சுகந்தி சுப்பிரமணியன் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: முகம் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum
கவிதைப்பேழை
ஆளுமை – அ
முகம்
- சுகந்தி சுப்பிரமணியன்
நுழையும்முன்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்துகொள்கிறது. அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக்கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது.
நான் வெற்றுவெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
எனது முகத்தைத் தேடியபடி.
எல்லா முகமும் அதனதன் கோணத்தில்
இயல்பற்று இறுகிக் கிடந்தது.
என் முகம் எப்படியென
எனக்குத் தெரியாது.
ஆனாலும்
என் முகத்தை நான் தேடியாக வேண்டும்
இப்பொழுதேனும்.
நூல்வெளி
'சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்' என்னும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்ரமணியன். கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை , மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவருடைய மறைவுக்குப் பிறகு இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் 'சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளன.