சுற்றுச் சூழல்வேதியியல் - சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் உத்திகள் | 11th Chemistry : UNIT 15 : Environmental Chemistry
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் உத்திகள்:
காற்று, நீர் மற்றும் மண் மாசுபாட்டை கற்றறிந்த பின்னர், பொறுப்புள்ள குடிமகனாக, நாம் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க, கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். தங்களின் வசிப்பிடம் மட்டுமல்லாமல், தேசிய மற்றும் உலக அளவிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த தாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை பற்றி சிந்தியுங்கள். நாம், நம் சுற்றுச்சூழலுக்குள்ள அச்சுறுத்தலை உணர வேண்டும், இத்தகைய பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி நம் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு அறிவுக்கண் திறப்பவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த பின்வரும் உத்திகளைப் பற்றி நாம் சிந்திக்க முடியும்.
1. கழிவு மேலாண்மை: கழிவுகளை முறையாக அகற்றுவதன்மூலம் சூழல்மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும்.
2. மறுசுழற்சி: அகற்றப்பட்ட கழிவு பொருள்களில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இது, நில ஆக்கிரமிப்பை குறைக்கிறது மேலும் தேவையில்லாத பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றுகிறது.
3. சில குறிப்பிட்ட தொழில்முறைகளில் பயன்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட கரைப்பான்களை நீக்கி குறைந்த நச்சுத் தன்மை கொண்ட கரைப்பான்களை பதிலீடு செய்தல்.
4. குறைந்தளவு சல்பரை கொண்டுள்ள எரிபொருட்களை பயன்படுத்துதல் (எடுத்துக்காட்டு: சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி)
5. அதிக மரங்களை வளர்த்தல்
6. வாகனப்புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சிகளினால், பசுமை வேதியியல் என்றழைக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு சாதகமான வேதிப்பொருள்களை தொகுக்கக்கூடிய வேதியியல் உருவாக்கப்பட்டது.