Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு

பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael

   Posted On :  12.07.2022 01:30 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு 

விரிவானம்

பள்ளி மறுதிறப்பு



நுழையும்முன்

ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான்இளமையில் கல்என்று ஔவையார் கூறினார். இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைக் தவிர்க்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை ஒன்றைப் படிப்போம்.


பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாள்கள் இருந்தன. மதிவாணனுக்குக் கோடை விடுமுறை ஒன்றரை மாதமும் ஓடி விட்டது.

பேருந்து நிறுத்தம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. "என்ன சிந்தனையடா, மதி?" மதிவாணனின் தோளைத் தொட்டபடி கேட்டான் கவின். சிறுவர்களால் நிரம்பி வழிந்தது பேருந்து நிறுத்தம். "ரெண்டு நாள்லே பள்ளி திறக்கப் போகுது" என்றான் மதிவாணன்.

"பள்ளிக்குப் போகணும்ங்கற கவலையா?"

"கவலையில்லடா, முடிவு பண்ணனும்"

"என்ன முடிவு?"

"பள்ளிக்குப் போறதா, இல்லே பின்னலாடை நிறுவனத்துக்குப் போறதான்னு...”

"நாங்கெளெல்லாம் பின்னலாடை நிறுவனத்துக்குத்தான். நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான் கவின்.

"எனக்குக் குழப்பம்"

"என்னடா குழப்பம்? வாராவாரம் சம்பளம். திரைப்படம் பாக்கக் காசு கிடைக்குது. சாயங்காலமானா பரோட்டா.. இடையில் போண்டா... வீட்ல யாரும் திட்டறதும் இல்லே. மகிழ்ச்சியாத்தானே இருக்கோம். இந்த மகிழ்ச்சி போதும்"

கோடை விடுமுறை தொடங்கியபோதும் இந்தக் குழப்பம் மதிவாணனுக்கு இருந்தது. நாலைந்து நாள்கள் அக்காவீடு, அத்தை வீடு போய் வந்தான். தொலைக்காட்சி பார்த்துப் பொழுது போக்கினான்.

நண்பன் கவின் ஒரு நாள் அழைத்தான். "சும்மாதானே இருக்கே. வாடா பின்னலாடை நிறுவனத்துக்குப் போகலாம். புதிய உடைகள், எழுதுகோல்கள், குறிப்பேடுகள், வாங்கப் பணம் சம்பாதிச்சுருவே. இந்த விடுமுறையிலே வீட்லேயும் சுமையா இருக்க வேண்டியதில்லே.. பின்னலாடை நிறுவனத்துக்கு ஆளு வேணும். வாடா.." என்றான்.

சரி என்று சேர்ந்துவிட்டான். ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. பின்னலாடை நிறுவன வேலை புதுசாக இருந்தது. ஆடைகளை அடுக்கிக் கட்டும் வேலைதான்.

சனிக்கிழமை வாரச் சம்பளம். பத்து மணிக்கும் பிற்பகலிலும் வடை, தேநீர். இரவில் பரோட்டா, தோசை என்று சுவையாகச் சாப்பிட முடிந்தது. அம்மா அவனது சம்பளப் பணத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாய்ச் சொன்னார். செலவழிந்து போயிருந்தாலும் கொடுத்துவிடுவார். பள்ளி திறக்கும்போது நல்லா செலவு செய்யலாம்.

நல்ல சம்பளம் கிடைக்கிறது. பின்னலாடைக்குத் தேவை மிகுதியாக இருக்கிறது. எனவே வேலைக்குக் குறைவில்லை.

அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது வெளியில் அனுப்பி விடுகிறார்கள். ஒரு வேளை கண்டுபிடித்துவிட்டால், வயது பதினைந்து என்று சொல்லச் சொன்னார்கள். பின்னலாடை நிறுவனத்துக்குப் போய்க்கொண்டே இருந்தால் அவனும் குழந்தைத் தொழிலாளிதான். வாழ்க்கை முழுவதும் தொழிலாளிதான் என்பது நினைவுக்கு வந்தது.

தொழிலாளியாக இருப்பது கேவலம் இல்லை. ஆனால், படிக்கிற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று அவனுக்குள்ளும் கனவுகள் இருந்தன.

படித்தால் வேறு வேலை பார்க்கலாம். அதிகமான சம்பளம் கிடைக்கும். படித்துவிட்டுச் சொந்தமாகத் தொழிலும் செய்யலாம். அப்படி இல்லாமல் இந்த வயதிலிருந்து தொழிலாளியாகவே வாழ்க்கையைக் கடத்துவதா? சிந்தித்தான்.

கல்வியறிவு முதன்மையானது. ஒரு பட்டமாவது வாங்க வேண்டும். எதிரில் இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. அதில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவர்களைப் போல் உயரவேண்டுமானால் படிப்பு வேண்டும். படிப்பில்லாமல் உயரமுடியுமா? படிப்பு அடிப்படைத் தேவை.

பள்ளிக்குப் போகவில்லை என்று சொன்னாலும் அப்பா "சரி" என்பார். 'சம்பளம் வருதே' என்பார். இந்தக் குறைந்த சம்பளத்திற்காகப் படிப்பைத் தொலைப்பதா? போண்டாவும் வடையும் பரோட்டாவும் வீட்டில் கிடைக்காது. அவற்றுக்கு அடிமையாவதா? தலையை உலுக்கிக் கொண்டான் மதிவாணன்.

வரும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். மிகுதியான கூட்டம். பேருந்தில் நுழைவது ஒரு விளையாட்டுச் சாதனை. பின்னலாடை நிறுவனத்துக்குப் போனால் உடையெல்லாம் கசங்கி அழுக்காகி இருக்கும். இரவும் இதே நிலைதான். பேருந்து ஒன்று வந்தது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. கவின் மதிவாணனின் கையை இழுத்தான். "கூட்டந்தான். ஆனா போயிடலாம்."


மதிவாணன் தன் அருகில் வந்து நின்ற முதியவரைப் பார்த்தான். முகம் இடுங்கி இருந்தது. மழிக்கப்படாத முகம். சோர்வாக இருந்தார். "இது நல்லூர் போகுமா?" என்று கேட்டார்.

மதிவாணன் வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். முதியவரின் பார்வை அக்கம் பக்கமிருந்த சிறுவர்களின்மீது இருந்தது. "என்னப்பா, இது நல்லூர் போகுமா?”

அவர்களுள் ஒரு சிறுவன் பேருந்தின் முகப்பைக் கூர்ந்து கவனித்தான். எதுவும் பேசாமல் புன்முறுவல் வந்தது

"என்னப்பா போகுமா?" என்று மீண்டும் கேட்டார் அவர்

"யாருக்குத் தெரியும்? எங்களுக்குப் படிக்கத் தெரியாதே" என்று கூறியபடி ஒரு சிறுவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்

"சின்னப் பசங்களா இருக்கீங்க. இதுகூட படிச்சுச் சொல்லத் தெரியாதா?"

ஒருவன் வெறுப்புடன் இடைமறித்தான். "பெரியவரே... இதப் படிக்கக்கூட உங்களுக்குத் தெரியாதா...?" 'ஓ...'வென்று கேலியான ஓசை வந்தது. சிரித்தார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் மதிவாணன். அவர் அருகே சென்றான். "இந்தப் பேருந்து நல்லூர் போகாதுங்க. நல்லூர் பேருந்து வந்தா சொல்றேன்" என்றான்.

"சரி தம்பி ".

முதியவருக்குப் படிப்பு இல்லை. பேருந்தில் எழுதி இருப்பதைப் படிக்க முடியவில்லை. இந்த வயதிலும் அவமானப்படுகிறார். கல்வியறிவு இல்லாமல் போய்விட்டால் நானும் இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் அவமானப்படவேண்டும். நல்ல கல்வியறிவு தலைநிமிர்ந்து நிற்க வைக்கும். நல்ல படிப்புதான் சிறந்த மனிதனாக்கும் என்ற எண்ணம் வந்தது

பேருந்துகளின் ஓசை காதை அடைத்தது. விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்

"டேய்!" குரல் கவினிடமிருந்து வந்தது

"எங்கடா போறே?" 

"பள்ளிக்கு

"பள்ளி திறக்கறதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கே

"பள்ளிக்குப் போறேண்டா"

சாலையைக் கடந்தபோது மதிவாணனுக்குப் பெருமூச்சு வந்தது. இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பது போல் இருந்தது. இப்படியே பறந்துபோய் யாருமில்லாத பள்ளியை வேடிக்கை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நூல் வெளி

இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.


Tags : Term 2 Chapter 2 | 7th Tamil பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael : Supplementary: Palli maruthirapu Term 2 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் : துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு - பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்