இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - அணிசேரா இயக்கம் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
அணிசேரா இயக்கம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட காலனியாதிக்க வெளியேற்றத்தின் பின்னணியில் அணிசேரா இயக்கம் உருப்பெற்றது. புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் 1955இல் பாண்டுங்கில் (இந்தோனேசியா) கூடி இரு வல்லரசுகளின் அணிகளிலும் சேரக்கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தின. மேலும் அவை காலனிய ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் எவ்வடிவம் எடுத்தாலும் அதை எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்தன.
அணிசேரா இயக்கம் 1961இல் டிட்டோ (யுகோஸ்லோவியா), நாசர் (எகிப்து), நேரு (இந்தியா), நுக்ருமா (கானா), சுகர்ணோ (இந்தோனேசியா) ஆகிய தலைவர்களை முன்னிறுத்தி பெல்கிரேடில் ஒரு மாநாட்டைக் கூட்டியது. பெல்கிரேட் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை அதன் அடிப்படைக் கொள்கைகளாகக் கூறுவதாவது: அமைதியோடு இணைந்திருத்தல், அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல், எந்த அணியோடும் இராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல், எந்த வல்லரசுக்கும் தத்தம் நாட்டிற்குள் இராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல் போன்றவையே ஆகும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அணிசேரா இயக்கத்தின் தேவை மங்கியது.