Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

   Posted On :  03.08.2022 07:43 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 4

செல்வத்துள் எல்லாம் தலை

கல்வி


• உரைநடை - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே. சாமிநாதர்

• செய்யுள் - இதில் வெற்றி பெற – சுரதா

செய்யுள் - இடையீடு - சி. மணி

செய்யுள் - புறநானூறு - ஔவையார்

• துணைப்பாடம் - பாதுகாப்பாய் ஒரு பயணம் 

• இலக்கணம் - பா இயற்றப் பழகலாம்



இயல் 4

உரைநடை உலகம்

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

- உ.வே.சாமிநாதர் 


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க. 

அ) வசம்பு

ஆ) மணத்தக்காளியிலைச் சாறு 

இ) கடுக்காய்

ஈ) மாவிலைக்கரி

[விடை : இ) கடுக்காய்] 


2. ‘குழிமாற்று”எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் 

அ) இலக்கியம் 

ஆ) கணிதம்

இ) புவியியல்

ஈ) வேளாண்மை

[விடை : ஆ) கணிதம்]


குறுவினா


1. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?

தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள். 

கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள். 

• ‘தலைகீழ்ப்பாடம்' என்ற முறையும் உண்டு. 

• ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.


சிறுவினா 


1. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?

• மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு, செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன். 

• கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன்; மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன். 

• கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன். 

• எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். 

• தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன். 

• மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன். 

• மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல்; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன். 

• நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன். 


2. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. 

• முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர். 

• எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன. 

• பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

• இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை. 

• மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண்டாக்கின. 

• கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர். 

• எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.


நெடுவினா


1. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக. 

• பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது. 

• ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது. 

• பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை 'முறை வைப்பது' என்பர். 

• சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர். 

• எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர். 

• மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர். 

• தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர். 

• கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர். 

• ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாதுபுரியும் அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும்” - நன்னூல் 41 

• ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள். 

• இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.


கற்பவை கற்றபின்


1. பண்டைக்காலப் பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகளில், தற்காலத்தில் மேற்கொள்ளத்தக்கவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. 

மாணவன் : வணக்கம் ஐயா! அக்காலத்தில் கையெழுத்து எப்படி இருந்தது ஐயா? 

ஆசிரியர் : வணக்கம். எழுத்துகள் ஒன்றோடொன்று வரி கோணல் இல்லாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். நாமும் அவ்வாறே எழுத வேண்டும். புள்ளி, கால், கொம்பு முதலிய வரி எழுத்தின் உறுப்புகளை அன்றைய பெரியோர்கள் பழக்கினார்கள். நாம் இன்றைய பெரியோர்களிடமிருந்து அவற்றைப் பழக்கிக் கொள்ள வேண்டும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை முதலானவற்றை மனனம் செய்தார்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்தார்கள். 

மாணவன் : அப்படியா ஐயா! வேறு ஏதேனும் செய்தார்களா ஐயா? 

ஆசிரியர் : ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவர்களைத் தான் எழுதிய ஏடுகளின் எழுத்துகளின் மேலேயே எழுதி வரச் செய்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகளை நீயும் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். 

மாணவன் : நன்றி ஐயா! உறுதியாகச் செய்கிறேன் ஐயா!


2. ‘மனனம் செய்தல்' - இன்றைய கல்வி நிலையிலும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு. இது பற்றிய பத்துக் கருத்துகளை முன் வைக்க. 

• திருக்குறள், சான்றோர் சிந்தனைகள், அறநூல் தொடர்கள் போன்றவற்றை மனனம் செய்தால் தான் அறிவை வெளிக்கொணர முடியும். 

• அன்று கவனச் சிதறல்கள் இல்லை . இன்று கவனச்சிதறல்களின் ஊடேதான் கல்வி. எனவே, மனனம் செய்வதே நல்லது. 

• தேர்வு நேரங்களில் மனனப் பாடல்கள், சில கொள்கைகள் மனனம் செய்தாலொழிய நினைவுக்கு வராது. 

• மனனம் என்பது மனதை ஒருமைப்படுத்தும் ஒரு தியானம். மனம் என்பது நீண்டநாள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு ஞாபக சக்தி. சான்றோர் அறிவுரை, முந்தைய நிகழ்வுகள் எல்லாம் மனனம் என்னும் வகையில்தான் அடங்கும். 

• ஒரு ஆராய்ச்சியின் தொடர்ச்சி என்பது நேற்று என்ன செய்தோம் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதும் மனன சக்தியே. 

• புரியாத ஒரு பகுதியை மனனம் செய்தோம் என்றால் விளங்கும் காலத்தில்தானே விளங்கும். மனனம் இல்லை என்றால் மூளையின் செயல்பாடு குறையும் என்பது ஆராய்ச்சி கருத்து. 

எனவே, மனனத்தின் மீது கவனம் செலுத்துவது சிந்தனையாற்றலைச் சிறக்க வித்திடும்.



இயல் 4

செய்யுள்

இதில் வெற்றி பெற

- சுரதா


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. சுரதா நடத்திய கவிதை இதழ் 

அ) இலக்கியம் 

ஆ) காவியம்

இ) ஊர்வலம் 

ஈ) விண்மீன்

[விடை: ஆ) காவியம்]


2. “விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற 

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” - தொடர் தரும் முழுமையான பொருள் 

அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு 

ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு 

இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு 

ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

[ விடை : ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு ]

 

குறுவினா


1. வசனம், கவிதை வேறுபாடு தருக. 

வசனம் : 

எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

கவிதை : 

எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லை வைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.


நெடுவினா


1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க. 

கவிதை : 

• சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும். 

• அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும். 

• சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும். 

கவிதைக்குரிய உறுப்புகள் :

• எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும். 

• அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும். 

• சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.

• அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும். 

• அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும். 

சிறந்த கவிதை :

கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும். 

• தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும். 

• செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். 

• இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.


கற்பவை கற்றபின்


1. பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்ற உவமைச் சொற்களைத் தொகுக்க. இவை கருத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்துக் குழுவாக உரையாடுக. 

பாலு : ஓடறவனுக்கு ஒம்பதாம் இடத்தில் சுக்கிரன்னு சொல்கிறார்களே அதன் அர்த்தம் என்ன? 

வேலு : ஓடறவன்னா, ஓய்வில்லாமல் உழைக்கிறவன். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்னா - சுக்கிரதிசை என்பது மக்களுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான் என்று சொல்வார்கள். 

பாலு : நல்ல விளக்கம் இது. இன்னும் ஒரு சந்தேகம்? 

வேலு : என்ன? 

பாலு : காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை. இதன் பொருளென்ன? 

வேலு : பனைமரத்தில் பனம்பழம் பழுத்தவுடன் தானே விழும். ஆனால் காக்கா போய் பனை மரத்தில் உட்காரவும் அதனால் பனம்பழம் விழுந்ததாம் என்பது கருத்து. இதன் விளக்கம் குழந்தை ஒன்று மழையே மழையே வா என்று பாடியதும் மழை வந்துவிட்டதாம். மழை தானேதான் பொழியும் யாரும் வரவைக்க முடியாது. 

பாலு : கடைசியாக, ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சாண் ஏற முழம் சறுக்கும் என்பதன் விளக்கம் கூறு. 

வேலு : வரவு இரண்டணா என்றால் செலவு ஒரு அணாவாக இருக்க வேண்டும். அது இயல்பான வாழ்க்கை. வரவு இரண்டணா என்றால் செலவு நாலணாவாக இருந்தால், அச்செய்கைதான் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதாகும்.



இயல் 4

செய்யுள்

இடையீடு

- சி. மணி


பாடநூல் வினாக்கள்


குறுவினா


1. ‘இடையீடு’ - எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.


சிறுவினா


1. ‘மூன்றான காலம் போல் ஒன்று” எவை? ஏன்? விளக்குக. 

மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.

எண்ணம் : 

நம் மனதில் உள்ளவையே எண்ணம். 

வெளியீடு : 

நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு. 

கேட்டல் : 

• நாம் வெளியிட்டதை கருத்துவேறுபாடின்றி கேட்பது கேட்டல். 

• எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம். 

• எப்படி மூன்றுகாலமும் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை.


கற்பவை கற்றபின்


இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும். 

கர்ப்பிணித்தாய் 

வேலைக்குச் சென்றாள் 

கருவும் சுமந்தது சுமையை 

கூலி இல்லாமல்.

தலைவிதியால் தலைவி வயிற்றைக் கழுவ வேலைக்குச் செல்கிறாள். இது விதியின் செயல். பிறக்கும் முன்னே பேதை என்ன பாவம் செய்தது சுமை தாங்க? 

வறுமையின் பிடியில் வாடும் உயிர்களைப் படம் பிடித்தது போல, சொல்லால் ஓவியம் தீட்டி மனதை மெழுகாய் உருக வைக்கிறது இக்கவிதை.

ஏழையின் வீட்டினுள் 

காய்கிறது நிலவு 

கூரையும் இல்லை 

குளிர்ச்சியுமில்லை.

ஏழை பாவம் என்ன செய்வான். எண்சாண் உடம்பில் ஒருசாண் வயிற்றுக்கே பாடுபடுகிறான். ஒட்டிய வயிறும் கட்டிய மனைவியும் எட்டாத செல்வமும் இவனது உடைமைகள். எதிர்காலம் இவனுக்கு இருட்டு, நிகழ்காலம் என்னவோ வெறுமைதான். பகலில் பாடுபடும் இவனுக்கு ஓய்வெடுக்கும் இரவில் கூரைகூட இல்லை இவன் வீட்டில்.



இயல் 4

செய்யுள்

புறநானூறு

- ஒளவையார்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1.“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” - இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள் 

அ) போர்க்கருவி

ஆ) தச்சுக்கருவி 

இ) இசைக்கருவி

ஈ) வேளாண்கருவி

[விடை: இ) இசைக்கருவி]


குறுவினா 


1. ‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ - யார்க்கு?

• கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும். 

• கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.


சிறுவினா


1. வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக. 

திணை விளக்கம்:

பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். 

சான்று விளக்கம்: 

• வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடலில், பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!' என்ற வரி இடம் பெற்றுள்ளது. 

• அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை. 

• தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான்நெடுமான் அஞ்சி. 

• பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான்நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது. 

பொருத்தம்:

• தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.


கற்பவை கற்றபின்


1. கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக. 

i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு. 

• யாதானும் நாடாமால் ................... கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும் சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர். 

• சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து. 

• ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது. 

• ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் 

சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் - செய் விளைக்கும் 

வாய்க்கால் அனையர் தொடர்பு - நாலடியார் 

• நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள். 

• வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.



இயல் 4

துணைப்பாடம்

பாதுகாப்பாய் ஒரு பயணம்


பாடநூல் வினாக்கள்


நெடுவினா


1.‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ - இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை? 

இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும்  

• பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும். 

• தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும். 

• இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது. 

• கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். 

• சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும். 

• காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது. 

வாகன ஓட்டிகளின் அலட்சியம் : 

• அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும். 

விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :  

• வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு. 

• பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு. 

• தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது. 

• இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது. 

• தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது. 

• மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன. விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். 

விபத்துகளைத் தவிர்க்க : 

• பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும். 

• சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

• வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

• பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது. 

• பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும். 

• இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், ‘சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.


கற்பவை கற்றபின்


1. சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.

சாலை பாதுகாப்பில் கவனம்! 

தள்ளிப் போவதோ மரணம்!!


தலைக்குக் கவசம் அணி  

தலைமுறைக்கு அதையே பணி


இருபது மீட்டர் இடைவெளி! 

இருந்தால் நீதான் அறிவாளி!!


ஓட்டும்போது வேண்டும் நிதானம் 

வீட்டுக்கு வேண்டும் உன் வருமானம்!!


உன்னை நம்பி நாற்பது! 

ஓட்ட வேண்டும் நாற்பதில்!! 


2. எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு. 

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா! 

சோமு : நல்லா இருக்குடா, பல்சரா? 

ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில போய் வருவோமா? 

சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா? 

பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள். 

ராமு : என்னன்னு சொல்லு. 

பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். 

ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா. 

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்) 

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல. 

ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட. 

சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும். 

பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு. 

மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!



இயல் 4

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்


இலக்கணத் தேர்ச்சி கொள் 

1. வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள். 

அ) அன்பே தகளியாய் (ஆர்வமாய் / தகளியாய்) 

ஆ) வான்மழை தூறலில் (தூறலில் / பொழிந்திடின்) 

இ) கண்ணிரண்டும் இல்லார் (இலாதார் / இல்லார்) 

ஈ) வெண்ணிலவு காய்கிறது (காய்கிறது / ஒளிர்கிறது) 

உ) வெய்யோன் காய்ந்திட (காய்ந்திட / ஒளிர்ந்திட) 


2. மூன்றாவது சீர் அமைத்து எழுதுக. 

அ) கல்வி கரையில கற்பவர் 

ஆ) கல்லாரே ஆயினும் கேட்க (கற்க) 

இ) நல்லவை செய்யின் நலமே 

ஈ) அவமதிப்பும் ஆன்ற பொருள் 

உ) உண்ணாது நோற்பார் சான்றோர் 


3. பொருத்துக

அ) மாச்சீர் - 1. கருவிளம், கூவிளம் 

ஆ) காய்ச்சீர் - 2. நாள், மலர் 

இ) விளச்சீர் - 3. தேமாங்காய், புளிமாங்காய்

ஈ) ஓரசைச்சீர் - 4. தேமா, புளிமா 

அ) 1, 2, 4, 3 

ஆ) 4, 3, 1, 2 

இ) 2, 3, 1, 4 

ஈ) 3, 4, 2, 1 

[ விடை: ஆ) 4, 3, 1, 2 ]


4. கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிகை வெண்பா எழுத முயற்சி செய்யவும். 

கடல், வாள், மழை, தேன், மரம். 

கடல் : அலையென எழுந்து ஒலி யெழுப்பி 

ஆர்ப்பரிக்கும் பெருங் கடல். 

வாள் : ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த 

பளிச்சிடும் வேந்தன் வாள். 

மழை : வானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும் 

தேன்சுவை அன்ன தமிழ் 

தேன் : மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய 

அமுத மெனும் தேன். 

மரம் : இயற்கைத் தாய் உவந்து அளித்த 

மறக்க வெண்ணா மரம்.


5. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை? 

இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும். 


6. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன? 

• வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும். 

• வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.


கற்பவை கற்றபின் 


1. கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக. 

அ) என்றும் விரும்பியே கல்.

உலகில் உத்தமனாய் வாழ கல்வி

எத்திக்கும் உன் புகழை நாட்ட

ஏற்றமிகு கல்வியை கசடற கற்று

என்றும் விரும்பியே கல்

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும். 

உயிரை விட மேலானது ஒழுக்கம் 

தயிரை விட மென்மையானது ஒழுக்கம் 

பழகும் முறை அறிந்து வாழ்ந்தால் 

ஒழுக்கமே உயர்வு தரும். 

இ) இன்னல் விலகி விடும்.

அன்பினால் அறம் பல செய்து

பண்பினால் பல புகழ் எய்து

உண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்

இன்னல் விலகி விடும்.

ஈ) உழவின்றி உய்யா உலகு. 

கோலும் குடையும் மன்னனுக்கு அவசியம் 

எழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம் 

உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம் 

உழவின்றி உய்யா உலகு 

உ) மொழியின் வழிய தறிவு. 

வள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று 

கம்பனின் காவியத்தை கசடறக் கற்று 

இளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து

மொழியின் வழிய தறிவு 


2. 'இயற்கை' என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.

தென்றல் வீச பூமணம் பரவும் 

குன்றம் குளிர குளிரில் வாடும் 

மயிலும் ஆட மழைமேகம் சொரியும் 

மண்ணு லகைக் காண்.


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக

1. "காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள்

அ) போர்க்கருவி 

ஆ) தச்சுக்கருவி 

இ) இசைக்கருவி 

ஈ) வேளாண் கருவி 


2. சுரதா நடத்திய கவிதை இதழ் 

அ) இலக்கியம் 

ஆ) காவியம்

இ) ஊர்வலம்

ஈ) விண்மீன் 


3. "விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு" - இத்தொடர் தரும் முழுமையான பொருள் : 

அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு 

ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு 

இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு

ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு 


4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) வசம்பு 

ஆ) மணத்தக்காளியிலைச் சாறு 

இ) கடுக்காய் 

ஈ) மாவிலைக்கரி


5. 'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

அ) இலக்கியம் 

ஆ) கணிதம் 

இ) புவியியல்

 ஈ) வேளாண்மை 


குறுவினா 


1. இடையீடு - எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது? 

2. வசனம், கவிதை வேறுபாடு தருக. 

3. 'எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்' - யார்க்கு? 

4. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை? 


சிறுவினா


1. "மூன்றான காலம் போல் ஒன்று" - எவை? ஏன்? விளக்குக. 

2. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்? 

3. மணலில் எழுதியது முதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க. 

4. வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக. 



நெடுவினா 


1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

2. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக. 

3. 'சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு' - இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக்கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், "குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டார். அவர் "அஃது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். 'நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்' என்றார் பரிதிமாற்கலைஞர். 'தெரியாது' என்று சொன்னவரை, "எப்படித் தேர்வு செய்யலாம்?" என்று பிறர் கேட்டபோது, 'அஃது' என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், 'எனக்கு' என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், 'தெரியாது' என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள். 

பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு 'தனித்தமிழ்' மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் என நடைமுறைப்படுத்தினார். 'சுவாமி வேதாசலம்' எனும் தன்பெயரை 'மறைமலையடிகள்' என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Visdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும். 

வினாக்கள்: 

1. ஒரு நேர்காணலில் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக என்று கேட்டதற்குப் பதிலாக மறைமலை அடிகள் கூறியது என்ன? 

2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன? 

3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?

4. இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக. 

5. இப்பாடப்பகுதியின் இடம்பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக. 


விடைகள்: 

1. அஃது எனக்குத் தெரியாது

2. மறைமலை அடிகள் 

3. ஞானசாகரம் 

4. வரலாறும் காலமும் 

5. அறிவுக்கடல்



தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. 

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.

நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது. 

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.

எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. 

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 

ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 

வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. 

ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது. 

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். 

இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.


தமிழாக்கம் தருக.

The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected; There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers, in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits 

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது. மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது. 


பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக. 

யானைக்கும் அடிசறுக்கும், தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, எறும்பு ஊரக் கல்லும் தேயும், ஊழி பெயரினும் தாம் பெயரார். 

1. யானைக்கும் அடிசறுக்கும் 

தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று. 


2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். 

வாழ்க்கையில் நாம் பிறருக்குத் தீமை செய்து வந்தோம் என்றால் நமக்குத் தீமையே நடக்கும் 

இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள். 


3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 

நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது. 


4. எறும்பு ஊரக் கல்லும் தேயும் 

வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.


5. ஊழி பெயரினும் தாம் பெயரார்

நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள். 


கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும்.

தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக. 

மலர்ந்தவை - 162

தொடுத்தவை – 162 / 3 = 54

பத்தியின் சுருக்கம்:

இன்றைய சூழலில், ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவில் மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும்  சமச்சீர் உணவு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது. உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்குக் காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற் பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.


மொழியோடு விளையாடு


மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி 


1. போக்கு வரத்து 

2. ஏடு

3. அன்பு

4. வெற்றி

5. பா - வடிவம் 

6. சுதேச மித்திரன்

7. பாடாண் திணை

8. நடைமேடை

9. ஒளவை 

10. கவி

11. கவிதை

12. வேங்கை

13. துறைமுகம் 

14. முகம்

15. துறை

16. துணி 

17. சேர்க்கை

18. யாழ்

19. பாடு 

20. குதிரை 

21. மேதை

22. பாடை

23. வைகை

24. வைகறை

25. துருவம் 

26. ரதி

27. ஓலை

28. மனனம் 

29. பயணி

30. காவலர்

31. ஓதற் பிரிவு

32. ரவி

33. தேடு

34. பாடு

35. கைது

36. விதை

37. முறை

38. தணி

39. கரு

40. பணை

41. ஓர்


எண்ணங்களை எழுத்தாக்குக.


கல்வி ஒருவரை அறிவினால் மேதையாக்கும் 

கல்வி கற்றால் நீதியரசர ஆகலாம். 

கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம் 

கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம் 

கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும். 

கல்வியே ஒருவர்க்குப் பெருமை சேர்க்கும் 

கல்வி கற்றவரையே உலகம் போற்றும்.


சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

எ.கா. பலகை 

பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர். 

பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின. 

1. தாமரை 

தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன. 

தாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது. 

2. கோவில் 

கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது. 

அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும். 

3. வெங்காயம் 

வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது. 

வெம்மையால் உண்டான காயம்.

4. தலைமை 

பள்ளி ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.

தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது. 


செய்து கற்போம்

அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அட்டவணைப்படுத்துக.



நிற்க அதற்குத் தக


கீழ்க்கண்ட இடங்களில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?

கூட்டம் நிரம்பிய பேருந்தில், நீங்கள் அமர்ந்திருக்க. உங்கள் அருகில் பெரியவர் ஒருவர் நிற்கிறார். - இருக்கையை அவருக்குக் கொடுப்பேன். 

பள்ளியில் உங்களுடைய தோழர் பசியுடன் அமர்ந்திருக்கிறார் - இருப்பதை பகிர்ந்து உண்பேன். 

கடற்கரையில் பெற்றோரிடமிருந்து பிரிந்து வழிதவறிய சிறுமி கண்ணீர்விட்டுக் கலங்குகிறார் - சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பேன்.


படிப்போம் பயன்படுத்துவோம் (வானூர்தி நிலையம்) 

Arrival - வருகை

Passport - கடவுச்சீட்டு 

Departure - புறப்பாடு

Visa - நுழைவு இசைவு 

Conveyor Belt - ஊர்திப்பட்டை

Domestic Flight - உள்நாட்டு வானூர்தி 

Take Off - வானூர்தி கிளம்புதல்


அறிவை விரிவு செய்

• நீங்களும் கவிபாடலாம் - கி.வா. ஜகந்நாதன் 

• துறைமுகம் – சுரதா 

• இதுவரை - சி. மணி 

• படைப்புக்கலை - மு. சுதந்திரமுத்து 

• கவிஞராக - அ.கி. பரந்தாமனார்


Tags : Chapter 4 | 12th Tamil இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai : Questions and Answers Chapter 4 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை