சமத்துவத்தின் முக்கியத்துவம்
ஏன் சமத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது?
சமத்துவ கொள்கையானது, மனிதர்களை, நிறம், பாலினம், இனம், தேசம் போன்றவைகளின் பாகுபாடு காட்டாமல் சமமான மதிப்புடன் நடத்தும் அரசியல் லட்சியமாக சமத்துவம் விளங்குகிறது. மனிதநேயம் எவ்வாறு பொதுவானதோ, அதே போன்று சகமனிதர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டியது அவசியம் என சுதந்திரம் வலியுறுத்துகிறது. இம்மனிதநேய நம்பிக்கையே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக காரணமாக அமைந்தது.
சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்துப் போராட சமத்துவ முழக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது. ஏனெனில் நவீனயுகத்தில் பணி, செல்வவளம், நிலை மற்றும் சலுகை அடிப்படையில் தற்பொழுதும் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது.
18-ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும், முடியாட்சியையும் எதிர்த்து, "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற முழக்கத்தை பிரெஞ்சு புரட்சியாளர்கள் ஓங்கி முழங்கினர். 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில், சமத்துவக் கொள்கையை நிலைநாட்டக் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சி நிகழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய சமுதாயங்களில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும், பெண்களும் தங்களின் சமத்துவத்திற்காக புரட்சியை மேற்கொண்டனர்.
சமத்துவம் என்பது தற்பொழுது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாபெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான புரட்சிகளும், எழுச்சிகளும் ஆங்காங்கே எழுந்தபோதிலும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்பொழுதும் உள்ளது என்பதே வெளிப்படையான உண்மை ஆகும். அனைத்து நாடுகளிலும் வீடு மற்றும் வசதிமிக்க வாழ்க்கைக்கு நடுவே சரிவர பாரமரிக்கப்படாத கழிவறைகளும், குடிநீரற்ற நிலையும் கொண்ட பள்ளிகள் உள்ளன. உணவை வீணடிக்கும் சிலரும், பசிக்கொடுமையால் வாடும் சிலரும் இருக்கின்ற நிலை பலவித சங்கடங்களை அளிக்கிறது. சட்டப்படியான உத்திரவாதங்களுக்கும், நடைமுறையில் நாம் பார்ப்பவற்றிற்கும் இடையே நிறைய வேறுபாடுகளைக் காணலாம்.
இந்தியா, தன் அரசமைப்பின் மூலமாக பணக்காரவர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்கும் இடையேயான இடைவெளியினை குறைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.