பருவம் 3 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - உள்ளங்கையில் ஓர் உலகம் | 3rd Tamil : Term 3 Chapter 1 : Ullangaiyil or ulagam
1. உள்ளங்கையில் ஓர் உலகம்
உலகைச் சுற்றிக் காட்டிடுவேன்
உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன்
என்ன வேண்டும் என்றாலும்
எண்ணும் முன்னே சொல்லிடுவேன்
இணைய வழியில் அனைவரையும்
இணைந்தே இருக்கச் செய்திடுவேன்
கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்
விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன்
தகவல் களஞ்சியம் நான்தானே
தரணி போற்றி மகிழ்ந்திடுமே
உலகைச் சுருக்கி உன்கையில்
உலவிடும் கணினி நான்தானே
என்றும் ஓய்வு எனக்கில்லை
எதிலும் சோர்வு என்றில்லை
எந்தப் பொருளின் செய்தியையும்
எடுத்துத் தருவேன் ஒருநொடியில்
உள்ளங்கையில் ஓர் உலகம்
உள்ளதைக் காட்டும் கண்ணாடி
என்றே என்னை எல்லாரும்
ஏற்றம் கொண்டே அழைத்திடுவார்
பாடல் பொருள்
கணினி நமக்குத் தகவல்களை உடனடியாகத் தருவதால் மன மகிழ்வு ஏற்படுகிறது. இணையத்தின் மூலமாக நல்ல நட்பை உருவாக்குகிறது. கடிதப் போக்குவரத்தை விரைந்து செயல்படுத்துகிறது. கணினி, சிறந்த தகவல் களஞ்சியமாகச் செயல்படுகிறது. உலகையே உள்ளங்கையில் தரவல்லது. ஓய்வில்லாமல் உழைப்பதால், எந்தச் செய்தியைக் கேட்டாலும் உடனடியாக எடுத்துத் தருகிறது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் கணினி செயல்படுகிறது.
சொல் பொருள்
தரணி - உலகம்
சோர்வு - களைப்பு
ஏற்றம் - உயர்வு
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
1. அலையில் மிதந்த மீனை
வலையில் பிடிச்சா விழுகல
கலகலன்னு சிரிப்பு வரல
2. மரக்கிளைய கரத்தால் பற்றி
தொங்கயில கையச் சுழற்றினதானல
கீழே விழுந்தேன்
3. காத்துல விழுந்த பழத்துல
சுவையில்லனு சொல்ல முடியல
இந்த நினைப்பில நண்பன்
விழுந்தான் பள்ளத்தில
குழு விளையாட்டு
சொற்களைச் சொல்! மகுடம் சூட்டிக் கொள்!
மாணவர்களை இரு குழுவாகப் பிரித்துக் கொள்க. சொற்களுக்குரிய அட்டைகளை
என்றவாறு தயார் செய்து கொள்க. எழுத்துகளுக்குரிய அட்டைகளை தி, பு, த, ந, பி என்றவாறும் தயார் செய்து கொள்க.
முதல் குழுவில் உள்ளவர்கள் எழுத்துகளை ஒவ்வொருவராகக் கூற இரண்டாம் குழுவில் உள்ளவர்கள் உரிய சொற்களைக் கூறச் செய்க. பின்னர், குழுவை மாற்றி விளையாட்டைத் தொடர வேண்டும். சரியாகச் செய்த மாணவர்களுக்கு மகுடம் வைத்துப் பாராட்டுக.
அறிந்து கொள்வோம்
அலைபேசியை முதன்முதலில் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்
மின்னல் வெட்டும்போது அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அலைபேசி இடிதாங்கிபோல் செயல்பட்டு மின்னலை உங்கள் பக்கம் ஈர்த்துவிடும்.
கலையும் கைவண்ணமும்
கொடுக்கப்பட்ட படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க.