வங்கியியல் - விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு | 12th Economics : Chapter 6 : Banking
விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD And Its Role In Agricultural Credit)
துவக்க காலத்திலிருந்தே மத்திய ரிசர்வ் வங்கி விவசாயக்கடன்கள் வழங்க தனித்துறையை ஏற்படுத்தியது. பின்னர் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் என்ற துணை அமைப்பு இருந்த பொழுதிலும், இந்திய ரிசர்வ் வங்கி விவசாய முன்னேற்றக் கருத்தை விரிவு செய்து கிராமப்புற முன்னேற்றத்திற்காக கடன்களை விரிவுபடுத்தும் நோக்கில் கிராமப்புற முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த விரிவான அடித்தளம் கொண்ட ஒரு அமைப்பு மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்பட்டது. அதன் காரணமாக 1982-ஆம் ஆண்டு ஜுலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கியினை (National Bank for Agriculture and Rural Development - NABARD) 1982 ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவித்தது. சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது.
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் பணிகள் முழுமையும், வட்டார ஊரக வங்கிகளின் மறுகடன் பணிகளையும் தானே ஏற்று செய்துவருகிறது. அதன்பிறகு, அனைத்து விவசாயக் கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. நபார்டின் மூலதனம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு ஆகியவை சரிபகுதியாக வழங்கியுள்ளது. நபார்டு வங்கி மேலாண்மையைப் பொறுத்தவரை, இந்திய அரசின் மைய இயக்குநர் குழுவிலிருந்து நபார்டு வங்கியின் இயக்குநர் குழுவுக்கு மூவரைப் பரிந்துரைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நபார்டின் தலைவராக இருப்பார்.
நபார்டு வங்கி வழங்கும் மூன்றடுக்கு கூட்டுறவுக் கடன் முறை
நபார்டு வங்கியின் பணிகள்
ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் துணை அமைப்புகளும், விவசாயம் மற்றும் ஊரக முன்னேற்றத்திற்காக எந்தெந்த பணிகளை ஆற்றிவந்ததோ அப்பணிகள் அனைத்தையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது. பின்வருவன நபார்டு வங்கியின் குறிப்பிட்ட பணிகளாகும்:
(i) நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்தி மற்றும் முதலீட்டுக்காக விவசாயம், சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், மற்றும் இதர ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
(ii) இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்தியரிசர்வ்வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது.
(iii) கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்டகால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
(iv) மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது விவசாயம் மற்றும் ஊராக வளர்ச்சிக்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்டகால கடனை அளிக்கிறது.
(v) மைய அரசு, மாநில அரசுகள், திட்டக்குழு (தற்பொழுது நிதி ஆயோக்) மற்றும் மைய, மாநில அரசுகளின் - சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிகச்சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயலாற்றும் நடவடிக்கைகளை நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது.
(vi) நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்யு செய்யும் பணியினை செய்கிறது.
(vii) வேளாண்மை மற்றும் ஊராக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்தும்விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.