இந்திய அரசியலமைப்பு - அடிப்படைக் கடமைகள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
அடிப்படைக் கடமைகள்
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும். 1976ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. அதன்படி 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன. மேலும் இந்தச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி 51A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது. இது குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.
அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
அரசியலமைப்பு, அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை
மதித்தல்.
ஆ) சுதந்திர போராட்டத்திற்குத்
தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.
இ) இந்தியாவின் இறையாண்மை,
ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.
ஈ) தேசப் பாதுகாப்பிற்காகத்
தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.
உ) சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த
வேறுபாடுகளை மறந்து,
பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.
ஊ) நமது உயர்ந்த,
பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.
எ) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும்
உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி
அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.
ஏ) அறிவியல் கோட்பாடு,
மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம்
ஆகியவற்றை வளர்த்தல்.
ஐ) வன்முறையைக் கைவிட்டு
பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.
ஒ) தனிப்பட்ட மற்றும் கூட்டு செயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும்
சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு,
தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக
உழைத்தல்.
ஓ) 6 முதல்
14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்.
(86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002இன்
படி 51A (k) கீழ் 11வது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள்
6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும்
கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்).