தேனரசன் | பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam
(இயல் 3 : கவிதைப் பேழை : ஒரு வேண்டுகோள்)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மயிலும் மானும் வனத்திற்கு ________ தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
[விடை : ஆ. வனப்பு]
2. மிளகாய் வற்றலின் ________ தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
[விடை : அ. நெடி]
3. அன்னை தான் பெற்ற ________ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
[விடை : இ. மழலையின்]
4. ‘வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
[விடை : ஆ. வனப்பு + இல்லை]
5. ‘வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
[விடை : இ. வார்ப்பெனில்]
நயம் அறிக.
ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
1. பிரும்மாக்களே - சேர்ப்பவர்களே
2. உடைப்பவனின் - உழவனின்
3. சிகரங்களா - அலைகளா - காடுகளா - பள்ளத்தாக்குகளா -தோட்டங்களா
4. வனப்பில்லை - உயிர்ப்பில்லை
குறு வினா
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை ஆகும்.
2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
சிறு வினா
1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
❖ நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
❖ உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
❖ தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.
❖ சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.
❖ ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
சிந்தனை வினா
1. நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.
கற்பவை கற்றபின்
1. உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
2. உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து எழுதுக.
“நீங்கள் சேற்றில் கால் வைத்தால் தான்
நாங்கள் சோற்றில் கைவைக்கமுடியும்”
“உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”
”உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”