அறிமுகம் - புவியியல் - உயிர்க்கோளம் | 11th Geography : Chapter 7 : The Biosphere
உயிர்க்கோளம்
அத்தியாயக் கட்டகம்
7.1 அறிமுகம்
7.2 உயிர்க்கோளம்
7.3 சூழ்நிலை மண்டலம்
7.4 உயிரினச் சூழ்வாழிடங்கள்
7.5 உயிரினப் பன்மை
7.6 அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள்
7.7 உயிரினப் பன்மை பாதுகாப்பு
அறிமுகம்
புவி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது. புவியியலாளர்கள் புவியைப் பற்றியும் அதன் பல்வேறு கோளங்களைக் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். இந்தக் கோளங்கள் தற்போது அமைந்துள்ளது போல், புவி உருவாகிய போது அமையவில்லை . மாறாக புவி உருவான பிறகு அவை நீண்ட காலமாக பரிணாம மாற்றமடைந்தன. முதலில் புவி உருவான பிறகு நீண்ட காலமாக உயிரினங்கள் தோன்றவில்லை. நமது புவியில் முதல் உயிரினம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதுவே, 'உயிர்கோளத்தின் பிறப்பு' என குறிக்கப்படுகிறது.
கற்றல் நோக்கங்கள்
• உயிர்க் கோளத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் அகன்ற பரப்புப் பற்றி விளக்கமளிப்பது.
• புவியின் பரப்பில் உயிரினங்களின் பரவலையும் அவற்றின் இடத்திற்கேற்றத் தழுவலையும் விவரித்தல்.
• உயிர்க்கோளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு உணர்த்துதல்.
அதற்குப்பின் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து எண்ணிக்கையில் இரட்டிப்பாகி பல்வேறு வகைகளாகப் பெருகி உயிரினங்கள் தற்போதைய உயிர்க்கோளத்தின் அளவிற்கு வளர்ந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக, மனிதன் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகவும், தவறாகவும் பயன்படுத்தியுள்ளான். இது புவியின் சுற்றுச்சூழல் சமநிலையைப்
பெரிதும் பாதித்துள்ளது. இந்தத்
தாக்கத்தின் விளைவாகப் புவி வெப்பமயமாதல், பாலைவனமாதல், நோய்களின் பெருக்கம் மற்றும் பல வகை கடுமையான
இயற்கைச் சீரழிவுகள் ஏற்பட்டபோது தான் புவியின் சேதத்தை நாம் உணர்ந்தோம்.
1962 இல் ரேச்சல் கார்சன் என்பவர் ‘சைலண்ட் ஸ்பிரிங்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு ஊக்கமளித்துச் சர்வதேச அமைப்புகள் உயிர்க்கோளத்தைப் பாதுகாத்து அதனை மேலும் நீடித்திருக்க செய்வதற்கு தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தியது.
இயற்கை மீதான மனித செயல்களின் தாக்கத்தையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதற்காக 1971 இல் யுனெஸ்கோ ‘மனிதனும் உயிர்க்கோளமும்’ என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டம் தொடர்ச்சியாக இன்று வரை புவியின் நிலைத்தன்மையின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
உயிர்க்கோளம்
உயிர்க்கோளம் என்ற சொல்
பயோஸ்பியர் (Biosphere) என்ற கிரேக்க சொல்லிலிருந்து தோன்றியது. பையோஸ் (Bios) என்றால் உயிர் மற்றும் ஸ்பைரா (Sphaira) என்றால் கோளம் என்று பொருள். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுள் புவி மட்டுமே
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதற்கு சாதகமாக பல காரணிகள் உள்ளன. அவற்றில்
மிக முக்கியமானது சூரியனிடமிருந்து புவி அமைந்துள்ள தொலைவு, வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் புவியில் காணப்படும் நீர் ஆகியவை ஆகும்.
மேலே கூறப்பட்ட காரணங்களாலும் மற்றும் புவியின் மூன்று கோளங்களான பாறைக்கோளம், வளிக்கோளம் மற்றும் நீர்க்கோளம் ஆகியவற்றின் இடைச்செயல்களாலும் நான்காவது கோளமான
உயிர்க்கோளம் உருவானது (படம் 7.1). 1875 ஆம் ஆண்டில், உயிர்க்கோளம் என்ற வார்த்தை முதன் முதலாக எட்வார்ட் சுயெஸ் (Eduard Suess) என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் உயிர்க்கோளத்தைப் பற்றிய
ஆராய்ச்சியில் சார்லஸ் டார்வின் (Charles Darwin) மற்றும் பல விஞ்ஞானிகள் பங்களித்தனர்.
உயிரினங்கள்
உயிர்க்கோளத்தில் உள்ள நிலம், நீர் மற்றும் காற்றில் பரவி காணப்படுகிறது.
இவ்வுயிரினப் பரவல் நுண்ணுயிர்களில் தொடங்கி தாவரங்கள்,
விலங்கினங்கள்,
பறவைகள்,
இருவாழ்விகள்,
ஊர்வன,
பாலுாட்டிகள்,
மனித
இனம் வரை விரிவடைந்துள்ளது.
உயிர்க்கோளம்
உயிரினக் கூறுகளால் ஆனது. இவை உயிரினங்கள்,
உயரினத்திரள்,
இனக்குழுமம்
மற்றும் சூழ்நிலை மண்டலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உயிரினம் - தாவரங்கள்,
விலங்குகள்
மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியது.
உயரினத்திரள் - ஒரு பகுதியில் வாழும் ஒரே வகையான தாவரங்கள் அல்லது
விலங்குகள்.
இனக்குழுமம் - ஒரு பகுதியில் வாழும் அனைத்து தாவரங்களையும்
விலங்கு களையும் குறிக்கிறது.
சூழ்நிலை மண்டலம் - ஒரு தொகுதியின் உயிருள்ள மற்றும் உயிரற்ற
பொருட்களுக்கு இடையேயான இடைச்செயல்.