ப.சிங்காரம் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: புயலிலே ஒரு தோணி | 10th Tamil : Chapter 2 : Uyirin osai
இயற்கை
விரிவானம்
புயலிலே ஒரு தோணி
- ப. சிங்காரம்
நுழையும்முன்
இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போது
இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதே இயற்கையின் அசைவு சீற்றமாய், ஊழித் தாண்டவமாக மாறுகையில் எதிர் நிற்க இயலாது
தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ள இயற்கை நம்மைச் சுருட்டிச் செல்ல எத்தனிக்கும்
போது, புயலின் பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில்
கிடைக்கும் பட்டறிவு அனைவருக்கும் பயன்படும் இலக்கியமாகிறது. இந்த நெடுங்கதையின்
சில பக்கங்களும் அப்படித்தான்... புயலின் சீற்றத்தைக் கண்முன் விவரிக்கின்றன,
புயல் மழை தெறிக்கும் அக்காட்சி...
[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய
நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய
இனங்களில் தமிழினமும் ஒன்று. தமிழ்க்குடிகள் மலேசியா, சிங்கப்பூர்,
இந்தோனேசிய நாடுகளில் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில்
மெபின் நகரில் இருந்தபோது இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம்.
கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும், அதன்
தொடர்ச்சியாக நடை பெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி]
கொளுத்திக்கொண்டிருந்த வெயில் இமைநேரத்தில் மறைந்துவிட்டது; புழுங்கிற்று. பாண்டியன் எழுந்து போய் அண்ணாந்து பார்த்தான். மேகப் பொதிகள் பரந்து திரண்டொன்றிக் கும்மிருட்டாய் இறுகி நின்றன. அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம். ஒரே இறுக்கம். எதிர்க்கோடியில் வானையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தவாறு *கப்பித்தானுடன் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் திடுமெனப் பாய்மரத்தை நோக்கி ஓடிச்சென்று கட்டுக் கயிறுகளை இறுக்குகிறார்கள். விவரிக்க இயலாத ஓர் உறுத்தல் ஒவ்வோர் உணர்விலும்பட்டது. எல்லோரும் எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மிரண்டு விழித்தனர்.
கிடுகிடுக்கும்
இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன. அதே சமயம் மதிப்பிட முடியாத
விரைவும் பளுவும் கொண்ட மோதல் *தொங்கானையும்
அதிலிருந்து நடப்பன கிடப்பனவற்றையும் உலுக்கிற்று. வானம் உடைந்து கொட்டுகொட்டென்று
வெள்ளம் கொட்டியது. சூறாவளி மாரியும் காற்றும் கூடிக்கலந்து ஆடிக் குதித்துக்
கெக்கலித்தன. அலையோட்டம் தெரியவில்லை - வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை
தெரியவில்லை - வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான் அப்படியும் இப்படியுமாய்த் தாவிக்குதித்து விழுந்து
திணறித் தத்தளிக்கிறது. எலும்புகள் முறிவதுபோல் நொறுநொறு நொறுங்கல் ஒலி. தலைக்கு
மேல் கடல்... இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல் மழை புயல் வானம்... எங்கிருந்தோ தொங்கிய வடக்கயிற்றை வலக்கையால்
பற்றிக் கிடந்தான். அருவியருவி, உப்பருவி, கடலருவி. மற்றவர்கள் எங்கேயெங்கே? மின்னொளி, கப்பித்தான் பொந்து, தாவும் பேயுருவங்கள். சுறாமீன்,
ரம்பப்பல், காற்றோலக் கடல், சீற்ற மழை. உடலயர்வுப் புலன் மயக்கம்.
திடுமென
அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும் கடலும் பிரிந்து தனித்துத் தென்பட்டன.
பலகை
அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான் கத்துகிறான்:
"ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்!"
பாண்டியன்
எழுந்தான். எங்கெங்கோ இடுக்குகளில் முடங்கிக் கிடந்த உருவங்கள் தலை தூக்கின.
தொங்கான் தள்ளாடுகிறது - அலைகள் - மலைத்தொடர் போன்ற அலைகள் மோதித் தாக்குகின்றன.
தட்டுத் தடுமாறி நடந்தோடினர்.
வானும்
கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்று கூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ
கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் , வெறிக் கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதி குதித்து
விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது.
* கப்பித்தான்
- தலைமை மாலுமி (கேப்டன்)
* தொங்கான்
– கப்பல்
முகத்தில்
வெள்ளம். உடலில் வெள்ளம். கால் கையில் வெள்ளம். உடை, உடலை
இறுக்கியிறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. மரத்தூண், கல்தூண்,
இரும்புத்தூண், உயிர்த் தூண். தொங்கான் தாவி
விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு,
கும்மிருட்டு, குருட்டிருட்டு. சிலுசிலு
மரமரப்பு. நொய்ங் புயங் நொய்ங் புய்ங் நொய்ங் புய்ங். இடி முழக்கச் சீனப்
பிசாசுகள் தாவி வீசுகின்றன. மூடைகள் சிப்பங்கள் நீந்தியோடி மறைகின்றன. தொங்கான்
குதித்து விழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடுகிறது.
கடலலை அடிக்கிறது ...
தெரியுமா?
புயலுக்குப் பெயர் சூட்டல் ஏன்?
• புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு,
தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின்
பெயர்கள் உதவும்.
• வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர்
வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில்
தொடங்கியது.
• புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச்
சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து
புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப்
பட்டியலிட்டுள்ளது.
• வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன்,
பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து
ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
• இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட
பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி,
ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை).
இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.
‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது.
அடுத்து வந்த 'பெய்ட்டி' புயல் பெயர்
தாய்லாந்து தந்தது.
என்னயிது!
சூரிய வெளிச்சம்! சூரியன் சூரியன் சூரியன் ..... தொங்கானில் நீர் நெளிகிறது.
பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. பொத்துக் கொப்புளிக்கும் பவ்வ நீரை மாலுமிகள்
இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைக்கிறார்கள். ஆப்பு அடிக்கிறார்கள். மரம்
வெட்டுகிறார்கள், செதுக்குகிறார்கள் ....
தொங்கானின்
இருபுறமும், பின்னேயும் தேயிலைப் பெட்டிகளும் புகையிலைச்
சிப்பங்களும் மிதந்து வருகின்றன.
பாண்டியன்
நாற்புறமும் கடலைப் பார்த்து மலைத்து நின்றான்.
கடற்கூத்து
எவ்வளவு நேரம் நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம் வரையிலோ யாரும்
கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்றுபோயிருந்தன.
தொங்கான்
தன்வசமின்றித் தடுமாறிச் செல்கிறது. கடற்கூத்தின்போது மாலுமிகளால் தூக்கி
எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும் மூடைகளும் மிதந்து உடன் வந்தன. புயல்
மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முற்றாகத் தெளிச்சி பெறவில்லை. பினாங்கு எவ்வளவு
தொலைவில் இருக்கிறது, எப்போது போய்ச் சேரலாம்? பதில் சொல்வார் யாருமில்லை.
இரவில்
மேல் தட்டுக்கு வந்து கப்பித்தான் வானையும் கடலையும் ஒரு சுற்றுப்
பார்த்துவிட்டுத் தலையைச் சொறியலானான். பாண்டியன் நெருங்கிச் சென்று நிலவரத்தைக்
கேட்டான். கப்பித்தான் சீனமும் மலாயும் கலந்த மொழியில் சொன்னான்.
"இனிமேல் பயமில்லை. இரண்டு நாளில் கரையைப் பார்க்கலாம்."
அன்றிரவு
யாரும் உண்ணவில்லை; பேச்சாடவில்லை.
**
மறுநாள்
காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய், முந்தியதைத் தொடர்ந்த பிந்தியதாய் வந்து மொத்து மொத்தென்று தொங்கானை
மோதின. பறவை - மீன்கள் இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின.
தொங்கான்
மிதந்து சென்றது, கடலின் இழுவைக்கிணங்கி.
பகல்
இரவாகி பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம் சிந்திற்று. கரு நீல வானில்
விண்மீன்கள் வெகு ஒளியுடன் கண் சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது.
அவுலியா மீன்கள் கூட்டம் கூட்டமாய் , கண்மாயில்
முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகளென
பறவை மீன், அவுலியா மீன் -
மீன் வகை
பிலவான் - இந்தோனேசியாவிலுள்ள இடம்
முனகல்
ஒலியோடு பின் தொடர்ந்தன. அலைகள் நெளிந்தோடின.
கடற்கூத்துக்குப்
பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய்க் கடலோடு கடலாய் மரப்பச்சை தெரிவது
போலிருந்தது. சுமார் அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடி படகு விளக்குகள்
தென்பட்டன.
கரை!
கரை! கரை!
அடுத்த
நாள் முற்பகலில் பினாங்குத் துறைமுகத்தை அணுகினார்கள். மணிக்கூண்டு தெரிகிறது.
வெல்ட்கீ கட்டட வரிசை. தெருவில் திரியும் வண்டிகள், ஆட்கள்
....
தொங்கான்
கரையை நெருங்கிப் போய் நின்றது. தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன.
ஒவ்வொன்றிலிருந்தும் கேள்வி எழுந்தது.
"எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?"
"பிலவான்... பிலவான்."
சுமத்ரா
பிரயாணிகள் துடுப்புப் படகில் இறங்கிப் போய் நடைபாலத்தில் ஏறி நடந்து சுங்க
அலுவலகத்திற்குச் சென்று பிரயாண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
"தமிரோ?"
ஜப்பானிய அதிகாரி உறுமினார்.
"யா, மஸ்தா." தமிழர்கள் தாம் என்று தலைகுனிந்து
வணங்கித் தெரிவித்தனர்.
பிரயாணிகளைச்
சில விநாடிகள் நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில்
முத்திரை வைத்துத் திருப்பிக் கொடுத்தார்.
தெரிந்து தெளிவோம்
இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்
மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர் போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து, குறைவான இடத்துக்குக் காற்று வீசும். இப்படி வீசும் காற்றின் போக்கை,
புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கையில் மாற்றும்.
நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும்.
தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும். காற்றின் வேகம்
கூடினால் இந்த விலக்கமும் கூடும். வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத்
தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்! ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்! பிரெஞ்சு
நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ்
விளைவு என்று பெயர்.
நூல் வெளி
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி. இந்நூலாசிரியர்
ப.சிங்காரம் (1920 - 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர்
மூண்டது. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா
பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட
பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
ப.சிங்காரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில்
பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
முன்தோன்றிய மூத்தகுடி
"பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி"
அகநானூறு 208 : 22
கற்பவை கற்றபின்...
1.
கடலில் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்த
அடுக்குத் தொடர்களும் வருணனைகளும் எவ்வாறெல்லாம் பயன்பட்டுள்ளன என்பது குறித்து
வகுப்பில் பேசுக.
2.
நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து விவரித்து எழுதுக. (மழை, வெள்ளம், புயல், வறட்சி)