பொருளாதாரம் - தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் | 12th Economics : Chapter 2 : National Income
தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேசிய வருவாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய வருவாய் பொருளாதாரத்தின் கணக்கு அல்லது "சமூகக் கணக்கு" (Social Accounting) எனச் சொல்லப்படுகிறது. தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் பின்வருமாறு:
1. தேசிய வருவாய் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் தேசிய வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது. மேலும் பொருள்கள் மற்றும் பணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, செலவு செய்யப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன, மற்றும் வரி விதிக்கப்படுகின்றன போன்றவைகளை அறிய இயலும்.
2. தேசிய அளவிலான பணவியல் மற்றும் பொது நிதிக் கொள்கைகளை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்ல கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் தேசிய வருவாய் ஆய்வு உதவுகிறது.
3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை தேசிய வருவாய் கணக்கீடு அளிக்கின்றது.
4. குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க தேசிய வருவாய் கணக்கீடு பயன்படுகிறது.
5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், தேசிய வருவாய் விவரங்கள் பயன்படுகின்றன.
6. தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்க்கிடப்படுகிறது. தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.
7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமானப் பகிர்வை தெரிந்து கொள்ள தேசிய வருவாய் பயன்படுகிறது.
8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி - GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை - GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் - GDP விகிதம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.