முதல் பருவம் அலகு 1 | பொருளியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி | 7th Social Science : Economics : Term 1 Unit 1 : Production

   Posted On :  07.07.2022 11:10 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு 1 : உற்பத்தி

உற்பத்தி

கற்றலலின் நோக்கங்கள் • உற்பத்தி என்பதன் பொருளறிதல் • உற்பத்தி வகைகளை அறிந்துகொள்ளுதல் • உற்பத்திக்கான காரணிகளைத் தெரிந்துகொள்ளுதல் • உற்பத்திக்கான காரணிகளின் சிறப்பியல்புகளைப் புரிந்துகொள்ளுதல் "குழந்தைகளே, கரும்பிலிருந்து என்னென்ன பொருள்களைத் தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?"

பொருளியல்

அலகு -1

உற்பத்தி



கற்றலலின்  நோக்கங்கள்

உற்பத்தி என்பதன் பொருளறிதல் 

உற்பத்தி வகைகளை அறிந்துகொள்ளுதல்

உற்பத்திக்கான காரணிகளைத் தெரிந்துகொள்ளுதல்

உற்பத்திக்கான காரணிகளின் சிறப்பியல்புகளைப் புரிந்துகொள்ளுதல் 

"குழந்தைகளே, கரும்பிலிருந்து என்னென்ன பொருள்களைத் தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?"

சர்க்கரை

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள் மாமா.


யாழினியும் ஜோஸ்பினும் ஒரு நாள், தங்கள் வீட்டின் அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து, கரும்பு தின்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த யாழினியின் மாமா இராஜா, அவர்களிருவரையும் பார்த்துப் பேசத்தொடங்கினார். 

மாமா: "குழந்தைகளே, கரும்பிலிருந்து என்னென்ன பொருள்களைத் தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 

யாழினியும் ஜோஸ்பினும்: (சற்றுச் சிந்தித்து) "கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள் மாமா". 

மாமா: "சரியாகச் சொன்னீர்கள். அந்தக் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையை, நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு எவ்வாறு உருவாக்குகிறார்கள் எனத் தெரியுமா?" 

யாழினி: எங்களுக்குத் தெரியவில்லையே! ஆனால், நீங்கள் அதைப்பற்றிக் கூறினால், நாங்களும் தெரிந்துகொள்வோம், அல்லவா! 

மாமா: நானே சொல்கிறேன். நீங்கள் அறிந்துகொண்டபின், இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும், புரிந்ததா? 

யாழினியும் ஜோஸ்பினும் "கட்டாயம் சொல்வோம் மாமா" என்று கூற, இராஜா தம் பேச்சைத் தொடர்ந்தார்.

"கரும்பு, வேளாண்மை மூலம் விளைவிக்கப்படுகிறது. இதனை, நாம் முதன்மை உற்பத்தி என்று கூறுகிறோம். இவ்வாறு விளைவிக்கப்பட்ட கரும்புகளைச் சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டு செல்கிறோம். அங்குள்ள இயந்திரங்களின் உதவியால், அவை சர்க்கரையாகத் தயாரிக்கப்படுகின்றன. இதனை, நாம் இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். இங்குச் சர்க்கரை ஆலைகள் போன்ற இதர பிற தொழிற்சாலைகளுமே இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும்.

சர்க்கரை ஆலைகள், கரும்பிலிருந்து தயாரித்த சர்க்கரையைத் விற்பனைக் கூடங்களுக்கு அனுப்புகின்றன. அவை தாம் பெற்றுக்கொண்ட சர்க்கரையை நல்லமுறையில், பயன்படுத்துவதற்கேற்ற வகையில், முழுமைபெறச் செய்து, நுகர்வோராகிய நமக்கு அளிக்கின்றன. இதனை மூன்றாம் நிலை உற்பத்தி என்கிறோம். 

இந்த மூன்றாம் நிலை உற்பத்தியில் இடம்பெறும் விற்பனைக் கூடங்கள், நம்முடைய தேவையை நிறைவேற்றும் சேவைத் துறைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக விற்பனைக் கூடங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதலானவற்றைச் சேவைத் துறை நிறுவனங்களாகக் கூறலாம். இவற்றை மூன்றாம் நிலை உற்பத்தி என்கிறோம்.  

ஆகவே உற்பத்தி என்பது, மூலப்பொருள்களை மாற்றியமைத்து நம் பயன்பாட்டிற்கேற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயலாகும். விளைபொருளான கரும்பு, ஆலை, இயந்திரம், மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு முதலியவை உற்பத்தி செய்வதற்கான உள்ளீடுகளாகவும், இவற்றின் வாயிலாக நாம் பெறும் சர்க்கரை உற்பத்தியின் வெளியீடாகவும் அமைகின்றது.

உற்பத்தி, அதற்கு உதவுகின்ற பல்வேறு காரணிகளான நிலம், உழைப்பு, முதலீடு, அமைப்பு அல்லது நிறுவனம், அவற்றின் சிறப்பியல்புகள் ஆகியவை குறித்து, மேலும் பல செய்திகளைச் சற்று விரிவாகத் தெரிந்துகொள்வோமா?"  என்று இராஜா கேட்க, யாழினியும் ஜோஸ்பினும் சொல்லுங்கள் மாமா, நாங்கள் தெரிந்துகொள்கிறோம்" என்று கூறினர். நாமும் தெரிந்துகொள்வோம், வாருங்கள். 

பொருளாதாரத்தில், உற்பத்தியும் நுகர்வும் இரு இன்றியமையாத செயல்கள். அதேபோன்று, பொருளாதாரத்தில் உற்பத்தியாளர், நுகர்வோர் என இருவரும் இன்றியமையாதவர்களாக உள்ளனர். உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே காணப்படும் சிறந்த செயலாற்றல், திறன்மிக்க நல்ல பொருள்கள் தயாரிப்பை உறுதி செய்கிறது. இருவருக்குமிடையே நிகழும் இந்த இடைவினையாற்றல், நுகர்வோரை உற்பத்தியாளரின் வாடிக்கையாளர், வழங்குநர் என இருவழிகளில் செயல்பட வைக்கிறது. அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருளை வாங்குபவராகவும், உற்பத்தியாளருக்குப் பொருளை வழங்குபவராகவும் நுகர்வோர் செயல்படுகிறார். வாடிக்கையாளர்களின் நலன் அவர்கள் வாங்கும் மற்றும் நுகரும் பண்டங்களிலிருந்து எழுகிறது. உற்பத்தியாளர்கள் நலன் என்பது பண்டங்கள்

மற்றும் பணிகளை விற்கும்போது அவர்கள் பெறும் வருமானத்துடன் தொடர்புடையது. ஒரு பொருளாதாரத்தில் அனைவரும் நுகர்வோர் . ஆனால், அனைவரும் உற்பத்தியாளரோ அல்லது விற்பனை யாளர்களோ அல்லர் .


உற்பத்தி - பொருள் விளக்கம்

நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். இஃது, ஒவ்வொருவரின் தேவைக்கேற்பச் சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தைப்பெறுகிறது.

பயன்பாட்டின் வகைகள்

I. வடிவப் பயன்பாடு 

ஒரு விளைபொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. 

எடுத்துக்காட்டாக, விளைபொருளாகிய பருத்தியைக்கொண்டு ஆடைகள் உருவாக்கப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன. 


II. இடப்பயன்பாடு

ஒரு விளைபொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. எடுத்துக்காட்டாக, விளைபொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன. 


III. காலப் பயன்பாடு 

ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து சேமிப்புக் கிடங்கு வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது. 

எடுத்துக்காட்டாக, நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.


பொருளாதாரத்தில் உற்பத்தி என்னும் சொல், மாற்றத் தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது. அதாவது, பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும். பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம்.

இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது, பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.


உற்பத்தியின் வகைகள் 

உற்பத்தியில் மூன்று வகை உள்ளன. அவையாவன:

1. முதன்மை நிலை உற்பத்தி

2. இரண்டாம் நிலை உற்பத்தி

3. மூன்றாம் நிலை உற்பத்தி


1. முதன்மை நிலை உற்பத்தி 

இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம். முதன்மைநிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.

வேளாண்மை , காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத் தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை முதன்மை நிலை உற்பத்திக்கு உதாரணங்களாகும்.. 




2. இரண்டாம் நிலை உற்பத்தி

முதன்மை நிலையிலிருந்து கிடைக்கின்ற பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். இரண்டாம் நிலையில் தொழிற்சாலைக்கு முக்கியத்துவம்  அளிக்கப்படுவதால், இதனைத் தொழில் துறை உற்பத்தி எனவும் கூறுவர். நான்கு சக்கர வாகனங்கள் , ஆயத்த ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவை இரண்டாம் நிலை உற்பத்திக்கு  உதாரனங்களாகும்.


முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தி

* பருத்தி (முதன்மைத் துறை) - பருத்தித் ஆலை (இரண்டாம் நிலை உற்பத்தி) =ஆடை உற்பத்தி

* இரும்புத்தாது (முதன்மைத் துறை) - இரும்புத் ஆலை (இரண்டாம் நிலை உற்பத்தி) = பொருள் தயாரிப்பு



3. மூன்றாம் நிலை உற்பத்தி

சமூகத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஆற்றும் சேவைகள் மூன்றாம் நிலை உற்பத்தி எனலாம். இவைகள் கண்களுக்கு புலப்படாதவை . வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் சேவைத் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.


நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.


உற்பத்திக்கான காரணிகள்

உற்பத்திக் காரணிகளை உற்பத்தியின் உள்ளீடுகள் என அழைக்கலாம். அவைகள் வெளியீடு அல்லது உற்பத்திப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. 

உற்பத்திக் காரணிகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளன. அவை , 1. முதன்மை உற்பத்திக் காரணிகள் 2. பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் அல்லது நவீன உற்பத்திக் காரணிகள்

நிலம் மற்றும் உழைப்பு ஆகியவை முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும், மூலதனம் மற்றும் தொழிலமைப்பு ஆகியவை பெறப்பட்ட அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மூலதனம் என்பது முதலீடு என்றும், தொழிலமைப்பு என்பது உற்பத்தியில் நிலம், உழைப்பு மற்றும் மூலதனத்தை ஒருங்கிணைப்பதாகும். தொழில் அமைப்பு என்பது தொழில் முனைவோர் என்றும் அழைக்கப்படுகிறது.



1. நிலம்

'நிலம்' என்னும் உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும். நிலப்பரப்பு, நீர், காற்று, கனிமவளங்கள், காடுகள், ஆறுகள் ஏரிகள் கடல்கள், மலைகள், தட்பவெப்பநிலை, காலநிலை ஆகிய அனைத்தும் நிலம் என்ற சொல்லுக்குள் அடங்குகின்றன. ஆகவே, இவையாவும் மனிதனால் உருவாக்கப்படாத பொருள்கள் ஆகும்.


குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் வளங்களைப் பொருத்து, நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது. எடுத்துக்காட்டாக, வேளாண்மை செய்யும்போது, விளைநிலமாகவும் மனை விற்பனை செய்யும்போது, வீட்டு மனையாகவும் மாறுகிறது.


நிலத்தின் சிறப்பியல்புகள் 

1. நிலம் இயற்கையின் கொடை

மனிதன் மற்ற உற்பத்திக் காரணிகளைப் பெறுவதற்காக முயற்சி செய்கிறான். ஆனால் நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. மாறாக, அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே என தோன்றியதாகும்.

2. நிலத்தின் அளிப்பு நிலையானது

நிலத்தின் மொத்த பரப்பளவையும் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்த இயலாது. மனிதன் மேற்கொள்ளும் முயற்சியால் நிலத்தின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. நிலத்தின் செழிப்பை உயர்த்த முடியுமே தவிர, அதன் அளவை மாற்ற முடியாது. 

3. நிலம் அழிவில்லாதது

மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பண்டங்களும் அழிந்து போகக் கூடியவை. ஆனால் நிலம் அழிவில்லாதது. நிலத்தின் அளிப்பு என்றும் மாறாததாக, அழிவற்றதாக உள்ளது.

4. நிலம் ஓரு முதன்மை உற்பத்திக் காரணி

நாம் செய்கின்ற எந்த ஓர் உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படையாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை அளிக்க உதவுகிறது. வேளாண்மை மூலம், பயிர்களை விளைவிக்க உதவுகிறது. 

5. நிலம் இடம் பெயரக் கூடியதன்று

நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. உதாரணமாக, இந்தியப் பரப்பின் எந்த ஒரு பகுதியையும் வேறு நாட்டிற்கு இடம் பெயரச் செய்ய இயலாது. 

6. நிலம் ஆற்றல் வாய்ந்தது

மனிதனால், அழிக்க முடியாத ஆற்றல்கள் சிலவற்றை நிலம் கொண்டுள்ளது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் நிலத்தின் செழிப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அதனை முழுமையாக அழித்தல் இயலாது.

7. நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்

நிலம், அதனுடைய செழிப்புத் தன்மையின் அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதனால் தான் நிலத்தின் உற்பத்தித் திறன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை . ஒரிடத்தில் அதிக உற்பத்தி இருந்தால் மற்றொரு இடத்தில் உற்பத்தி குறைவாக இருக்கும். 

நிலம் என்பது இயற்கையின் நன்கொடை நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை பூஜ்யமாகும். இருப்பினும், உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே பற்றாக் குறையைப் பொறுத்தே சந்தையில் விலை பெறுகிறது.


2. உழைப்பு (Labour)

உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபபொருள் ஆகும். “ஒரு பணியை ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும் மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி, மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பாகும்” என ஆல்பிரட் மார்ஷல் உழைப்பை வரையறுத்துள்ளார்.



ஆடம்ஸ்மித் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட 'செல்வ இலக்கணம் ஆகும்.' நன்னெறி கருத்துக் உணர்வுக் கொள்கை," நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு" (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள்.


உழைப்பின் சிறப்பியல்புகள்

மற்ற உற்பத்திக் காரணிகளைக் காட்டிலும்  , உழைப்பு அதிகமாக  அழியக்கூடியதாக உள்ளது. அதாவது உழைப்பைச் சேமித்து வைக்க இயலாது. வேலையில்லாத தொழிலாளியின் உழைப்பானது . அவர் வேலை செய்யாத நாளில் இழக்கப்படுகிறது. உழைப்பைத் திரட்டவோ அடுத்த நாள் தள்ளிப்போடவோ இயலாது. அதனை ஒருமுறை இழந்தால் மீண்டும் திரும்பப் பெற இயலாது.

உற்பத்தியில் உழைப்பு என்பது ஓர் செயற்படு காரணியாகும். நிலமோ, மூலதனமோ உழைப்பும் இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலாது.

உழைப்பு ஒரே சீரானதல்ல. திறமையும் பயிற்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன.

உழைப்பை, உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது.

உழைப்பு இடம் பெயரக்கூடியது. குறைந்த ஊதியம் பெறுதைக் காட்டிலும் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக, மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள்.

தனியாக உழைக்கும் உழைப்பாளரிடம் பேரம்பேசும் ஆற்றல் குறைவு, தமக்கு வேலை அளித்தவரிடம் தம் உழைப்புக்கான கூலியை உயர்த்த வேண்டுமென்றோ பணிபுரியும் இடத்தை மேற்படுத்த வேண்டுமென்றோ போராட முறையாது. தொழிலாளிகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து தொழிற்சங்கம் அமைத்துப் போராடுவதன் மூலம் பேரம் பேசும் ஆற்றல் அதிகரிக்கிறது.


வேலை பகுப்பு முறை

வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது "நாடுகளின் செல்வமும்" அவற்றை உருவாக்கும் காரணிகளும், ஓர் ஆய்வு என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 

ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும். அதாவது, பல்வேறு கட்டங்களிலும் ஒரே தொழிலாளி ஈடுபடாமல், அவற்றைப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டப்பணியையும் ஒரு தொழிலாளி மேற்கொள்ள வேண்டும்.


எடுத்துக்காட்டு :

ஒரு தையல்காரர் ஒரு சட்டையை முழுமையாகத் தைத்து உருவாக்குவதில் தையல்காரர் மட்டுமே ஈடுபடுகிறார். ஆனால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் துணிகளை வெட்டுதல், உடல்பகுதி துணிகளைத் தைத்தல், கைப்பகுதிகளைத் தைத்தல், கழுத்துப் பகுதிகளைத் தைத்தல், பொத்தான் வைக்கும் பகுதிகளைத் தைத்தல் போன்ற ஒவ்வொரு பணிகளையும் தனித்தனி உழைப்பாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இறுதியாக, அனைத்துப் பகுதிகளையும் இணைத்துச் சிலர் தைக்கின்றனர். இந்நிலையில் அத்துணி முழுமையான ஒரு ஆடையாக உருவாகிறது.



வேலைப்பகுப்பு முறையின் நன்மைகள் 

• உழைப்பாளி ஒருவர், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால், அந்த வேலையில் திறமையுடையவராக ஆகிறார்.

• இம்முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கிறது. உதாரணம் கம்பியில்லாத் தந்தியின் கண்டுபிடிப்பு

• காலமும், மூலப்பொருட்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.


வேலைப்பகுப்பு முறையின் தீமைகள்

• தொழிலாளி, ஒரே வேலையைத் திரும்ப, திரும்ப செய்வதால், சுவையற்ற, களிப்பற்ற, தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது.

• ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால், அவன் குறுகிய தேர்ச்சியை மட்டுமே பெறுகிறான். இதனால் வேலை வாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.

• இம்முறை, கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கின்றது. ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மன நிறைவினைப் பெறுவதில்லை.

மாணவர்களைத் தம் பள்ளி /வீடு அருகிலுள்ள தனியார் தையல் கடையிலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தையும் பார்வையிடச் செய்தல்.

ஆசிரியரும் மாணவர்களும், தையல் கடையிலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் ஆடைகளை எந்த முறைகளைப் பின்பற்றி தைக்கிறார்கள் எனக் கலந்துரையாடல்.


3. மூலதனம் (Capital)

மூலதனம் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். எளிமையாகக் கூறினால், மூலதனம் என்பது பணத்தைக்  குறிக்கும். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம் என்றும் மூலதனத்தைக் கூறலாம். மார்ஷலின் கருத்துப்படி, "இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்."



மூலதனத்தின் வடிவங்கள்

1. பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம். (எ.கா) இயந்திரங்கள், கருவிகள், கட்டடங்கள் போன்றவை

2. பணமூலதனம் அல்லது பணவியல் வளங்கள் (எ.கா)வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவை.

3. மனித மூலதனம் அல்லது மனிதத் திறன் வளங்கள் (எ.கா) கல்வி, பயிற்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்


மூலதனத்தின் சிறப்பியல்புகள்

• மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி 

• மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது

• இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்

• மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது

• இதன் அளிப்பு நெகிழும் தன்மையுடையது

• மூலதனம் ஆக்கமுடையது

• மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்

• மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.


4. தொழில் முனைவோர் (அல்லது) தொழிலமைப்பு (Entrepreneur or Organisation)

தொழில் முனைவோர், எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். அக்காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில் முனைவோர் ஆவார்.

தொழில் முனைவோர், 'தொழில் அமைப்பாளர்' எனவும் அழைக்கப்படுகிறார். தற்காலத்தில், தொழில் முனைவோர், "சமுதாய மாற்றம் காணும் முகவர்" என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமாகிறார்.



தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள்

• இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்

• உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்

• புத்தாக்கத்தினை உருவாக்குதல்

• வெகுமதி செலவைத் தீர்மானித்தல்

• இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்

செயல்பாடு

மாணவர்களைத் தங்கள் பள்ளி/ வீட்டின் அருகிலுள்ள சிறந்த தொழில் முனைவோரைச் சந்தித்து அவர்களது தொழிலைப் பற்றிய விவரங்களை அறிந்து வரக் கூறுதல்

ஆசிரியரும், மாணவர்களும் அதைப் பற்றிக் கலந்துரையாடுதல்.



சுருக்கம் 

நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். 

பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும். 

பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம். 

உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன: முதன்மை நிலை உற்பத்தி, இரண்டாம் நிலை உற்பத்தி மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தி 

ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகளை நிலம், உழைப்பு, முதலீடு, மற்றும் தொழில் முனைவோர் என வகைப்படுத்தலாம். 

வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது "நாடுகளின் செல்வமும்" அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும், என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 

தொழில் முனைவோர், எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.


கலைச்சொற்கள்

உற்பத்தி – Manufacture - Production

பயன்பாடு – Usefulness - Utility

நிறுவனம் - Firm - Organization

தொழில் முனைவோர் - Businessman - Entrepreneur

காரணிகள் - Component - Factors

பகுப்பு - Dividing - Division

வளங்கள் – Assets - Resources


பார்வை நூல்கள்

H.L.Ahuja-Principles of Micro Economics 

K.P.M.Sundharam-Business Economics

K.K.Dewett-Modern Economic Theory



Tags : Term 1 Unit 1 | Economics | 7th Social Science முதல் பருவம் அலகு 1 | பொருளியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Economics : Term 1 Unit 1 : Production : Production Term 1 Unit 1 | Economics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு 1 : உற்பத்தி : உற்பத்தி - முதல் பருவம் அலகு 1 | பொருளியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு 1 : உற்பத்தி