அலகு 15
சுற்றுச் சூழல்வேதியியல்
பசுமை வேதியியல் அடிப்படையில் புதிய வேதி சேர்மங்களை உருவாக்கியமைக்காக 2005 ஆம் ஆண்டு நோபல் பரிசு விஸ் சாவின், ராபர்ட் H. கிரப்ஸ், மேலும் ரிச்சர்ட் R. ஸ்ராக் ஆகிய அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.
1971 விஸ் சாவின் மெட்டாதிசிஸ் வினைகள் வினையூக்கிகளாகச் செயல்படும் உலோகச் சேர்மங்களை பற்றி விளக்கினார் ரிச்சர்ட் R ஷ்ராக் 1990 மெட்டாதிசிஸ் வினைக்கான செயல்திறன் மிக்க வினையூக்கியினை முதன்முதலில் உருவாக்கினார். இரண்டாண்டுகளுக்கு பின்னர், ராபர்ட் H. கிரப்ஸ் மேலும் சிறந்த காற்றில் நிலைப்புத் தன்மை உடைய பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வினையூக்கியினை உருவாக்கினார்.
கற்றலின் நோக்கங்கள்
இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்னர்
● சுற்றுச்சூழல் வேதியியலின் பல்வேறு கருத்துக்களை பாராட்டுதல்.
● பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடுகளை வகைப்படுத்துதல்.
● துகள் மாசுபடுத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகளை அடையாளம் காணுதல்.
● அமிலமழை, பசுமைக்குடில் விளைவு, ஓசோன் சிதைவு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றின் தீங்கு விளைவுகளை விளக்குதல்.
● நீர் மாசுபடுதலுக்கான காரணங்களை அறிதல் மற்றும் குடிநீருக்கான பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை அறிதல்.
● பல்வேறு வகை மாசுபடுதலை கட்டுப்படுத்தும் உத்திகளை முன்னிலைப்படுத்துதல்
● பசுமை வேதியியலின் அர்த்தத்தை பாராட்டுதல் மற்றும் அன்றாட வாழ்வில் பசுமை வேதியியலின் முக்கியத்துவத்தை புரிந்துணர்தல்.
ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்
அறிமுகம்:
"சுற்றுச்சூழல்" எனும் வார்த்தையை நாம் நன்கு அறிவோம். இவை நம்மைச் சுற்றியுள்ள சூழலை உருவாக்கும் அனைத்தையும் குறிப்பதாகும். மேலும் பூமியில் வாழ்வதற்கான நம்முடைய பகுதியின் மீதும் தாக்கத்தை உண்டாக்குகிறது. சுற்றுச்சூழல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று, புவிபரப்பின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள நீர், மேலும் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். சமீப நாள்களில் மக்கள் “சுற்றுச்சூழல்" பற்றி விவாதிக்கும்போது, பெரும்பாலான நேரங்களில் நமது கிரகத்தின் ஒட்டுமொத்த நிலையையோ, அல்லது அது எத்தகைய ஆரோக்கிய நிலையில் உள்ளது? என்பதையோ தான் குறிப்பிடுகிறார்கள்.
சுற்றுச்சூழல் வேதியியல் என்பது காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள் மற்றும் அவற்றின் வேதிச்செயல்முறைகள் பற்றி பயிலும் வேதியியலின் பிரிவு ஆகும். இது மனிதர்களின் நேரடி நடவடிக்கைகளின் காரணமாக, சுற்றுச்சூழலில் நிகழும் வேதிச் செயல்முறைகளை பற்றி கற்பிக்கிறது. இது மாசுபாடுகளின் மூலங்கள், விளைவுகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு முறைகள் பற்றி விவாதிக்கிறது.