பாரதியார் | இயல் 1 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தமிழ்மொழி வாழ்த்து: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 1 : Tamil inbam
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக்
குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
[விடை : அ) வைப்பு]
2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
[விடை : ஆ) என்று + என்றும்]
3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
[விடை : இ) வானம் + அளந்தது]
4. அறிந்தது + அனைத்தும்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
[விடை : இ) அறிந்ததனைத்தும்]
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம்அறிந்து
ஆ) வான்அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
[விடை : இ) வானமறிந்த]
தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள
மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
விடை
வாழ்க – வானமளந்த
வாழிய – வாழ்க
எங்கள் – என்றென்றும்
வண்மொழி – வளர்மொழி
குறுவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
விடை
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும்
தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு
வாழ்கிறது.
2. தமிழ் எவற்றை அறிந்து
வளர்கிறது?
விடை
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும்
அறிந்து மேன்மேலும் வளர்கிறது.
சிறுவினா
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
விடை
● எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
● எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
● ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட
தமிழே! வாழ்க.
● உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
● எங்கும்
உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
● தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
● பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள்
நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
● என்றென்றும் தமிழே! வாழ்க!
● வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை
அறிந்து வளரும் தமிழே! வாழ்க.
சிந்தனை வினா
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
விடை
● நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி
வரலாற்றுத் தொன்மை,
– பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம்
ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
● அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
● தமிழ் மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்கு
● இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான்
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.
கற்பவை கற்றபின்
1. 'தமிழ்மொழி வாழ்த்து' பாடலை இசையுடன் பாடி
மகிழ்க.
விடை
* வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
– பாரதியார்
2. படித்துச் சுவைக்க.
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவனே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ: காதல்நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே!
- து. அரங்கன்