மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வெளிச்சத்திற்கு வந்த உலகம் - தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931) | 7th Science : Term 2 Unit 2 : Electricity
வெளிச்சத்திற்கு வந்த உலகம்
தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931)
தாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதிலேயே ஸ்கார்லட் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார்.
சிறுவயதிலேயே காதுகேட்கும் திறன் குறைவாக இருந்தது. அதனால் ஒரு நாள் ஆசிரியர் அவரை கடுமையாக திட்டியதால் அவர் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார்.
பள்ளி ஆசிரியரான எடிசனின் தாயார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே அவருக்குப் பள்ளிப்பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
தமது ஏழாவது வயது முதல் வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனங்களின் மீது எடிசனுக்கு ஆர்வம் எற்பட்டது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம் (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். 21 ஆம் வயதில், 'மின்சக்தியின் சோதனை ஆராய்ச்சிகள்' என்ற பகுதியை ஆழ்ந்து படித்தார்.
முதன்முதலில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் புகழ்பெற்றவர் எடிசன். இவரது முதல் கண்டுபிடிப்பு மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளேயாகும்.
1877 ஆம் ஆண்டு எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்த தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி(கிராமஃபோன்) ஆகும்.
பிளாட்டினம் கம்பிச்சுருளை வெற்றிடக்குமிழி ஒன்றில் உபயோகித்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்தார். இதுதான் எடிசன் 1879 ஆம் ஆண்டு கண்டுபிடித்த முதல் மின் விளக்கு.
எடிசன் விரைவில் எரியக்கூடிய மின் விளக்கினைக் கண்டுபிடித்தார். இது 1897 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இயந்திர ஆற்றலால் இயங்கும் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் (Voltage) உண்டாகி, கம்பி முனையில் மின்திறன் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலன் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத்தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார்.
கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்றவைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களைத் திரைப்பட படப்பிடிப்புக்காக 1891 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.
எடிசன் மறைந்த அன்று நியூயார்க் நகரிலுள்ள 'சுதந்திர தேவி சிலையின்' (Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளியிழந்தது ! சிக்காக்கோ, பிராட்வே வீதிகளில் உள்ள விளக்குகள் (பயணப் போக்கு விளக்குகள்) தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன.
எடிசன் ஒரு கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, மின்சார மோட்டார், ஒலிவரைவி, திரைப்பட படப்பிடிப்புக்கருவி உள்ளிட்ட பல கருவிகளைக் கண்டுபிடித்தார். வாழ்க்கையில் பல இன்னல்களைத் தாண்டி இருளிலிருந்து இந்த உலகை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவரே.