உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population
உயிரற்ற காரணிகளுக்கான துலங்கல்கள்
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியல் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும் (படம் 11.9).
* ஒழுங்கமைவு (Regulate) சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன. அச்செயல்பாடுகள் வழியாக, உடலின் வெப்பநிலை, அயனிகள் / ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள் மற்றும் முதுகுநாணற்ற சிற்றினங்கள் இவ்வகை நெறிப்படுத்துதலை மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்கின்றன.
* ஒத்தமைவு (Conform) : பெரும்பாலான விலங்குகளால் உள் சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச் சூழல் வெப்பநிலைக் கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது. இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
* வலசைபோதல் (Migration) : ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு நிலவும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து புதிய வாழத்தகுந்த பகுதிக்குச் செல்கின்றன. அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன. சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர்பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசைபோதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
செயலற்ற நிலை (Suspend) : சிலசமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில், சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும் மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது ‘வளர்ச்சித் தடை நிலை (diapaulse) எனப்படும்.