தி.சொ.வேணுகோபாலன் | இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஞானம் | 10th Tamil : Chapter 8 : Peruvali
அறம்
கவிதைப் பேழை
ஞானம்
-- தி.சொ.வேணுகோபாலன்
நுழையும்முன்
இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான
அடிப்படை. இயங்குதலின்றி உலகில்லை, உயர்வில்லை. கடல் அலைகளைப்போல் பணிகளும் ஓய்வதில்லை.
அலைகள் ஓய்ந்திடின் கடலுமில்லை. பணிகள் ஓய்ந்திடின் உலகமுமில்லை. தனக்கான பணிகளோ
உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும்.
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்,
தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும்.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத்
தூரிகை:
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!
கோடை வயல் – தொகுப்பு
நூல் வெளி
நம்
பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும்
தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப்
பணியாற்றியவர்; 'எழுத்து'
காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.
கற்பவை கற்றபின்...
1.
துளிப்பா ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப்
பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.
2.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி,
அகர வரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.