தாவரவியல் - பாக்டீரியங்களின் இனப்பெருக்கம் | 11th Botany : Chapter 1 : Living World
பாக்டீரியங்களின்
இனப்பெருக்கம்
பாக்டீரியங்களில் பாலிலா இனப்பெருக்கம் இரு பிளவுறுதல்.
கொனிடியங்கள் தோற்றுவித்தல், அகவித்து உருவாதல் (படம் 1.11) போன்ற முறைகளில் நடைபெறுகிறது.
பொதுவாக அனைத்து பாக்டீரியங்களும் இரு பிளவுறுதல் வழியில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
இரு
பிளவுறுதல் (Binary fission)
சாதகமான சூழ்நிலையில் பாக்டீரிய செல் இரண்டு சேய் செல்களாகப்
பிளவுறுகிறது. உட்கரு ஒத்த பொருள் முதலில் பிளவுற்று, செல்சுவரின் இடையில் ஒரு இறுக்கம்
தோன்றுவதன் மூலம் இரண்டு செல்களாகப் பிரிகின்றன.
அகவித்துகள்
(Endospores)
பாக்டீரியங்கள் சாதகமற்ற சூழலில் அகவித்துகளைத் தோற்றுவிக்கின்றன.
பேசில்லஸ் மெகாதீரியம், பேசில்லஸ் ஸ்பெரிகஸ்,
கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி போன்ற பாக்டீரிங்களில் அகவித்துக்கள் தோன்றுகின்றன.
இவைதடித்த சுவருடைய ஓய்வுநிலைவித்துகளாகும். சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து பாக்டீரியங்களாக
உருவாகின்றன.
பாலினப்பெருக்கம்
பாக்டீரியங்களில் பாலினப் பெருக்கத்தின் போது முறையான
கேமீட்கள் உருவாதல், கேமீட்களின் இணைவு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. இருப்பினும்
பாக்டீரியங்களில் மரபணு மறுகூட்டிணைவு கீழ்க்கண்ட மூன்று முறைகளில் நடைபெறுகிறது. அவையாவன
1. இணைவு (Conjugation)
2. மரபணு மாற்றம் (Transformation)
3. மரபணு ஊடுகடத்தல் (Transduction)
1. இணைவு
1946 ஆம் ஆண்டு J. லெடர்பர்க், எட்வர்டு L.டாட்டம்
ஆகியோர் பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கினர்.
இந்த மரபணு மாற்ற முறையில், கொடுநர் செல் நுண் சிலும்புகளின் மூலமாக ஏற்பி செல்லுடன்
இணைகிறது. நுண் சிலும்புகள் நன்கு வளர்ந்து இணைவுக் குழலைத் தோற்றுவிக்கிறது. F+
(வளமான காரணி) உடைய கொடுநர் செல்லின் பிளாஸ்மிட் இரட்டிப்படையும் போது பிளாஸ்மிட் இழையில்
ஒன்று மட்டும் ஏற்பி செல்லிற்கு இடம் மாறுகிறது. பின்னர் இந்த இழைக்கு இணையான மற்றொரு
DNA இழையை ஏற்பி செல் உற்பத்தி செய்து கொள்கிறது
(படம் 1.12)
2. மரபணு மாற்றம்
ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியத்திற்கு
DNA இடமாற்றம் செய்யப்படுவது மரபணு மாற்றம்
எனப்படுகிறது (படம் 1.13). 1928 ஆம் ஆண்டு பிரட்ரிக் கிரிஃபித் எனும் பாக்டீரிய வல்லுநர்
டிப்ளோகாக்கஸ் நிமோனியே என்ற பாக்டீரியத்தைப்
பயன்படுத்தி மரபணு மாற்றத்தை விளக்கினார். இந்த பாக்டீரியம் இரண்டு ரகங்களில் உள்ளது.
வீரியம் உள்ள பாக்டீரிய ரகம் வளர் ஊடகத்தில் மென்மையான காலனியை (S வகை) தோற்றுவிக்கிறது.
மற்றொரு ரகம் சொரசொரப்பான காலனியை (R வகை) தோற்றுவித்து வீரியமற்றதாக உள்ளது. S-வகை
பாக்டீரிய செல்களை சுண்டெலியின் உடலுக்குள் செலுத்தியவுடன் அது இறந்துவிட்டது. R-வகை
பாக்டீரிய செல்களை சுண்டெலியின் உடலில் செலுத்தியபோது அது இறக்கவில்லை. வெப்பத்தால்
கொல்லப்பட்ட S-வகை செல்களை சுண்டடெலியின் உடலில் செலுத்திய போது அது இறக்கவில்லை. வெப்பத்தினால்
கொல்லப்பட்ட S-வகை பாக்டீரியங்களையும், உயிருள்ள R-வகை பாக்டீரியங்களையும் கலந்து சுண்டெலியின்
உடலினுள் செலுத்தியபோது சுண்டெலி இறந்துவிட்டது. உயிருள்ள R-வகை டிப்ளோகாக்கஸ் பாக்டீரியங்கள்
வீரியமுள்ள S-வகை செல்களாக மாறியுள்ளன. அதாவது வெப்பத்தினால் கொல்லப்பட்ட S-வகை பாக்டீரிய
செல்களின் மரபுப் பொருள், வீரியமற்ற R-வகை செல்களை, வீரியமுள்ள S வகை செல்களாக மாற்றிவிட்டது.
இவ்வாறு ஒருவகை பாக்டீரியத்தின் பண்பை வேறொரு உயிரினத்தின் DNA-வை அதனுள் செலுத்தி
மாற்றுவது மரபணு மாற்றம் என்று அறியப்படுகிறது.
3. மரபணு ஊடுகடத்தல்
இம்முறையை 1952 ஆம் ஆண்டு ஜிண்டர் மற்றும் லெடர்பர்க்
இருவரும் முதன் முதலில் சால்மோனெல்லா டைஃபிமியுரம் பாக்டீரியாவில் கண்டறிந்தனர். இம்முறையில்
பாக்டீரியஃபாஜ் மூலமாக DNA இடமாற்றம் செய்யப்படுகிறது
(படம் 1.14).
மரபணு ஊடுகடத்தல்
இரண்டு வகைப்படும்:
(i) பொதுவான மரபணு ஊடுகடத்தல் (ii) சிறப்புவாய்ந்த
அல்லது வரையறுக்கப்பட்ட மரபணு ஊடுகடத்தல் .
(i) பொதுவான மரபணு
ஊடுகடத்தல்
இம்முறையில் பாக்டீரிய DNA-வின் எந்த ஒரு பகுதியும் ஃபாஜ் வழியாகக் கடத்தப்படுகிறது.
(ii) சிறப்புவாய்ந்த
மரபணு ஊடுகடத்தல்
பாக்டீரிய DNA-வின்
ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாக்டீரியஃபாஜ் வழியாகக் கடத்தப்படுவது சிறப்புவாய்ந்த
மரபணு ஊடுகடத்தல் என அழைக்கப்படுகிறது.