பசுமைப்புரட்சி
வளரும் நாடுகளிலும், பொருளாதாரத்தில்
பின்தங்கிய நாடுகளிலும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய
நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையே பசுமைப்புரட்சி
ஆகும். “பசுமைப்புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்பட்ட அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E.
போர்லாக் 1970 ஆம்
ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். டாக்டர்.
போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா
சுவாமிநாதன் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து,
பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தார். இதனால் 1960 - 2000 க்கும் இடையே கோதுமை மற்றும் அரிசி உற்பத்தி அதிக அளவில் அதிகரித்தது.
மேலும் தெரிந்துகொள்வோம்
டாக்டர் மா.சா. சுவாமிநாதன்
இந்திய
பசுமைப்புரட்சியில் முன்னணிப் பங்கு வகித்தவர், இந்திய விஞ்ஞானியான
டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ஆவார். உருளைக் கிழங்கு, கோதுமை, நெல் மற்றும் சணல் ஆகிய பயிர்களில் அவர்
மேற்கொண்ட பயிர்ப்பெருக்க ஆய்வுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். அவரது பெரும்
முயற்சிகளால் 1960 ஆம் ஆண்டில் 12
மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே இவர் "இந்திய
பசுமைப்புரட்சியின் தந்தை" என பொருத்தமாக அழைக்கப்படுகிறார்.
சுதந்திரத்திற்குப் பின்னர்
இந்தியா எதிர் கொண்ட மிகப் பெரிய சவால், பெருகி வரும் மக்கட்தொகைக்கு போதுமான உணவை
உற்பத்திச் செய்வதே ஆகும். அதிக மகசூலை அளிக்கும் பயிர் வகைகளை உற்பத்திச் செய்ய
மேற்கொண்ட முயற்சிகள் பசுமைப்புரட்சிக்கு வழிவகுத்தன.
அரைக்குள்ள வகைக் கோதுமை மற்றும் நெல்
மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள
உயரமுடைய (semidwarf), செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும்
தன்மை கொண்ட கோதுமை வகைகளில் இருந்து, சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச்
செய்யப்பட்டன. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI),
ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக
மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது. இது 1966 ஆம் ஆண்டு முதன் முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும்
அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தோனேசியாவின் அதிக மகசூல் தரும் நெல் வகையான பீட்டா
மற்றும் சீனாவின் குள்ள நெல் வகையான டீ - ஜியோ - வூ- ஜென் (Dee -
geowoo-gen - DGWG) ஆகியவை இணைந்து உருவான கலப்பினமாகும்.
மேலும் தெரிந்துகொள்வோம்
டாக்டர். கோ. நம்மாழ்வார்
டாக்டர்.
கோ. நம்மாழ்வார் (1938 - 2013) ஒரு தமிழ் விவசாய விஞ்ஞானி,
சுற்றுச் சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் ஆவார். இவர்
"வானகம் - நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், உலக உணவு பாதுகாப்பிற்கான
பண்ணை ஆராய்ச்சி மையம்" (NEFFFRGFST - வானகம்) என்ற
அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் இயற்கை வேளாண்மையின்
பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினார்.
வைரஸ்கள், பாக்டீரியங்கள்
மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன. இது
பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக்
கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே
வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது
அவசியமாகிறது. பயிர்ப்பெருக்கத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட நோய்
எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள்
மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன. எனவே பூச்சி மற்றும்
தீங்குயிரி எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் சில
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உலக மக்கள் அனைவரின்
கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய உடல் நலப் பிரச்சினைகள், ஊட்டச்சத்து
குறைவு மற்றும் புரதக் குறைபாடு ஆகியவையே. இது மனித உடல் நலத்தை மட்டுமல்லாது ஏனைய
பண்ணை விலங்குகளின் உடல் நலத்தையும் பாதிக்கிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின்
உடல் நலம், பயிர்களின் ஊட்டச்சத்தின் தரம், உணவூட்டப் பொருட்களின் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தது. பயிர்களின்
தரத்தை பின் வரும் தேவைகளைப் பொறுத்து மேம்படுத்தலாம்.
1. புரதத்தின்
அளவு மற்றும் தரம்
2. எண்ணெயின்
அளவு
3. கனிமங்களின்
அளவு
விரும்பத் தக்க ஊட்டச்
சத்துக்களான வைட்டமின்கள்,
புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச்
செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச்சத்தேற்றம்
எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. லைசின் என்ற
அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை)
2. புரதம்
செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66
3. இரும்புச்
சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்
4. வைட்டமின் A
செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.