சர்வதேச அமைப்புகள்
கற்றலின் நோக்கங்கள்
* சர்வதேச அமைப்புகள் குறித்து அறிதல்.
* சர்வதேச அமைப்புகளின் தோற்றத்தினை கண்டறிதல்.
* மாணாக்கர்கள் ஐக்கிய நாடுகளின் சபையின் தோற்றத்திற்கான பின்னணியை அறிந்து கொள்வது.
* மாணாக்கர்கள் சர்வதேச அமைப்புகளின் பணிகளை குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளின் பணியினை அறிந்து கொள்வது.
* சர்வதேச நிதி நிறுவனங்களின் பணியினை மாணாக்கர்கள் அறிவது.
* மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அதனை மேம்படுத்துதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பங்கு குறித்து அறிதல்.
அறிமுகம்
நாம் சர்வதேச அமைப்புகளை பற்றி சிந்திக்கும் போதெல்லாம், அவை இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த வரலாற்று நிகழ்வாகவும், குறிப்பாக சர்வதேச சங்கம் 1919ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பிறகு தோன்றியவையாகவும் கருதுகிறோம். உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அமைப்பாக உலக நாடுகளால் ஏற்கனவே சர்வதேச அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவை 1865இல் உருவாக்கப்பட்ட சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்படும் சர்வதேச தொலைதொடர்பு கழகம் (ITU) மற்றும் 1874இல் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச அஞ்சல் கழகம் போன்றவையாகும். இவை இரண்டும் தற்பொழுது ஐ.நா-வின் அங்கங்களாக உள்ளன. 1899இல் தி ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச அமைதிக்கான மாநாடானது அமைதியான வழியில் போரினை தடுப்பதற்கான முறைகளையும் மற்றும் போர் குறித்த சட்டங்களையும் வரையறை செய்தன. சர்வதேசப் பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய இம்மாநாடு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் சமரசம் செய்வதற்கு ஒருநிரந்தரதீர்ப்பாயத்தை 1902ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. இந்த அமைப்பே பின்னாளில் சர்வதேச நீதிமன்றம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால், 1914ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகபோரும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் இந்த அமைப்புகளின் குறைவான அதிகார வரம்பை வெளிச்சமிட்டு காட்டின. மேலும், இத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்ற சர்வதேச அமைப்பும் முடிவுக்கு வந்தது. நெப்போலியனின் படையெடுப்புகளுக்கு பின்பு பெரிய அளவில் எந்த போர்களும் நடைபெறாமல் காத்து வந்ததே இந்த அமைப்பின் சாதனையாகும். முதல் உலகப்போர் நடைபெற்ற 1914ஆம் ஆண்டு முதல் 1919ஆம் ஆண்டு வரை உலகம் மாபெரும் மனிதப் பேரழிவைக் கண்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் மாண்டனர். பேரரசுகளின் வீழ்ச்சி (ஓட்டாமன், ஆஸ்டிரோ - ஹங்கேரியன், தற்காலிமாக ரஷ்ய பேரரசு) மற்றும் புதிய தேசங்களான செக்கோஸ்லாவியா, எஸ்தோனியா மற்றும் பின்லாந்தின் தோற்றம், முற்போக்கு புரட்சியாளர்கள் ரஷ்யாவை வெற்றி கொண்டது மற்றும் ஜெர்மனியின் வீழ்ச்சி என ஒரு புதிய உலக ஒழுங்கமைவு தோன்றியது.