அய்யப்ப மாதவன் | இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: பிறகொரு நாள் கோடை | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai
கவிதைப்பேழை
இயற்கை - உ
பிறகொரு நாள் கோடை
- அய்யப்ப மாதவன்
நுழையும்முன்
மாறுபட்ட இரண்டு இணைகிறபோது புது அழகு புலப்படுகிறது. பகலும் இரவும் சந்திக்கும் அந்தி அழகு. கரையும் கடலும் சேரும் ஓரம் அழகு. மழையினூடே வெயில் வரும் வேளை வெளிப்படும் அழகுகள் பார்க்கத் திகட்டாதவை. நீரில் நனைந்து வெயிலில் காயும் நகரத்தில் பளபளக்கும் மரக்கிளைகள் சொட்டும் நீர்த்துளிகளும் வெயில் கண்டு மகிழ்ந்த பறவைகளின் இசைப்பும் நெஞ்சில் தடமாய் வழிகின்றன. வெயில் கண்டு மகிழ்ந்தாலும் மீண்டும் மழைக்காக நெஞ்சம் ஏங்கத்தான் செய்கிறது.
மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப் பயணம்
காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம்
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்
சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள்
அழிந்த மாயத்தில் வருத்தம் தோய்கிறது
தலையசைத்து உதறுகிறது
மீதமான சொட்டுக்களை ஈரமான மரங்கள்
வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட
சங்கீதம் இசைக்கின்றன
மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர்
இன்னும் நான் வீட்டுச்சுவரில்
செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள்
வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன்
கை ஏந்தி வாங்கிய துளிகள்
நரம்புகளுக்குள் வீணை
மீட்டிக் கொண்டிருக்கிறது
போன மழை திரும்பவும் வருமென்று
மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்
பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது.
நூல்வெளி
இக்கவிதை 'அய்யப்ப மாதவன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்; இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்; 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.