பருவம் 3 இயல் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் - வீம்பால் வந்த விளைவு | 3rd Tamil : Term 3 Chapter 3 : Veempal vantha vilaivu
3. வீம்பால் வந்த விளைவு
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான். ஒருநாள் அன்றைய வேலையை முடித்துவிட்டுக் களைப்புடன் வந்த அவன், சற்றுநேரம் ஓய்வு எடுக்க நினைத்தான். தனது குதிரையை அங்கிருந்த மரத்தடியில் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்
அச்சமயம் வீரன் ஒருவன், தனது குதிரையுடன் அதே மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான். வணிகன் அந்த வீரனிடம், "உங்கள் குதிரையை சற்றுத் தள்ளி கட்டுங்கள். ஏனெனில், எனது குதிரை முரட்டுத்தனமானது" என்றான். அதற்கு வீரன், "முடியாது நான் இங்குத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் குதிரையைக் கட்டிவிட்டு உணவு உண்ணச் சென்றான்.
வணிகன் கண் அயர்ந்துவிட்டான். வீரன் உணவு உண்ணும் இடைவேளையில் வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டது. அதனால், வீரனுடைய குதிரையின் கால் உடைந்துவிட்டது. வீரன் உடனே வணிகனை எழுப்பினான். "என் குதிரையின் கால் உன் குதிரையினால் உடைந்துவிட்டதால், எனக்கு நஷ்டஈடு கொடு" என்று வணிகனிடம் கேட்டான் . அதனை வணிகன் ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் கட்டும்போதே என் குதிரையை முரட்டுக் குதிரை என்றேன். நீ தானே நான் சொன்னதை கேட்காமல் கட்டினாய்?" என்று வணிகன் மறுத்துவிட்டான்.
வணிகனே வா! நீதிபதியிடம் செல்லலாம்," என்றான் வீரன். இருவரும் நீதிபதியிடம் சென்றனர். வீரன் அவரிடம் நடந்ததைச் சொன்னான். நீதிபதி, வீரன் சொன்னதைக் கேட்டுவிட்டு, வணிகனிடம் "என்ன நடந்தது?" எனக் கேட்டார். வணிகனோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். உடனே நீதிபதி, "வணிகன் ஊமை போலிருக்கிறதே, காதும் கேட்கவில்லையோ, பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல் இருக்கிறானே" என்றார்.
அதற்கு வீரன், "அவன் பேசுவான், ஐயா. அவன்தான் எனது குதிரை முரட்டுத்தனமானது உனது குதிரையை அருகில் கட்டாமல் தூரத்தில் கட்டு எனக் கூறினான். நான்தான், எனது குதிரை வீரக்குதிரை என்று சொல்லிக் கட்டி வைத்தேன்” எனக் கூறி முடித்தான்.
வீரன் கூறியதைக் கேட்ட நீதிபதி. "வீரனே!" வணிகன் எதுவும் கூறத் தேவையில்லை. நீயே உனது குற்றத்தை ஒப்புக் கொண்டாய். "வீம்புக் குணம் படைத்த உனக்கு, வணிகன் எந்த வகையிலும் நஷ்ட ஈடு தரத் தேவையில்லை" என்று தீர்ப்பு கூறினார்.
நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும், வீம்புக் குணம் படைத்த வீரன் முகத்தில் அசடு வழிந்தது. அதைக்கேட்ட வணிகன், "ஐயா நீதிபதி அவர்களே! நான் மௌனமாய் இருந்ததற்கு மன்னித்துவிடுங்கள்; உண்மையைப் புரிந்துகொண்டு நல்ல தீர்ப்பளித்தீர்கள்; மிகவும் நன்றி!" என்று கூறினான்.
நீதிக் கருத்து: வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.
உயர்திணையும் அஃறிணையும்
எழிலி: "அப்பா, அப்பா, இங்கே வாங்க, இந்தப் பூனையைப் பாருங்க. காலெல்லாம் ஒரே சேறு. அந்தச் சேற்றுக் காலோட நம்ம வீட்டுக்குள்ளும் வந்திருக்கு".
அப்பா: "அட, ஆமா! எங்கேயிருந்து சேற்றைப் பூசிக்கொண்டு வந்ததுன்னு தெரியலேயே?"
எழிலி: "என்னப்பா, இது? தரையில என்ன இருக்குன்னு இந்தப் பூனைக்குத் தெரியாதா? பார்த்து நடக்கலாம்ல."
அப்பா: "அது சரி, எழிலி, நீயா இருந்தா என்ன செய்வே?"
எழிலி: ஐ! நானா இருந்தா, கால்ல சேறு படாம ஒரே தாண்டா தாண்டி ஓடி வந்திருப்பேனே"
அப்பா: அதைத்தான் நானும் சொல்ல வர்றேன். சேற்றில் கால் பட்டால் அழுக்காகும்னு உனக்குத் தெரியுது. ஆனால், பூனைக்குத் தெரியலே. ஏன் தெரியுமா?
எழிலி: தெரியலயே, நீங்களே சொல்லுங்கப்பா.
அப்பா: ஏன்னா, நாமெல்லாம் உயர்திணை. விலங்கு, பறவையெல்லாம் அஃறிணை. அதனாலதான், என்ன நடக்கப்போகுதுன்னு நமக்குத் தெரியுது. ஆனா, விலங்கு, பறவைக்கு நாம என்ன செய்றோம்? செய்தா என்னாகும்னு புரிந்துகொள்ள முடியல.
எழிலி: ஓ! அதுதானா? அது சரிப்பா, உயர்திணை, அஃறிணைன்னு சொன்னீர்களே, அப்படின்னா என்னப்பா?
அப்பா: நான் கேட்கிறதுக்கு முதல்ல விடை சொல்லு, உன்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்காங்க?
எழிலி: இம். இம்... நீங்க, அம்மா, அண்ணா , அக்கா, தம்பி, சிற்றப்பா, பெரியப்பா, அத்தை அப்புறம்...என்கூட விளையாடுவாங்களே மீனா, ரோசி, கம்ரூன், பாபு, சுரேஷ், கௌதம், சீனு, ராதிகா, ரம்யா, ஐசு, சிருஷ்டி, பாரு, வித்யூன்.....
அப்பா: போதும்....போதும். உனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி இருக்கிறவங்கன்னு நீ இப்ப சொன்னேல, இவங்க எல்லாருக்கும் உயிரிருக்கு. அதுமட்டுமா? நல்லது எது? தீயது எதுன்னு பகுத்துப் பார்க்கும் பண்பும் இருக்கு. இவங்க மட்டுமில்லாம நம்மைப்போலவே பண்புகள் இருக்கிற மக்கள், தேவர், நரகர் இவங்களையெல்லாம் உயர்திணைன்னுதான் சொல்றாங்க. அதுசரி, எழிலி. நீ இன்னும் வேறெ என்னல்லாம் உன்னைச் சுற்றி இருக்குன்னு சொல்லலியே?
எழிலி: வேறே என்னப்பா இருக்கு?
அப்பா: இதோ இந்த நாற்காலி, மேசை, குடம், மின்விசிறி, புத்தகம் இதுமட்டுமல்லாம பூனை, நாய், மாடு, ஆடு முதலான விலங்குகள், கோழி, காகம், குயில், மயில், கிளி முதலான பறவைகள் அப்படின்னு நிறைய பார்க்கிறாய் அல்லவா! இவற்றில் பறவை, விலங்குகளுக்கு எல்லாம் உயிர் இருக்கு. ஆனால் நாற்காலி, மின்விசிறி இவை போன்றவற்றிற்கு உயிரில்லை. அதனால, இந்த மாதிரி உயிருள்ள, உயிரற்ற பொருள்களெல்லாம் உயர்திணைல சேர்க்க முடியாது. இவையெல்லாம் உயர்திணை அல்லாத திணை. அதனாலதான் அஃறிணைன்னு சொல்றோம். நிலம், நீர், மலை, மரம், கடல் இவையெல்லாம்கூட அஃறிணைதான்.
எழிலி: ஆனா நான் பார்க்கிற பொருள்ல இதுதான் உயர்திணை, இதுதான் அஃறிணைன்னு எப்படிப்பா கண்டுபிடிக்கறது?
அப்பா: அடடே, நீ நல்லாவே யோசிக்கிற எழிலி. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பேரு இருக்குல்லே, அதை வைத்து நீ எளிதாக் கண்டுபிடிக்கலாம். அந்தப் பெயரை வைத்தே அதற்கு உயிரிருக்கா, நம்மைப்போல அது சிந்திக்குமா? வேலை செய்யுமான்னு கண்டுபிடிக்கலாம்ல. பெயரை வைத்தே என்ன திணை, பால், எண், இடம்னு எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம். இதைப்பற்றி இன்னும் விரிவா நாளைக்குச் சொல்றேன். இதுவரைக்கும் சொன்னதில என்ன புரிஞ்சுக்கிட்டன்னு எனக்கும் தெரியணும்ல தென்னை மரம் உயர்திணையா, அஃறிணையா, எங்கே சொல்லு பார்க்கலாம்.
எழிலி: இம்... இம். மரமெல்லாம் அஃறிணைதானே. தென்னைமரம் அஃறிணைதாம்பா. இப்ப நல்லாப் புரிந்துகொண்டேன் அப்பா.
திணை என்பது, ஒழுக்கம். அதன் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என இரண்டாகக் கூறுவர்.
எது உயர்திணை? எது அஃறிணை?
பிரித்து அறிவோமா?