புகையிலையின்
தவறான பயன்பாடு
புகையிலையானது நிக்கோட்டியானா
டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத்
தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. இவற்றின் இளம் கிளைகளின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட
இலைகள், உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில்
பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர்
அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும்,
மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை
வாய்ந்த பொருளாகும்.
புகைபிடித்தல், மெல்லுதல்
மற்றும் உறிஞ்சுதல் போன்றவற்றிற்காக புகையிலை பயன்படுத்தப்படுகிறது. சுருட்டு,
சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள்,
ஹுக்கா ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் புகையை சுவாசித்தல் புகைபிடித்தலாகும்.
தூள் வடிவிலான புகையிலை வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படுகிறது. மாவு
போன்ற புகையிலை மூக்கின் வழியாக எடுத்துக் கொள்ளப்படுதல் உறிஞ்சுதல் (மூக்குப்
பொடி) எனப்படுகிறது.
புகை உள்ளிழுக்கப்படும்போது, திசுக்களால்
உறிஞ்சப்படுகின்ற வேதிப் பொருள்கள் பின்வரும் தீங்கு தரும் விளைவுகளை
ஏற்படுத்துகின்றன.
(i) புகைபிடித்தலின்
போது வெளிப்படும் புகையில் உள்ள பென்சோபைரின் மற்றும் பாலிசைக்ளிக்
ஹைட்ரோகார்பன்கள் எனும் புற்று நோய்க் காரணிகள், நுரையீரல்
புற்றுநோயை உண்டாக்குகின்றன.
(ii) புகைபிடித்தலினால்
தொண்டை மற்றும் மூச்சுக்குழலில் ஏற்படும் வீக்கம், மூச்சுக்குழல்
அழற்சி (bronchitis) மற்றும் நுரையீரல்
காசநோய்க்கு (Pulmonary tuberculosis) வழிவகுக்கிறது.
(iii) நுரையீரலின்
மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு
பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.
(iv) புகைபிடித்தலின்
போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள
ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை
குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.
(v) புகைபிடித்தலினால்
ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள் உண்டாவதற்கான ஆபத்தை
அதிகரிக்கிறது.
(vi) இரைப்பை
சுரப்பினை அதிகரித்து, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களை (அல்சர்)
ஏற்படுத்துகிறது.
(vii) புகையிலை
மெல்லுதல் வாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
தகவல் துணுக்கு
உலக
சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது. WHO வெளியிட்ட உத்தரவின்படி அனைத்து சிகரெட் விளம்பரங்களிலும் மற்றும் அட்டைப்
பெட்டிகளிலும் "புகை பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது” என்ற சட்டரீதியான எச்சரிக்கை இடம் பெற்றிருக்க வேண்டும்.
செயல் -1
புகைபிடித்தல்
மற்றும் புகையிலை மெல்லுதலால் பாதிக்கப்பட்ட நபர்களின் படங்களை சேகரிக்கவும்.
அதனால் பாதிப்பிற்கு உள்ளாகும் உடலின் பாகத்தையும், அதனைத்
தொடர்ந்து ஏற்படும் உடல் நலத் தீங்கினையும் அடையாளம் காண்க.
புகைபிடித்தல் மற்றும்
புகையிலை மெல்லுதலினால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து இளம்பருவத்தினரும் வயதானவர்களும்
இப்பழக்கத்தை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். தகுந்த ஆலோசனை மற்றும் மருத்துவ
உதவிகள், அடிமையானவர்களை
அப்புகைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட உதவும்.
மேலும் அறிந்து கொள்வோம்
புகையிலை
எதிர்ப்புச் சட்டம் மே-1 2004இல் கொண்டு வரப்பட்டது. 2030-ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் அளவில்
இறப்பினை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒற்றைக் காரணியாக புகையிலை திகழும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மே - 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு
நாள்)