
பிரிட்டன்,
பாகிஸ்தான்,
ஈரான்
ஆகிய நாடுகள் 1955இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே
பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடு
இவ்வுடன்படிக்கையில் 1958இல் இணைந்ததோடு,
இவ்வொப்பந்தம்
‘மத்திய உடன்படிக்கை அமைப்பு' என்று அறியப்பட்டது. இவ்வொப்பந்தம்
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பும் அனைத்து அரபு நாடுகளுக்கும் திறந்தே
இருப்பதாக அறிவிக்கப்பட்டதெனினும் இவ்வொப்பந்தம் 1979இல்
கலைக்கப்பட்டது.