Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள்

கி.ராஜநாராயணன் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru

   Posted On :  21.07.2022 09:17 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு

விரிவானம்

கோபல்லபுரத்து மக்கள்

- கி.ராஜநாராயணன்



நுழையும்முன்

கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் மனசுக்குள் எப்பவும் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் கண் முன் காட்சியாகிறது.


சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அதிகாலை நேரத்தில் ஒரு பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சி குடிக்க உட்காரப் போகும் வேளை, யாரோ ஒரு சன்யாசியைக் கூட்டிக்கொண்டு அன்னமய்யா தூரத்தில் வருவது தெரிந்தது. வாயிலிருந்த பல்க்குச்சியை எடுத்துத் துப்பி விட்டு சுப்பையா கேட்டான், "யாரோ ஒரு சாமியாரை இழுத்துட்டு வாரான்?"

"வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்" என்றார் கொத்தாளி.

அந்தப் புஞ்சை ரோட்டோரத்தில் இருந்ததால் இப்படி தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யாவின் கூட வந்தது சன்யாசியோ பரதேசியோ இல்லை. அந்த ஆள் நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக, மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். தாடியும் அழுக்கு ஆடையும் அந்தத் தள்ளாட்டமும் ஒரு பார்வைக்கு வயோதிகனாகவும் சாமியாரைப் போலவும் தோணவைத்தது. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த அன்னமய்யாவின் கண்ணில் இதுபட்டது. கிட்டே போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி, புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் போய்ப் பார்த்தபோது, பசியால் வாடிப் போய் விட்ட அந்த முகத்தில் தெரிந்த கண்களின் தீட்சண்யம், கவனிக்கக் கூடியதாய் இருந்தது. அன்னமய்யாவைப் பார்த்ததும் அவன் ஒரு சிறு புன்னகை காட்டினான். பேசுவதற்கு இஷ்டப்படாதது போலிருந்தது அவன் இருப்பு. அந்த ரோடு வழியாக எத்தனையோ வகை தேசாந்திரிகள் வகைவகையான மொழியில் புரியாதபடி பேசிக்கொண்டு நடந்து வருவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் லாட சன்யாசிகள். அவர்கள் வேட்டிகட்டிக் கொண்டிருப்பதே ஒரு தினுசு! இடுப்பை மறைத்த வேட்டி அதன் ரண்டு சொருகு நுனிகளும் குறுக்க மறுக்க மார்பின் மேலேறிப் பிடரியில் வந்து முடிச்சாகி இருக்கும். வேட்டியே, வேட்டியும் மேல் வேட்டியுமாக அவர்கள் அப்படி அதை உடுத்தியிருப்பதைப் பார்க்கும் கோபல்லபுரத்துக் குழந்தைகள், அதேபோல் தங்கள் தகப்பனார்களின் மேல்த் துண்டுகளை எடுத்து உடுத்திக்கொண்டு லாட சன்யாசி விளையாட்டு விளையாடியது அன்னமய்யாவுக்கு ஞாபகம் வந்தது.

தன்னைப் பார்த்து ஒரு நேசப் புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனிடம் போய் கிட்டே நின்று பார்த்துக் கொண்டே இருந்தான் அன்னமய்யா வாய் திறக்காமல்.

கொஞ்சம் அலுப்புத் தீர்ந்தவுடன், "தம்பி, கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா?" என்று தமிழில் அவன் பேசியது இவனுக்கு ரொம்ப ஆச்சரியமாக சந்தோஷமாக இருந்தது. "இந்தா பக்கத்துல அருகெடுத்துக் கிட்டிருக்கிறவங்ககிட்ட நீச்சுத் தண்ணி இருக்கும்; வாங்கிட்டு வரட்டுமா?"

"நீச்சுத் தண்ணி"? என்று தனக்குள் அந்த வாலிபன் சொல்லிப் பார்த்துக் கொள்வது தெரிந்தது. கொஞ்சம் கை அமர்த்திவிட்டு, நாமே அங்கே போய்விடலாமே என்பது போல் அங்கே அவர்களைப் பார்த்தான். எழுந்திருப்பதுக்கு ஒத்தாசனையாக நீட்டிய கையை நன்றியுடன் மறுத்துவிட்டு அவனே சிரமப்பட்டு எழுந்து நின்றான்.

"எங்கிருந்து வர்ரீங்க?"

கேள்விக்குப் பதில், அலுப்புடன் கூடிய ஒரு இதழ் விரியாத சிரிப்பே பதிலாக வந்தது.

சொல்லுகிறேன் என்றும் இப்பவே அது தேவைதானா என்றும் இப்ப அதெல்லாம் எதுக்கு, கொஞ்சம் பொறு என்பது போலெல்லாம் இருந்தது அந்தச் சிரிப்பு.

அன்னமய்யா தனது தோளைப் பிடித்துக் கொண்டு நடந்து வரும்படியாகக் கேட்ட போதும் அந்த ஆள் அதே சிரிப்போடு மறுத்துவிட்டு அவனோடு மெதுவாக நடந்து வந்தான்.

ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அந்தக் கறுப்புக் கலயங்கள் அந்தக் கரிசல் மண்தரையில் பாதி புதைக்கப்பட்டிருந்தன. தேங்காய்ப் பருமனுள்ள கற்களால் அந்தக் கலயங்களின் வாய் மூடப்பட்டிருந்தது. காகங்கள் வந்து கஞ்சிக் கலயங்களை உருட்டிவிடாமலும் அலகை நுழைத்து அசிங்கப்படுத்திவிடாமலும் இருக்க இந்த ஏற்பாடு என்று அந்த மனிதன் பிறகு கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அன்னமய்யா ஒரு கலயத்தின்மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றினான். ஒரு சிரட்டையில் காணத்துவையலும் ஊறுகாயும் இருந்தது. சிரட்டையே அந்தக் கலயத்தின் வாய் மூடியாகவும் அமைந்திருந்தது. இன்னொரு கலயத்தின் மேலிருந்த கல்லை எடுத்துப் பார்த்தபோது அதேபோல் இருந்த சிரட்டையில் மோர்மிளகாய் மட்டுமே இருந்தது. அதை இந்தச் சிரட்டையில் தட்டினான். சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தினான். அந்தக் கலயத்தைப் பதனமாகத் தனது வலது பாதத்தின்மேல் வைத்து, சிரட்டையில் நீத்துபாகத்தை வடித்து அவனிடம் நீட்டினான். கையில் வாங்கியதும் சப்பிக்குடிப்பதா அண்ணாந்து குடிப்பதா என்கிற தயக்கம் வந்தபோது "சும்மா கடிச்சிக் குடிங்க" என்றான். உறிஞ்சும்போது கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சொகத்தை முகம் சொல்லியது. உக்காருங்க. உக்காந்து குடிங்க என்று உபசரித்தான்.

தெரிந்து தெளிவோம்

கரிசல் இலக்கியம்

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன். அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக....

உட்கார்ந்த பிறகு, ரண்டாவது சிரட்டைக்குக் கலயத்தைப் பாதத்தின் பேரிலேயே வைத்துச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் அதை வார்த்துக் கொடுத்தான். அதை உறிஞ்சிக் குடிக்கும் போது "ஹ!" என்கிற அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது.

கலயத்திலிருந்து சிரட்டை வழியாக மடக்கு மடக்காய் அவனுள் ஜீவ ஊற்று பொங்கி நிறைந்து வந்தது.

சிரட்டையைக் கையளித்துவிட்டு அப்படியே அந்த வேப்ப மரத்து நிழலே சொர்க்கமாய்ப் படுத்ததும் அவனைத் தென்னல்க் காற்றே தூக்கமாக வந்து அயரச் செய்தது.

வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதைவிட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.

அந்த வரத்துக்காரனின் சிறு தூக்கம் முடியும்வரை அன்னமய்யா காத்திருந்தான். அந்தப் பக்கத்தில் தொகுதி தொகுதியாக அருகு எடுத்துக் கொண்டிருந்தார்கள். கரிசல் காட்டுச் சம்சாரிகளுக்கு அருகு ஒரு அரக்கன். வெட்ட வெட்டத் தலைமுளைப்பது போல அவர்களோடு அது விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. கள்ளிக்கு ஒரு வெள்ள பூச்சியைக் கண்டு பிடித்த வெள்ளைக்காரன், அருகை அழிக்க ஒரு மருந்து கண்டுபிடிக்கல்லையே என்கிற கோபம் சம்சாரிகளுக்கு. "அருகு எடுக்கிறதுலேயே நம்ம வாழ்நாள் முக்காவாசி போயிரும் போல" சடைத்துப் புளித்துப் போவார் அன்னமய்யாவின் பாட்டனார்.

அன்னமய்யாவின் புஞ்சைக்குப் பக்கத்துலதான் சுப்பையாவின் புஞ்சையும். அங்கே போனால் சுப்பையாவும் இருப்பான். இவர் எழுந்திரிச்சதும் அங்கே கூட்டிக் கொண்டு போவோம் என்று நினைத்தபோது அந்த ஆளிடம் ஒரு அலுக்கம் தெரிந்தது. சரி; முழிப்பு வந்தாச்சி என்று நினைத்துப் பார்த்தபோது அந்த ஆளிடமிருந்து நன்றி கலந்த புன்னகை வெளிப்பட்டது.

எழுந்திருக்க மனசில்லாமல் படுத்துக்கொண்டே பேசினான் அந்த ஆள். உங்கள் ஊர் பெயரென்ன? என்று கேட்டான். தெரிந்து கொண்ட போது அந்தப் பெயர் அவனுக்கு விநோதமாகத் தெரிந்திருக்க வேண்டும் போலப் பட்டது.

"எங்கருந்து வர்ரீங்க. எங்க போகனும்?"

"ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்; எங்கதெ பெரிசு!" என்றான். தம்பீ ஓம் பெயரென்ன?"

"அன்னமய்யா"

வந்தவன் அந்தப் பேரை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது! 'எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்...

பதிலுக்குப் பெயர் என்ன என்று கேட்க வேண்டும் போல் தோன்றியதால் அன்னமய்யா கேட்டான். கொஞ்சம் தயங்கியபின் என்னோட சொந்தப் பெயர் பரமேஸ்வரன். அதை இப்போதைக்கு மறந்துரு. இப்பொப் பேர் மணி. மணின்னே கூப்பிடு. நா எங்கிருந்து வர்றேன்ங்கிறதெல்லாம் சாவகாசமாச் சொல்றேன் என்று சொல்லிவிட்டு, "இப்போ நாம் எங்க போகணும் சொல்லு" என்று கேட்டான். "அந்தோ ... அங்கெ," என்று கை காட்டினான். "அங்கெ என்னொட பிரண்டு - சுப்பையா ன்னு பேரு - காலேஜ்ல படிக்கான். லீவுக்கு வந்திருக்கான். அவங்க பிஞ்சையிலேயும் அருகெடுக்கிறாங்க, அங்க போவமா?"

"ஓ! போவமே"

அன்னமய்யாவையும் புது ஆளையும் அவர்கள் மந்தகாசத்துடன் வரவேற்றார்கள். புதாளை அவர்கள் தங்களோடு உண்ணும்படி உபசரித்தார்கள். மணி அவர்களோடு வட்டத்தில் சேர்ந்து உட்கார்ந்தார். கையைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அவர்களில் யாருமே சாப்பிடுவதற்கு முன்னால் கையைக் கழுவிக் கொள்வதாகத் தெரியவில்லை! அவர்களுக்கானது நமக்கு என்று அவர் கையை நீட்டினார். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை அவருடைய இடது கையில் வைத்தார்கள். இடது கையிலா என்று தயங்கினார். ஆம் இடது கையில்த் தான் என்று தெரிந்தது. அன்னமய்யாவும் சுப்பையாவும் அப்படித்தான் பெற்றுக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அவரும் இடதுகைச் சோற்றில் ஒரு சிறூ பள்ளம் செய்து கொண்டார். அந்தப் பள்ளத்தில் துவையலை வைத்தார்கள். சிறிது சோற்றை எடுத்துத் துவையலில் பட்ட தோ படலையோ என்று தொட்டு கழுக் என்று முழுங்கினார்கள். யாரோடும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முழுங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்! அவர்கள் உண்ணுகிற வேகம் ஆர்வம் அனுபவிப்பு இதெல்லாம் பார்த்தபோது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்குமோ என்று பட்டது மணிக்கு. முதலில் கொஞ்சம் வெறும் சோற்றை எடுத்து ருசி பார்த்தார். அந்தச் சோற்றின் நெடி அவரை என்னவோ செய்தது! துவையலோடு சேர்த்துச் சாப்பிட்டால் கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் பட்டது. அந்தக் கடுமையான பசியிலும் அவரால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

அன்னமய்யாவும் சுப்பையாவும் ஆளுக்கு ஒரு உருண்டைதான் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து அவர்கள் மண்ணினால் கைகளைச் சுத்தப்படுத்தியதைப் பார்த்து அவரும் அதேபோல் மண்ணை எடுத்து கைகளில்த் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டார்.

அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேச ஆரம்பித்தார்கள். சுண்ணாம்பு கேட்கவும் தீப்பெட்டி கேட்கவும் சிலர் பக்கத்துத் தொகுதிகளிடம் போனார்கள். மணி திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்களை மூடிக்கிடந்தார்.

வட்டார வழக்குச் சொற்கள்

பாச்சல் - பாத்தி

பதனம் - கவனமாக

நீத்துப்பாகம் - மேல்கஞ்சி

கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்

மகுளி - சோற்றுக் கஞ்சி

வரத்துக்காரன் - புதியவன்

சடைத்து புளித்து - சலிப்பு

அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)

தொலவட்டையில் - தொலைவில்

 

நூல் வெளி

கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

 

முன்தோன்றிய மூத்தகுடி


"கறங்கு இசை விழவின் உறந்தை....."

அகநானூறு, 4:14

 

கற்பவை கற்றபின்....

1. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டுப் பேசுக.

2. உங்கள் கற்பனையை இணைத்து நிகழ்வைக் கதையாக்குக.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும்போது, விருந்தினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியராக மாற்றிவிடும். அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும். விருந்தாளிகள் அடிக்கடி வர மாட்டார்களா என்று இருக்கும்.

விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?

காலையிலிருந்தே வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். "என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போறாங்களா என்ன?" "ஏங்க..... காலையிலேருந்து வேப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப் போறாங்க பாருங்க. " "அடடே, ஆமாம் காக்கா கத்துது. யாரு வரப் போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே... உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிக்கிட்டு" - நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னதும் சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெரு முனையில் அறந்தாங்கி மாமா தலையில் பலாப்பழத்துடன் வந்து கொண்டிருப்பார். அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும்!

-தஞ்சாவூர்க் கவிராயர்

 

 

Tags : by ki. RajaNarayanan | Chapter 3 | 10th Tamil கி.ராஜநாராயணன் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 3 : Kutaanchoru : Supplementary: Gopallapurathu makkal by ki. RajaNarayanan | Chapter 3 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு