Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவின் முக்கியப் பயிர்கள்
   Posted On :  27.07.2022 07:26 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

இந்தியாவின் முக்கியப் பயிர்கள்

இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உணவுப் பயிர்கள் - நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு இன்னும் பிற. 2. வாணிபப் பயிர்கள் - கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் 3. தோட்டப்பயிர்கள் - தேயிலை, காபி, இரப்பர் 4. தோட்டக்கலைப் பயிர்கள் - பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்

இந்தியாவின் முக்கியப் பயிர்கள்

இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உணவுப் பயிர்கள் - நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு இன்னும் பிற.

2. வாணிபப் பயிர்கள் - கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்

3. தோட்டப்பயிர்கள் - தேயிலை, காபி, இரப்பர்

4. தோட்டக்கலைப் பயிர்கள் - பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்


1. உணவுப்பயிர்கள்

அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உணவுப் பயிர்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும்.

நெல்

நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இது அயனமண்டலப் பயிராகும். 24°C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

            நெல் சாகுபடி 

இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.

1. விதைத் தூவல் முறை

2. ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை

3. நாற்று நடுதல் முறை

அதிக விளைச்சல் தரும் விதைகள் (CR தான் 205, A.R. தான் 306, CRR 451, போன்றவை) அதிகரித்ததன் காரணமாக பல பழமையான நெல் வகைகள் மறைந்து போயின. மேற்கு வங்காளம், (முதல் மாநிலம்) உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் 2016ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளன.


கோதுமை:

நெற் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும். நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவிகிதமும், மொத்த உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவிகித பங்கையும் கோதுமை வகிக்கிறது. இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10-15°C வெப்பமும், முதிரும் பருவத்தில் 2025°C வெப்பநிலையும் தேவைப்படுகிறது. சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல் மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.


இந்திய வேளாண் பருவகாலங்கள்

காரிஃப் பருவம் (ஜூன்-செப்டம்பர்)நெல், பருத்தி, மக்காச் சோளம், சோளம், கம்பு, உளுந்து, நெல், கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை

ராபி பருவம் (அக்டோபர் - மார்ச்) : கோதுமை, பருப்பு, ஆலிவிதைகள், கடுகு, பார்லி, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு

சையத் பருவம் (ஏப்ரல்-ஜூன்) : காய்கறிகள், பழங்கள், திணைப் பயிர்கள், நெல், காய்கறிகள், தீவனப் பயிர்கள்

சோளம்:

நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப்பயிர் சோளம் ஆகும். இது ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்ட பயிராகும். இப்பயிர் வறட்சியான காலநிலையிலும் நன்கு வளரக் கூடியது. இத்தானியத்தில் கார்போ-ஹைட்ரேட், புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பெரும்பாலான ஏழை மக்களுக்கு மலிவான உணவாக விளங்குகிறது. இது நாட்டின் பல பகுதிகளில் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கியப்பயிராகவும் இது விளங்குகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் இவற்றின் முதன்மையான உற்பத்தியாளர்களாகும்.

கம்பு:

கம்பு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிராகும். இது ஏழை மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிராகும். கம்பு பயிரின் தண்டுப்பகுதி கால்நடைகளுக்கு தீவனமாகவும் வீட்டுக்கு கூறை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில் இராஜஸ்தான் முதன்மை உற்பத்தியாளராகவும் அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக உற்பத்தியை தருபவைகளாகவும் உள்ளன.

வாற்கோதுமை (பார்லி):

பார்லி நம் நாட்டின் முக்கியமான தானியப் பயிர்களுள் ஒன்றாகும். இது ஏழைகளின் முக்கிய உணவாக மட்டும் இல்லாமல் பார்லி நீர், மதுபானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டும் இவற்றின் முதன்மை உற்பத்தியாளர்கள் ஆகும்.

பருப்பு வகைகள்:

பருப்பு வகைகள் அவரை இனத்தைச் சார்ந்த பல பயிர்களை உள்ளடக்கியதும் தாவர புரதச்சத்து செறிந்ததும் ஆகும். இவை மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. இவை வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண் வளத்தை அதிகரிக்கின்றது. எனவே இப்பயிர்கள் பயிர் சுழற்சி பயிரிடல் முறையில் வழக்கமாக பயிரிடப்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியை செய்யும் நாடு இந்தியாவாகும்.


2. வாணிபப்பயிர்கள்

வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப்பயிர்கள் என அழைக்கிறோம். வாணிபப்பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப்பயிர்கள் (பருத்தி மற்றும் சணல்) மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும். 


கரும்பு:

இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும். இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது. இது நம் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை பிரிவாகும். சர்க்கரை உற்பத்தியை தவிர வெல்லம், நாட்டுச்சர்க்கரை, சாராய தொழிற்சாலைக்கான கரும்புச்சாறு மற்றும் காகித தொழிற்சாலைக்கு தேவையான கரும்பு சக்கைகளையும் அளிக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் நம் நாடு கியூபா மற்றும் பிரேசிலுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம் இதன் முதன்மை உற்பத்தியாளராகும். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.

பருத்தி:

இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருள்களை அளிக்கிறது. பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் 79% பங்களிப்பை வழங்குகின்றன.

சணல்:

சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும். இது வண்டல் மண்ணில் நன்கு வளரும். இது சணல் தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது. கோணிப்பைகள், கம்பளங்கள், கயிறு, நூலிழைகள், போர்வைகள், துணிகள், தார்பாலின், திரைச்சீலைகள் போன்ற பொருள்கள் தயாரிக்க சணல் நார் பயன்படுத்தப்படுகிறது. சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம் வகிக்கிறது. பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.

எண்ணெய் வித்துக்கள்:

இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும். நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணெய் மற்றும் பிண்ணாக்குகள், மசகு எண்ணெய், வார்னிஷ், மருந்துப் பொருள்கள், வாசனைப்பொருள்கள், மெழுகு, சோப்பு, உரம், கால்நடைத் தீவனம் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.

இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது.


3. தோட்டப்பயிர்கள்:

தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது. தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும். 

தேயிலை:

தேயிலை அயன மண்டல மற்றும் உப அயன மண்டல காலநிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரமாகும். தேயிலை பயிரிட அதிக தொழிலாளர்களும், மிதமான நிழலும், அதிக மழையளவும் தேவை. ஆனால் வேர்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள்:

1. பூகி (BOHEA) - பிறப்பிடம் சீனா

2. அசாமிகா (ASSAMICA) - பிறப்பிடம் இந்தியா

இவ்விரண்டின் கலப்பின் மூலம் பலவீரியமுள்ள தேயிலை பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகத்தேயிலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் அசாம் ஆகும். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் தேயிலை பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.

காபி:

இவை நிழல்களில் நன்றாக வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீ முதல் 1500 மீ உயரம் கொண்ட மலைச் சரிவுகளில் நன்றாக வளர்கிறது.

காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை:

1. அராபிகா - தரம் மிக்கதும், இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும்.

2. ரொபஸ்டா - தரம் குறைந்த வகை

உலக காபி உற்பத்தியில் இந்தியா 7வது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடகம் முதன்மையான உற்பத்தியாளராக திகழ்கிறது. இம்மாநிலம் இந்திய உற்பத்தியில் 71%, உலக உற்பத்தியில் 2.5% அளிக்கிறது. (ஆதாரம்: இந்திய காபி வாரியம், 2018)

இரப்பர்:

1902ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலில் இரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது. வெப்ப ஈரப்பத அயனமண்டல காலநிலை இரப்பர் பயிரிட ஏற்றதாகும். (வெப்பநிலை 20°C க்கும் அதிகம், மழைப்பொழிவு 300 செ.மீக்கு மேல்) பெரும்பாலான இரப்பர் தோட்டங்கள் சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் இரப்பர் உற்பத்தியில் முக்கியமான பகுதிகளாகும்.

நறுமணப் பயிர்கள்:

பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு இந்தியா உலக புகழ் பெற்றதாகும். இந்நறுமணப் பொருள்கள் பெரும்பாலும் உணவிற்கு சுவையூட்டியாகவும், மருந்துப்பொருள்கள் மற்றும் சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மிளகு, மிளகாய், மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், பட்டை மற்றும் பாக்கு போன்ற நறுமணப் பொருள்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. கேரளா நறுமணப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மையான மாநிலம் ஆகும்.

 

4. தோட்டக்கலை பயிர்கள்

தோட்டக் கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிர்களைக் குறிக்கிறது. உடல் நலத்திற்குத் தேவையான தாது சத்துகள், வைட்டமின்கள், நார்சத்துக்கள், பழங்கள் மற்றும் காய் வகைகள் அதிகம் உள்ளதால் இவை மனிதர்களின் அன்றாட உணவில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.


10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : Major Crops Cultivated in India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை : இந்தியாவின் முக்கியப் பயிர்கள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை