வங்கியியல் - பணவியல் கொள்கை | 12th Economics : Chapter 6 : Banking

   Posted On :  16.03.2022 01:23 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்

பணவியல் கொள்கை

பண அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை எனப்படுகின்றது.

பணவியல் கொள்கை (Monetary Policy)

பண அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல் கொள்கை எனப்படுகின்றது. பேரினப் பொருளியல் கொள்கைகளான பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மைத்தன்மை போன்றவற்றை அடைய மேற்கொள்ளும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பின் முக்கியத்துவம் பெற்றதும், 1976-ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மில்டன் ஃபிரைட்மேனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணவியல் கொள்கையாகும். அவர் ஒரு பணவியலாளராக இருந்தும், 1930களில் நிலவிய உலக பெருமந்தத்துக் காரணம் அமெரிக்க மையவங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான் என்பதனைத் தனது நூலான அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1867-1960" (Monetary History of the United States, 1867-1960) என்ற நூலில் மிகத் தைரியமாகத் தெரிவித்திருந்தார்.


1. விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்க பணக்கொள்கை

விரிவாக்க பணக்கொள்கை என்பது (Expansionary Monetary Policy) மலிவுப் பணக்கொள்கையாகும் (Cheap Money Policy). இதில் பணவியல் அதிகார அமைப்பான மைய வங்கி அதன் கருவிகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது. நடப்பு குறுகியகால வட்டி விகிதத்தைவிட குறைவான வட்டிவிகித்தையும், வழக்கத்தை விட வேகமான பண அளிப்பையும் ஏற்படுத்துவது விரிவாக்கப் பணக்கொள்கையாகும். இது பாரம்பரியமாக பொருளாதார நடவடிக்கைளின் பின்னிறக்க காலத்தில் ஏற்படும் வேலைவாய்பின்மைக்கு எதிராக எடுக்கப்படும். வட்டி விகித குறைப்பு நடவடிக்கை கடனுக்கு ஆகும் செலவை குறைந்து தொழில் உற்பத்தியையும், வாணிபத்தையும் விரிவாக்கும். இதனால் தொகு தேவை (அனைத்து பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை) அதிகரித்து, மொத்த உள்ள நாட்டு உற்பத்தியால் கணக்கிடப்படும் குறுகியகால வளர்ச்சியை தூண்டும்.

மேற்கூறியதற்கு எதிரானது சுருக்கப் பணக்கொள்கை (Contractionary Monetary Policy) அருமைப் பணக்கொள்கை (Dear Money Policy) எனப்படுகிறது. இதில், குறுகியகால வட்டிவிகிதம் நடப்பு வட்டிவிகித்தைவிட அதிகப்படுத்துவது, பண அளிப்பினை குறைப்பது அல்லது சுருக்குவது ஆகும். இது, பொருளாதாரத்தின் குறுகியகால வளர்ச்சியை குறைத்து பணவீக்கத்தை குறைப்பது ஆகும். சுருக்கப்பணக் கொள்கை வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து, நுகர்வோர் மற்றும் உற்பத்தியளர்கள் கடன் வாங்குவதையும் செலவு செய்வதையும் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை பின்னோக்கி திருப்புவது ஆகும்.



2. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் (Objectives of Monetary Policy)

வளர்ந்த நாடுகளின் பொருளதாரத்தில் பணவியல் கொள்கை நிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதார அமைப்பினில் சமநிலையைப் பேணுதல் ஆகிய பணிகளை செய்யவேண்டியுள்ளது. ஆனால், வளர்ச்சி குறைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் இது இயக்க  நிலையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை விரிவாக்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பணவியல் கொள்கை பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கருவியாக உணரப்படுகிறது.



3. பணவியல் கொள்கையின் குறிப்பிடப்பட்ட குறிக்கோள்கள்


பணவியல் கொள்கையின் நோக்கங்கள்

1. பணத்தின் நடுநிலைத் தன்மை

2. பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத் தன்மை

3. விலையை நிலைப்படுத்துதல் 

4. முழு வேலைவாய்ப்பு 

5. பொருளாதார வளர்ச்சி

6. செலுத்துச் சமநிலையில் சமநிலையை பேணுதல்

1. பணத்தின் நடுநிலைத் தன்மை

பொருளியலாளர்களான விக்ஸ்டெட், ஹேயக் மற்றும் ராபர்ட்சன் ஆகியோர் பணத்தின் நடுநிலை பற்றி விவரித்த முக்கிய நிபுணர்கள் ஆவர். அவர்கள் பணவியல் அதிகார அமைப்பு பொருளாதாரத்தில் பணம் நடுநிலைத் தன்மை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். பணத்தில் ஏற்படும் மாற்றமே அனைத்து பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும். பண நடுநிலையாளர்களின் கூற்றுப்படி, பணவியல் மாற்றங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார அமைப்பில் விலகலையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்றனர்.

2. விகித நிலைத்தன்மை

பரிவர்த்தனை விகித நிலைத்தன்மை என்பது பணவியல் கொள்கையின் பாரம்பரியமான நோக்கமாகும். பல்வேறுநாடுகளில் பொன் திட்டம் அமலில் இருந்து காலத்தில் இது ஒரு முக்கிய நோக்கமாகும். எப்பொழுது ஒரு நாட்டின் செலுத்துச் சமநிலையில் சமனற்ற நிலை தோன்றுகிறதோ அப்பொழுது தங்க நகர்வின் காரணமாக அது தானாகவே சரி செய்துகொள்ளும். “எப்பொழுது தங்கம் உள்வருகிறதோ அப்பொழுது பணமும் கடனும் விரிவடைகிறது: எப்பொழுது தங்கம் வெளிச்செல்கிறதோ அப்பொழுது பணமும் கடனும் சுருங்குகிறது" என்பது ஒரு முக்கியமான புகழ்பெற்ற வாக்கியமாகும். இம்முறை இருக்கும்பொழுது செலுத்துச் சமநிலையில் ஏற்படும் சமனற்ற நிலைகள் தானாகவே சரிசெய்யப்பட்டு பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை பேணப்படும். 

பரிவர்த்தனை விகிதங்களில் நிலையற்ற தன்மை இருந்தால், அது தங்கம் வெளிச்செல்லுதல் அல்லது உள்வருதல் ஆகியவற்றால் செலுத்துச் சமநிலையில் சமனற்ற நிலையை உருவாக்கும். ஆகவே பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது பன்னாட்டு வாணிபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. விலை நிலைத்தன்மை

பொருளியலாளர்கள் காஸல், கீன்ஸ் போன்றவர்கள் விலை நிலைத்தன்மை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையில் முக்கிய நோக்கமாக என்கின்றனர். விலை நிலைத்தன்மை பொதுமக்களிடம் பொதுவான நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் இது வணிக நட்டிவக்கையை அதிகரித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். மக்களிடையே சமமான வருவாய் மற்றும் சொத்துப் பங்கீடுகளை செய்யும். இவைகளின் தொடர் விளைவாக வளர்ச்சிக்கான பொது அலையும் சமுதாய நலனும் நிறுவப்படும். 

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, விலை நிலைத்தன்மை என்பது விலை மாறாமல் நிலையாக (price rigidity) இருப்பதோ, விலைத் தேக்கமடைந்து (price stagnation) இருப்பதோ அல்ல. ஒரு மிதமான விலையேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியின் ஊக்க சக்தியாக இருக்கும். இந்த மிதமான விலையேற்றம் என்பது கிட்டத்தட்ட நிலையான விலையின் பெரும்பாலான பண்புகளையும் தன்னகத்தே கொண்டதாக இருக்கும்.

4. முழுவேலைவாய்ப்பு

உலக பெருமந்தத்தின்பொழுது, வேலைவாய்பின்மை மிகவேகமாக அதிகரித்தது. இது சமுதாய அளவில் அபாயகரமானதும், பொருளாதார அளவில் வீணடிப்பையும், அறநெறியளவில் வருந்தத்தக்கதாகவும் இருந்தது. ஆகவே, முழுவேலைவாய்ப்பு என்பது பணவியல் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும், 1936-ல் வெளியிடப்பட்ட "வேலைவாய்ப்பு, வட்டி, மற்றும் பணத்திற்கான பொதுக் கோட்பாடு" (General Theory of Employment, Interest and Money) என்ற கீன்ஸின் நூல் முழுவேலைவாய்ப்பு என்ற பணவியல் கோட்பாட்டின் குறிக்கோளை முன்னிலைப்படுத்தியது.

5. பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி என்பது நீண்டகாலத்தில் உண்மை தலா வருவாய் (real per capita income) அதிகரித்து செல்லும் நடவடிக்கை ஆகும். இது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பொருள் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதை உணர்த்துவது ஆகும். ஆகவே, சமநிலை பண அளவு, உற்பத்தி அளவுகள், சாதகமான சேமிப்புமுதலீடு ஆகிய சூழ்நிலைகளை பராமரித்து அதன்மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவது பணவியல் கொள்கையின் குறிக்கோளாக அமைகிறது. தேவை மற்றும் அளிப்பிற்கிடையே சமநிலையை ஏற்படுத்த நெகிழ்ச்சியுடன் கூடிய பணவியல் கொள்கை ஒரு சிறந்த வழிமுறையாகும்.

6. செலுத்துச் சமநிலையில் சமநிலையை பேணுதல்

செலுத்துச் சமநிலையில், சமநிலையை பேணுதல் என்பது பணவியல் கொள்கையின் அடுத்தக் குறிக்கோளாகும். உலகப்போர்களுக்குப் பிறகு வாணிபத்தில் சமனற்ற நிலைகள் தோன்ற ஆரம்பித்தன. உலக வர்த்தகம் சமனற்ற நிலையில் அதிகரித்ததால் வரும் அந்நிய செலாவணி பிரச்சனையாகும். இதன்காரணமாக செலுத்து சமநிலையில் வரும் பற்றாக்குறை பொருளாதாரத்தின் மற்ற குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதின் திறனையும் குறைக்கும். இதனால், குறைவளர்ச்சி நாடுகள் தங்களுடைய இறக்குமதியினை குறைப்பதால் அதன் வளர்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் பாதகமான நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆகவே, பணவியல் கொள்கை செலுத்துச்சமநிலையில் சமமான நிலையினை பேணுவதை தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது.


Tags : Banking வங்கியியல்.
12th Economics : Chapter 6 : Banking : Monetary Policy Banking in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல் : பணவியல் கொள்கை - வங்கியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்