இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum
வாழ்வியல்
திருக்குறள்
5. இல்வாழ்க்கை
1) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
2) துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
3) தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
4) பழியஞ்சிப் பார்த்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
5) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
6) அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?.
7) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
8) ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
9) அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
10) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
6. வாழ்க்கைத் துணை நலம்
1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
4) பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?
5) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.
6) தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.
7) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
8) பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
9) புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
10) மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
11. செய்ந்நன்றி அறிதல்
1) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
2) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது,
3) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது,
4) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணயாக்
கொள்வர் பயன்தெரி வார்.
5) உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
6) மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
7) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
8) நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
9) கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
10) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
18. வெஃகாமை
1) நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
2) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
3) சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர்.
4) இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்.
5) அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
6) அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
7) வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
8) அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
9) அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு
10) இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
26. புலால் மறுத்தல்
1) தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
இடத்துக் எங்ஙனம் ஆளும் அருள்?
2) பொருள் ஆட்சி போற்றாதார்க்குஇல்லை; அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
3) படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
4) அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
5) உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
6) தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
7) உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
8) செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
9) அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
10) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
31. வெகுளாமை
1) செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
2) செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
3) மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்.
4) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
5) தன்னைத்தான் காக்கின் சினம்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
6) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
7) சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
8) இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
9) உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
10) இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
38. ஊழ்
1) ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.
2) பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை
3) நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
4) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
5) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
6) பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.
7) வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
8) துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
9) நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?
10) ஊழின் பெருவலி யாஉள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
43. அறிவுடைமை
(1) அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.
2) சென்ற இடத்தால் செலவிடா தீதஒரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
3) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
4) எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
5) உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
6) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
7) அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
8) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
9) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதுஓர் நோய்.
10) அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
46. சிற்றினம் சேராமை
1) சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
2) நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.
3) மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
4) மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு.
5) மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.
6) மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
7) மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
8) மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
9) மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
10) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.
67. வினைத்திட்பம்
1) வினைத்ததிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
2) ஊறுஓரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
3) கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
4) சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
5) வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்.
6) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
7) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
8) கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
9) துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை.
10) எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்டம்
வேண்டாரை வேண்டாது உலகு.
69. தூது
1) அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு.
2) அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
3) நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
4) அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவிடையான் செல்க வினைக்கு
5) தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.
6) கற்றுக்கண் அஞ்சான் செலக்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
7) கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
8) தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
9) விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
10) இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
1) அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகு வார்.
2) மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
3) போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
4) செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து.
5) எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
6) குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல்
வேண்டுப வேட்பச் சொலல்.
7) வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
8) இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
9) கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
10) பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
89. உட்பகை
1) நிழல் நீரும் இன்னாத இன்னா ; தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
2) வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
3) உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவுஇடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
4) மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்.
5) உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
6) ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
7) செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
8) அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
9) எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
10) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.
93. கள் உண்ணாமை
1) உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டுஒழுகு வார்.
2) உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
3) ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
4) நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
5) கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்அறி யாமை கொளல்.
6) துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
7) உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்.
8) களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
9) களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று.
10) கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
94. சூது
1) வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.
2) ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதுஓர் ஆறு.
3) உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒய்ப் புறமே படும்.
4) சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
5) கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
6) அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியால் மூடப்பட் டார்.
7) பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
8) பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
9) உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்,
10) இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
• வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துக்கள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
• திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம்.
• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வைக்கலாம்.
• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகள் சொல்லவும் நாடகங்களை நடத்தவும் செய்யலாம்.
• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து "வினாடி வினா" நடத்தலாம்.
• உலகப் பொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.
குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.