புவியியல் - தமிழ்நாட்டின் மண் வகைகள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
தமிழ்நாட்டின் மண் வகைகள்
தமிழ்நாட்டில்
காணப்படும் மண்வகைகளை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவை 1. வண்டல் மண் 2. கரிசல்
மண் 3. செம்மண் 4. சரளை மண்
மற்றும் 5. உவர் மண்.
வண்டல்
மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன.
தமிழ்நாட்டின்
ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி
மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது. சில உள்
மாவட்டங்களின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது.
தீப்பாறைகள்
சிதைவடைவதன்மூலம் கரிசல் மண் உருவாகிறது. இது ரீகர் மண் (Regur
soil) என்றும்
அழைக்கப்படுகிறது. இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும்
அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.
தமிழ்நாட்டின்
மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது. இவை
குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இம்மண் சிவகங்கை
மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது.
சரளை
மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இவை
ஒரு வளமற்ற மண்ணாகும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின்
சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண்
காணப்படுகின்றது.
தமிழ்நாட்டின்
சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது. வேதாரண்யப்
பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது. டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட சுனாமி
அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.
இதனால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.