Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai

   Posted On :  03.08.2022 07:30 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்  


சான்றோர் சித்திரம்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவு கூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷ மேரு ....' என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். இவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவர், தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி. 1805 முதல் கி.பி. 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். இவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். இவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி:

"கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?" என்றார்.

வினாக்கள்: 

1. தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன? 

2. தமிழின் முதல் நாவல் எது? அதனை எழுதியவர் யார்? 

3. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் யாவர்? 

4. தமிழின் முதல் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்? 

5. பார்த்தாள் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

6. மாயூரம் வேதநாயகம் எழுதிய நூல்கள் யாவை? 

7. 'சொன்னேன்' - இச்சொல்லின் வேர்ச்சொல் எது?


விடைகள்: 

1. தாது வருடப் பஞ்சம்.

2. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். அதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம். 

3. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர். 

4. மாயூரம் வேதநாயகம். 

5. பார்த்தாள் - பார் + த் + த் + ஆள் 

பார் - பகுதி 

த் - சந்தி 

த் - இறந்தகால இடைநிலை

ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி 

6. ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்' என்ற பெயரில் வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். 

7. வேர்ச்சொல் - ‘சொல்'. 


மொழிபெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக.

In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy. This led Kenya to Kenya's first fully democratic elections in a generation. In the election, Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformend the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

1977ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர். அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல்முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இத்தேர்தலில் வங்காரி மத்தாய் . நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார். கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்றுகோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

எ.கா: Green Belt Movement - பசுமை வளாக இயக்கம் 

1. devastation - பேரழிவு

2. deforestation - காடழிப்பு

3. thirty years - முப்பது ஆண்டுகள்

4. founded - நிறுவப்பட்டது

5. regions - மண்டலங்கள்

6. providing - விநியோகம்

7. halting - ஓய்விடங்கள்

8. soil erosion - மண்ணரிப்பு

9. desertification - பாலைவனமாக்கல்

10. enlighten - அறிவூட்டல்

11. representative - பிரதிநிதி

12. generation - தலைமுறை

13. democracy - குடியாட்சி

14. parliament – நாடாளுமன்றம்

15. election - தேர்தல் 

16. success – வெற்றி

17. tens of thousands - பல்லாயிரக்கணக்கான

18. thirty million – மூன்று கோடி

19. social forestry schemes - சமூக காடுகள் வளர்ப்புத் திட்டம் 

20. Minister of environment - சுற்றுச்சூழல் அமைச்சர்


மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. தலை, தளை, தழை 

2. கலை, களை, கழை 

3. அலை, அளை, அழை

எ.கா : விலை, விளை, விழை

கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

1. தலை, தளை, தழை 

ஆட்டிற்குத் தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனைத் தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்துச் சென்றான்.

2. கலை, களை, கழை 

கழை காட்டில் தீப்பிடித்ததால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன.

3. அலை, அளை, அழை 

கடலலையில் விளையாடச் சென்ற முருகன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்தான்.


இலக்கிய நயம் பாராட்டுக

வெட்டியடிக்குது மின்னல் - கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; 

தொட்டியிடிக்குது மேகம் - கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று 

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 

எட்டுத்திசையும் இடிய - மழை 

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

- பாரதியார்

முன்னுரை :

இப்பாடலைப் பாடியவர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த இவர் இளைமையிலே கவிப்பாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களைப் பாடியதால் தேசியக் கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் நூல்கள் மிகவும் சிறப்புப் பெற்றவையாகும். 

திரண்ட கருத்து :

பூமியை நோக்கி அடிக்கும் மின்னலானது பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருக்கின்றது. சூறாவளி காற்று அடிப்பதால் விண்ணைத் தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசையானது காதால் கேட்க முடியாத அளவிற்குக் கொட்டி இடிக்கின்றது. ‘கூகூ' என்ற ஓசையுடன் காற்றானது வேகமாக வீசி விண்ணைக் குடைகின்றது. மழைத்துளி மண்ணில் விழும் போது உண்டாகும் ஒலியோ மத்தளங்கள் இசைத்துத் தாளம் போடுவது போல ஒலிக்கின்றன. இடைவிடாமல் மழையைப் பொழிந்து பொழிந்து வானம் கனைக்கின்றது. எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை எப்படிப் பூமியை வந்தடைந்தது. 

மோனை நயம் :

குயவனுக்குப் பானை 

செய்யுளுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். 

சான்று:

வெட்டியடிக்குது வீரத் 

ட்டுத்திசையும் ங்ஙனம் 

எதுகை நயம் :

மதுரைக்கு வைகை 

செய்யுளுக்கு எதுகை

முதலெழுத்து அளவு ஒத்துநிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். 

சான்று:

வெட்டியடிக்குது 

தொட்டி 

ட்டச்சட

ட்டுத்திசையும் 

அணி நயம் :

அணியற்ற கவிதை 

பிணியுள்ள வணிதை

மழையின் சிறப்பை உணர்த்த மழை பெய்வதற்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளான இடி இடித்தல், மின்னல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது. 

சொல் நயம் :

சொல் போனால் 

பல் போகும்

பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலியின்பத்தையும் புதிய பொருளுணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

சந்த நயம் :

சந்தம் தமிழுக்குச் சொந்தம்

ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் சிந்துப் பா வகையைச் சார்ந்ததாகும். 

முடிவுரை :

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது. 


கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக.

பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் 

நாள் : அக்டோபர் 2

நேரம் : காலை 10 மணி 

இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை .

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை : திருமதி. அரசி,

செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் 

முன்னிலை : திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர் 

தலைமையுரை : திரு. இமயவரம்பன்,

பேரிடர் மேலாண்மை இயக்குநர்

கருத்தரங்கத் தலைப்புகள் 

• இயற்கைச் சீற்றங்களும் - பருவகால மாற்றங்களும் - முனைவர்

செங்குட்டுவன் 

• பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் - திரு. முகிலன்

• நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்தல் - திருமதி. பாத்திமா 

• பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் - திரு. வின்சென்ட்

நன்றியுரை : பர்வீன், பசுமைப்படை மாணவர் தலைவர். நாட்டுப்பண்

பத்தி:

அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு, அமுதன் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் இயற்கைச் சீற்றங்களும் பருவகால மாற்றங்களும் என்ற தலைப்பிலும், திரு. முகிலன் அவர்கள் பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் என்ற தலைப்பிலும், திருமதி. பாத்திமா அவர்கள் நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலும், திரு. வின்சென்ட் அவர்கள் பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் என்ற தலைப்பிலும் கருத்துகளைத் தர உள்ளனர்.

கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் ஜமீலா அவர்கள் நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றோம்.


மொழியோடு விளையாடு


புதிர்க்கேற்ற விடையை அறிக.

அ) அடைமழை பெய்த அடுத்த நாள்

படைபடையாய் வந்ததாம் 

பரங்கி நாட்டு விமானம் 

எதிரி சுடாமலேயே 

இறகொடிந்து இறந்ததாம் - என்ன? 

விடை : ஈசல்


ஆ) தண்ணீரும் மழையும் இல்லாமல்

பயிர் பச்சையாய் இருக்கிறது 

பாக்கு வெற்றிலை போடாமல் 

வாய் சிவப்பாய் இருக்கிறது - என்ன? 

விடை : கிளி


இன்னும் புதிர் அறிவோம்

1. கறுத்த ரோஜா மொட்டு 

கனத்த மேகம் கண்டு 

கணத்தில் இதழ் விரித்திடும் 

காத்திடும் பின் சாய்ந்திடும் 

அது என்ன? 

விடை : குடை 


2. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்

மூத்த பெண் ஆற்றிலே; 

நடுப்பெண் காட்டிலே; 

கடைசிப் பெண் வீட்டிலே; 

அவைகள் யாவை? 

விடை : முதலை, உடும்பு, பல்லி


3. நான் ஏறும் குதிரை 

நாலுகால் குதிரை 

அந்தக் குதிரைக்கு 

ஆயிரம் கண்கள் அது என்ன? 

விடை : கட்டில்


எண்ணங்களை எழுத்தாக்குக


வளமாக எல்லோரும் வாழ வசதியான இயற்கையைத் தந்த பூமியாகிய நான் இன்று வெப்பமிகுதியால் உருகிக் கொண்டிருக்கின்றேன். பச்சை பட்டாடை உடுத்தி பசுமையைத் தந்த என்னை வெம்மை என்னும் காட்டிலே தள்ளி விடும் மனித இனமே நான் இல்லை என்றால் நீ எப்படிப் பூமியில் வாழ்வாய்...!

எல்லா காலங்களிலும் பருவங்கள் தவறாது மழையைத் தந்தேன். நீங்கள் எல்லோரும் வளமாய் வாழ நல்ல நிலத்தைத் தந்தேன். உங்களுடைய சுயநலத்திற்காக என் அன்பு மகளாம் வளமான காட்டை அழித்து என்னை வறுமையாக்கி, வறட்சியை உண்டுபண்ணியது ஏன்? 

இன்றைய வெப்ப மிகுதியால் என் உடல் சூடேறுகிறது. என்னைக் குளிர்விக்க வேண்டிய நீங்களே மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டுக்கின்றீர்கள் என்று எனக்காக அல்ல உங்களுக்காகக் கேட்கிறேன்: எப்போது ஒரு மரத்தை நடப்போகின்றீர்கள் அனலாகக் கொதிக்கும் என் உடலைக் கொஞ்சமாவது குளிர்விப்பாயா?

நஞ்சாகி வரும் நெகிழியை முற்றிலுமாகத் தவிர்த்து விடு. என் மேனியடையும் சூட்டைக் குறைத்து விடு; எல்லா வளத்தையும் இலவசமாகத் தரும் என்னைக் காக்க மறந்திடாதீர்கள்! வரும் தலைமுறையினரும் வாழ்ந்திட நீங்கள் தடையாக இருக்காதீர்கள். 


மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக உங்கள் பள்ளி தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுது. 

அனுப்புநர்

அஅஅஅ , 

நிலை 12 'அ' பிரிவு, 

அரசு மேனிலைப்பள்ளி, 

திருச்சி - 4. 


பெறுநர் 

உயர்திரு. தலைமையாசிரியர் அவர்கள், 

அரசு மேனிலைப்பள்ளி, 

திருச்சி - 4. 


ஐயா, 

பொருள் : மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுவது தொடர்பாக. 

வணக்கம்.

நான் தங்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு 'அ' பிரிவில் பயின்று வருகின்றேன். தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியமாகும்.

எனவே, மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த போதிய விழிப்புணர்வை உரிய நபர்கள் மூலம் வழங்கினீர்கள் என்றால் எங்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும்.

ஆகவே, தாங்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து அனைத்து மாணவர்களும் போதிய விழிப்புணர்வைப் பெற உதவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

திருச்சி,

09.07.2019.


இப்படிக்கு, 

தங்கள் உண்மையுள்ள,

அஅஅஅ.


செய்து கற்போம்

உங்கள் பகுதியில் புழங்கும் இருபது சொற்களைக் கொண்டு வட்டார வழக்குச் சொல் தொகுப்பு ஒன்றை உருவாக்குக. 

1. நான் சொல்லுதேன் - நான் சொல்கிறேன் 

2.அவன் நிக்கான் - அவன் நிற்கிறான் 

3. நீங்க வருதியகளா? - நீங்கள் வருகிறீர்களா? 

4. ஏளா ! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்? 

5. முடுக்குது - நெருங்குகிறது 

6. சொல்லுதான் - சொல்கிறான் 

7. செய்தான் – செய்கிறான்

8. ஆச்சி - வயதான பெண்மணி / பாட்டி 

9. ஏல(லே) - நண்பனை அழைப்பது 

10. மக்கா - நண்பா 

11. பைதா - சக்கரம் 

12. கொண்டி - தாழ்ப்பாள் 

13. பைய - மெதுவாக 

14. சாரம் - லுங்கி 

15. கோட்டி - மனநிலை சரியில்லாதவர் 

16. வளவு - முடுக்கு, சந்து 

17. சிரை - தொந்தரவு 

18. மச்சி - மாடி 

19. ஆக்கங்கெட்டது - கெட்ட நேரம் 

20. செத்த நேரம் - கொஞ்ச நேரம்


நிற்க அதற்குத் தக


அது ஒரு மழைக்காலம், அதிகளவு மழையினால் வெள்ளம் வரக்கூடிய நிலை குறித்து அரசு அறிவிப்பு வெளியாகிறது. அரசின் துண்டறிக்கை உங்கள் கைகளில்...

அ) எச்சரிக்கை நடவடிக்கைகள்

• வெள்ள நீருக்கு அருகே வரவோ, வெள்ளநீரில் விளையாடவோ கூடாது

ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும். 

• சாக்கடை நீர் ஓட அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள், வாய்க்கால்கள்,  கழிவுநீர்த் தொட்டிகள்  போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• வெள்ளநீரில் பாம்புகள் மிதந்து வரும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கையாய்க் கைகளில் கொம்புடன் (தடி) இருங்கள்.

• உங்கள் வீட்டில் உள்ள கழிப்பிடத் துளை மற்றும் குளியலறைத் துளை மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தெருவில் ஓடும் வெள்ள நீர் மற்றும் கழிவுநீர் வீட்டிற்குள் புகாதபடி செய்யுங்கள்.

• அறுந்த மின்கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள். மின் சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவற்றின் வழியாக மின்சாரம் தாக்கி மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆ) சுகாதார நடவடிக்கைகள்

• கொதிக்க வைத்த நீரையே அருந்துங்கள்.

• மூடிவைக்கப்பட்டுள்ள, சமைத்த சூடான உணவுகளையே உண்ணுங்கள்.

• சமைத்த உணவு,சமைக்கத் தேவையில்லாத உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

• வயிற்றுப்போக்கு இருந்தால், அரிசிக்கஞ்சி, இளநீர், பால் கலக்காத தேநீர், மோர் பருகலாம்.

• அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்களை அணுகி உப்பு, சர்க்கரைக் கரைசல் பொட்டலங்களை வாங்கி அதைக் குடிக்கலாம்.

• சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்க பிளீச்சிங்பவுடர், சுண்ணாம்புத்தூளைப் பயன்படுத்தவும்.

குறிப்புகளைப் படித்த நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள்? 


படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர்வண்டி நிலையம்)

Platform - நடைமேடை  

Ticket Inspector - பயணச்சீட்டு ஆய்வர் 

Train Track - இருப்புப்பாதை 

Level Crossing - இருப்புப்பாதையைக் கடக்குமிடம் 

Railway Signal - தொடர்வண்டி வழிக்குறி

Metro Train - மாநகரத் தொடர்வண்டி


அறிவை விரிவு செய்

• பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார் 

• தமிழ் நடைக் கையேடு

• இயற்கைக்கு திரும்பும் பாதை - மசானா ஃபுகோகா  

• சுற்றுச்சூழல் கல்வி – ப. ரவி 

• கருப்பு மலர்கள்  - நா. காமராசன்

• வானம் வசப்படும் - பிரபஞ்சன்


Tags : Chapter 2 | 12th Tamil இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai : Tamil Language Exercise - Questions and Answers Chapter 2 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை