பொருளாதாரம் - ஏன் கணிதம் கற்க வேண்டும்? | 11th Economics : Chapter 12 : Mathematical Methods for Economics
1. ஏன் கணிதம் கற்க வேண்டும்?
நுகர்வு, உற்பத்தி, பகிர்வு மற்றும் கொள்கை முடிவுகள் போன்றவற்றில் பல்வேறு எண்ணளவை மாறிகள் மற்றும் சார்புகள் பற்றி பொருளியல் கூறுகிறது. கணிதமுறைகள் எண்ணளவை மாறிகளை சிறந்த முறையில் பயன்படுத்திதுல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு பயனுள்ளவையாக அமையும்.
நீண்ட விளக்கமான பொருளியல் பாடப்பொருளை தெளிவாக எளிய குறியீடுகள் கொண்ட கணிதமுறைகள் மூலம் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, மேல்நிலைப்பள்ளியொன்றில் பேனாவின் விலை பூஜ்யமாக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவைப்படும் பேனாக்களின் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. பேனாவின் விலை ஒவ்வொரு ₹1 உயரும்போதும் தேவை 10 என்ற அளவில் குறைகிறது. இதனை கணித குறியீட்டில்,
Q = 200-10P என எளிதாகக் குறிப்பிடலாம். இங்கு Q என்பது தேவை அளவு மற்றும் P என்பது விலை. இவ்வாறு விரிவான தகவலை எளிய சார்புகள் மற்றும் சமன்பாடுகள் வடிவில் விவரிக்கவும், தொடர்புபடுத்தவும் முடிகிறது.
சர் வில்லியம் பெட்டி என்ற பொருளியலாளர் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களை எண்கள், எடை மற்றும் அளவுகளில் சுருக்கி அமைக்க வேண்டும் என்ற கருத்தினை வைத்தார். பொருளியலில் கணிதத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் இவரே. இத்தாலிய பொருளியலாளர் ஜியோவாணி செவா (Giovanni Ceva 1711) முதன் முதலாக கணித முறைகளைப் பயன்படுத்தி பொருளியல் கருத்துக்களை எழுதத் தொடங்கினார்.
1. பொருளியல் பிரச்சனைகளை மிகவும் சுருக்கமான வடிவில் வழங்கிட கணிதமுறைகள் துணைபுரிகின்றன.
2. பொருளியல் கருத்துக்களை விளக்கிட கணித முறைகள் உதவுகின்றன.
3. பொருளியல் ஆய்வில் அதிக எண்ணிக்கையிலான மாறிகளை உபயோகிக்க கணிதமுறைகள் உதவுகின்றன.
4. அரசாங்கமோ அல்லது எந்த ஒரு அமைப்போ நடைமுறைப்படுத்தும் பொருளியல் செயல்பாடுகளின் தாக்கம் அல்லது விளைவுகளை அளவிட கணித முறைகள் பயன்படுகின்றன. அத்துடன் வேறு பல்வேறு பயன்பாடுகளும் நிச்சயம் உள்ளன.
சிந்திக்க, செயல்பட
• பொருளியலின் தந்தை யார்? தனது பங்களிப்புகளில் ஏதேனும் கணித முறைகளை அவர் பயன்படுத்தியுள்ளாரா? ஆம் எனில், பட்டியலிடுக.
• உனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கணித முறைகளை கண்டறிக.