அலகு - III
பாடம் - 5
செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்
பாடஉள்ளடக்கம்
5.1 செரிமான மண்டலம்
5.2 உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு
5.3 புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் ஆகியவை உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல்
5.4 கழிவு வெளியேற்றம்
5.5 உணவூட்டப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள்
5.6 கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் கலோரி மதிப்பு
5.7 உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள்
உணவூட்டப் பொருட்களை பெறுதலும் பயன்படுத்தலும் அனைத்து உயிரிகளுக்குமான அடிப்படை செயலாகும்.
கற்றலின் நோக்கம்:
• உணவுப்பாதை மற்றும் செரிமானச் சுரப்பிகளை அடையாளம் கண்டு அதன் பகுதிகளை விளக்குதல்.
• உணவுப்பாதையின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் செரித்தல் நிகழ்வுகளைக் கற்றல்.
• செரித்தலில் நொதிகளின் பங்கை அறிதல்.
• செரிமானக் குறைபாடுகளுக்கான அறிகுறிகளை அறிதல்.
• ஆற்றல் உற்பத்தி, உடல் கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் உடல் செயற்பாடுகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றில் உணவூட்டப் பொருட்களின் பங்கைக் கற்றல்.
• உணவூட்டக் கோளாறுகள் மற்றும் உணவுப்பாதை கோளாறுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நாம் அனைவரும் உணவை உட்கொள்கிறோம். காலைச் சிற்றுண்டி எடுத்துக்கொள்ளாத நிலையில் நண்பகலில் நாம் உணர்வது யாது? நாம் உண்ணும் உணவு ஆற்றலை அளிப்பதுடன், உடல் வளர்ச்சி, மற்றும் பழுதுபட்ட திசுக்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான ஆற்றலையும் கரிமப் பொருட்களையும் அளிக்கிறது. மேலும் நமது உடற்செயலியல் பணிகளை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கிறது. கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ப்பொருட்கள் மற்றும் நீர் ஆகியவையே நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் உட்பொருட்களாக உள்ளன. நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இருந்து உணவைப் பெறுகின்றோம். நம் உணவிலுள்ள பெரிய மூலக்கூறுகள் அப்படியே நமது செல்களுக்குள் நுழைய முடியாது. எனவே இவற்றைப் பகுத்து உட்கிரகிக்கும் தன்மைக்கேற்ற சிறிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்குச் செரிமான மண்டலம் தேவைப்படுகிறது. தாவரங்கள் உணவைத் தாமே தயாரிக்கும் தன்மையுடைய தன்னூட்ட உயிரிகளாதலால் (autotrophs) அவற்றிற்குச் செரிமான மண்டலம் தேவையில்லை. உணவூட்டப் பொருட்கள், நீர் மற்றும் மின்பகு பொருட்களைப் புறச்சூழலிலிருந்து பெற்று இரத்தச் சுற்றோட்டத்தின் வழியாகச் செல்களில் கொண்டு சேர்ப்பது செரிமான மண்டலத்தின் முதன்மைப் பணி ஆகும்.