பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael
(இயல் 2 : விரிவானம் : பள்ளி மறுதிறப்பு)
பாடநூல் மதிப்பீட்டு வினா
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
‘பள்ளி மறுதிறப்பு' சிறுகதையினைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை
சுப்ரபாரதிமணியன் இயற்றிய ‘பள்ளி மறுதிறப்பு' சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம்.
மதிவாணனும் கவினும்
மதிவாணனும் கவினும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்.
மதிவாணனின் சிந்தனை
படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.
படிக்காதவரின் நிலை
பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர். அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது. போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான்.இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தான் மதிவாணன்.
முடிவுரை
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.
❖ எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன்.
❖ எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.