மருதன் இளநாகனார் | பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam
இயல் ஒன்று
கவிதைப்பேழை
கவின்மிகு கப்பல்
நுழையும்முன்
கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில், அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும். அச்சம் தரும் கடலில் அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர். காற்றின் துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறத்தைச் சங்கப்பாடலின்வழி அறிவோமா?
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய
- மருதன் இளநாகனார்
சொல்லும் பொருளும்
உரு - அழகு
போழ - பிளக்க
வங்கூழ் - காற்று
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
வங்கம் - கப்பல்
எல் - பகல்
கோடு உயர் - கரை உயர்ந்த
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
பாடலின் பொருள்
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
நூல் வெளி
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
தெரிந்து தெளிவோம்
எட்டுத்தொகை நூல்கள்
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு