தென்னிந்தியா - வரலாறு - ஸ்ரீராமானுஜர் (1017 - 1138) | 11th History : Chapter 9 : Cultural Development in South India
ஸ்ரீராமானுஜர் (1017 - 1138)
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஸ்ரீராமானுஜர் காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட யாதவபிரகாசரிடம் தத்துவப் பயிற்சி பெற்றார். தனது குருவின் கருத்துக்களை ஏற்கமறுத்த இளம் ராமானுஜர் யமுனாச்சாரியாரின் திருரங்கத் தத்துவப் பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். ராமானுஜரை ஒருமுறை பார்த்த யமுனாச்சாரியார் அவரை திருவரங்கத்திற்கு வரவேற்றார். ராமானுஜர் திருவரங்கத்திற்குச் சென்ற சில நாட்களில் யமுனாச்சாரியார் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து ராமானுஜரே திருவரங்கம்மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். கோவிலையும் மடத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த அவர் பல பிரிவினரை ஒருங்கிணைத்தார். கோவில் சடங்குகளை மாற்றியமைத்தார். ராமானுஜர் ஓர் சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி, திட்டமிட்டு செயல்பட்டார். அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார். வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார். அத்வைதத்திற்கு மாற்றாக அவர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் சிந்தனையாளர்களிடம் செல்வாக்குப் பெற்று தனிமரபாக வளர்ச்சி பெற்றது. அவருடைய இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப்பின் அவரைப் பின்பற்றுவோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் தலைமையில் இரு பிரிவுகள் தோன்றின. ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடமும் பக்திக் கோட்பாட்டைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டார். கோவில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு அதன் மூலம் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒருமுறையாவது கோவில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார். தங்கள் மதநம்பிக்கைகளுக்கும் இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இராமானுஜர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என நம்பப்படுகிறது.