Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

அலகு 3 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் | 8th Social Science : Civics : Chapter 3 : Understanding Secularism

   Posted On :  26.08.2023 02:41 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

கற்றலின் நோக்கங்கள் >சமயச்சார்பின்மை என்பதன் பொருளைப் புரிதல் >சமயச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை அறிதல் >அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் போற்றுதல் >சமயச்சார்பற்ற கல்வியின் முக்கியத்துவத்தைப் பகுப்பாய்தல் >சமயச்சார்பின்மை தொடர்பான அரசியலமைப்புப் பிரிவுகளை விவாதித்தல்

அலகு - 3

சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்



கற்றலின் நோக்கங்கள்

>சமயச்சார்பின்மை என்பதன் பொருளைப் புரிதல்

>சமயச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை அறிதல்

>அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் போற்றுதல்

>சமயச்சார்பற்ற கல்வியின் முக்கியத்துவத்தைப் பகுப்பாய்தல்

>சமயச்சார்பின்மை தொடர்பான அரசியலமைப்புப் பிரிவுகளை விவாதித்தல்

 

இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும். - ஜவகர்லால் நேரு

 

அறிமுகம்

இந்தியா பல சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகள் கொண்ட நாடாகும். இது இந்து, சமணம், புத்தம் மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு பெரும் சமயங்களின் பிறப்பிடமாகும். நமது நாட்டில் பல்வேறு சமயங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்கள் நீண்டகாலமாக அமைதியுடன் வாழ்கின்றனர். நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருப்பதால் அனைத்து சமயங்களையும் சகித்துக்கொள்ளும் தன்மை அவசியமானதாகும். சமயச்சார்பின்மையின் நோக்கமானது சமய நம்பிக்கை கொண்டவர்களும் மற்றும் எந்த சமயத்தையும் சாராதவர்களும் அமைதியுடன் இணக்கமாக வாழ்வதற்கான சமூகத்தை உருவாக்குவது என்பதாகும்.

இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரிய


உங்களுக்குத் தெரியுமா?

•சமயச்சார்பின்மை - என்ற சொல் லத்தீன் வார்த்தையான செகுலம்  (saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் காலம் (an age) அல்லது உள்ளுணர்வு காலம் (the spirit of an age) ஆகும்.

•ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர் secularism என்ற பதத்தை உருவாக்கினார்.

தனிநபர்கள் இந்தியச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சமயச்சார்பின்மையை நிலை நாட்ட பங்களித்துள்ளனர். இந்தியா போன்ற பல்வேறு சமய பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை என்பது மதிப்புமிக்க ஒன்றாகும்.

 

சமயச்சார்பின்மை எதனைக் குறிக்கிறது?

சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகுமுறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு ஆகும். இது அனைத்து சமய சமூகங்களுடனும் அரசு கொண்டுள்ள நடுநிலைத்தன்மை மற்றும் சமத்துவக் கொள்கையாகும்.

சமயச்சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். பரந்த அளவில் கூறுவதென்றால் அரசானது சமய விவகாரங்களிலோ அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளிலோ தலையிடாது இருத்தலாகும். இதன் பொருள் ஒவ்வொரு குடிமகனும் தனது மனசாட்சியின்படி சுதந்திரமாக அவரது நம்பிக்கையை பரப்புதல், பின்பற்றுதல் மற்றும் சமயத்தின்மீது இருக்கும் நம்பிக்கையை வெளியிடுதல், மாற்றிக்கொள்ளுதல் அல்லது இல்லாமல் இருத்தல் என்பதாகும்.

நாத்திகம்: கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல்.

சமயச்சார்பின்மை: அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.

 

சமயச்சார்பின்மையின் நோக்கங்கள்

•ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக் குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.

•ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.

•அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனி நபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது,

"சமயம் நமக்குப் பகைமையைப் போதிக்கவில்லை; நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு என்ற கவிஞர் இக்பாலின் எளிய வாக்கியம் சமயச்சார்பின்மை கருத்தை விளக்குகிறது.

அசோகரின் 12வது பாறை அரசாணை


அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாட்டாது என்று கி.மு (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டிலேயே அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார். தனது 12வது பாறை அரசாணையில் அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்பு தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சமயச்சார்பற்ற நாட்டின் பண்புகள்

சுதந்திர கோட்பாடு - எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.

சமத்துவக் கோட்பாடு - அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்.

நடுநிலைமைக் கோட்பாடு - சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்.

சமயச்சார்பற்ற நாடு என்பது ஒரு நாடு எந்தவொரு சமயத்தையும் அதிகாரப்பூர்வமாக ஊக்குவிக்காமல் ஒவ்வொரு சமயத்தையும் சமமாக நடத்துதல் என்பதாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான உரிமையை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சமய நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்துதல், பின்பற்றுதல் மற்றும் பரப்பும் உரிமையையும் வழங்குகிறது.அரசாங்கம் அனைத்து சமயங்கள் தொடர்பாகவும் நடுநிலைமையை கொண்டிருப்பதோடு எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை . சமயச்சார்பற்ற ஒரு நாட்டில் எவருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை அளிப்பதில்லை என்பதோடு சமய நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதில்லை . அனைத்து குடிமக்களும் எவ்வித சமய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அரசுப் பணியில் நுழைய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். கல்விக் கூடங்களில் முற்றிலும் சமய போதனைகள் இருத்தல் கூடாது என்பதோடு எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கும் ஆதரவாக எந்த வரிகளும் வசூலிப்பதில்லை .


சமயச்சார்பின்மையின் முக்கியத்துவம்

இந்தியாவில் அனைத்து சமயங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சமயச்சார்பின்மை கோட்பாடு படிப்படியாகத் தோன்றியது. பல்வேறு சமயக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்குச் சமயச்சார்பற்ற நாடு அவசியமாகும். அது சமஉரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.


முகலாய பேரரசர் அக்பர் மதசகிப்புத் தன்மை கொள்கையைப் பின்பற்றினார். அவருடைய தீன் - இலாஹி (தெய்வீக நம்பிக்கை) மற்றும் சுல் - இ - குல் (அனைத்து சமயத்தினரிடையே அமைதி மற்றும் நல்லிணக்கம்) ஆகியவை அவரின் சமயசகிப்புத் தன்மையை எடுத்தியம்புகிறது.


அரசியலமைப்பும் சமயச்சார்பின்மையும்

சமயச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அனைத்து மக்களும் அவர்களது சமயத்தை பின்பற்ற சுதந்திரம் பெற்றிருந்தால் மட்டுமே வலிமையான மற்றும் ஒற்றுமையான நாட்டை உருவாக்க இயலும் என்பதை உணர்ந்திருந்தனர். எனவே சமயச்சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை . பின்னர் 1976ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது (இந்தியா ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு). நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமானது தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தனி மனித மாண்புடனும் கண்ணியத்துடனும் ஊக்குவிப்பதாகும்.

நாட்டிற்கான தனி சமயம் எதுவும் இந்தியாவில் இல்லை. அரசானது எந்தவொரு சமயத்தையும் ஏற்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு சிறப்பு ஆதரவினையோ அளிப்பதில்லை . இந்திய அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது. இது 1954ல் நடைபெற்ற பம்பாய் மாநிலம் - ரத்திலால் பன்சந்த் வழக்கில் மேன்மைமிக்க உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.


கஜூராஹோவில் காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்து கோவிலில், வழக்கமான சிகரத்திற்குப் பதிலாக இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்புப் பின்வரும் தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளது.

அ. அரசானது எந்த ஒரு சமயத்தாலும் தன்னை அடையாளம் காணாது அல்லது சமயத்தால் கட்டுப்படுத்தப் படாததாகவும் இருக்கும்.

ஆ. ஒவ்வொருவரும் அவரது விருப்பதிற்கேற்ப எந்த ஒரு சமயத்தைப் பின்பற்றும் உரிமையை அரசு உறுதி செய்கிறது.

இ. எந்த சமயத்திற்கும் அரசு முன்னுரிமை சலுகை அளிப்பதில்லை .

ஈ. எந்த ஒரு நபருக்கும் அவரது சமய நம்பிக்கையின் காரணமாக அரசு எவ்வித பாகுபாடும் காட்டாது.

உ. இது இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்குவதோடு தனிமனித மாண்பிற்கும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கிறது.

சமயச்சார்பற்ற இந்திய நாடானது அனைத்துச் சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.


அரசியலமைப்புப் பிரிவுகளின் அடித்தளம்

பிரிவு 15: சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்கிறது.

பிரிவு 16: பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்.

பிரிவு 25(1): எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.

பிரிவு 26: சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்.

பிரிவு27: எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரிசெலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.

பிரிவு 28: சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.

பிரிவு 29 (2): அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை.


நமக்கு ஏன் சமயச்சார்பற்ற கல்வி தேவை?

கல்வியில் சமயச்சார்பின்மை என்பது பொதுக்கல்வியை அனைத்து சமய ஆதிக்கத்திலிருந்தும் விடுவிப்பதாகும். வருங்கால குடிமக்களாகிய குழந்தைகள் சமய தொடர்பில்லாமல் அவர்களின் பண்பு நலன் மற்றும் தார்மீக நடத்தை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான கல்வியையே பெறவேண்டும்.

சமயச்சார்பற்ற கல்வி கீழ்க்காணும் நோக்கங்களுக்காக தேவைப்படுகிறது.

•குறுகிய மனப்பான்மையைப் போக்குவதற்கும், சக்தி வாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்

•தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்

•இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்

•சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்

•வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்

•பிறரைப் பாராட்டுதல் மற்றும் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்

•அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்

•பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.

 

முடிவுரை

இந்தியா ஒரு சமயச்சார்பற்ற நாடு என்பதோடு சமய மேலாதிக்கத்தைத் தடுக்க பல்வேறு வழிகளில் செயல்படுகின்றது. சமயச்சார்பின்மை சந்தேகத்திற்கிடமின்றி ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச்சிறந்த பேறான சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க உதவுகிறது. இந்திய அரசியலமைப்பு சமயச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது மக்களாட்சியின் ஒளிரும் சாதனையாகும். சமயச்சார்பின்மை நம்மை நாகரிகப் பண்புடன் வாழ அனுமதிக்கிறது. இது மக்கள் பிற சமயத்தை மதிக்க வலியுறுத்துகிறது. இது மக்களின் சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை சம உரிமையை வழங்குகிறது. இது இந்தியா போன்ற நாட்டிற்கு விரும்பத்தக்க ஒன்றாகும்.

அக்பரின் கல்லறை, சிக்கந்தரா (ஆக்ரா அருகில் - இந்தியா)


இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் அவரது கல்லறையில் இடம் பெற வேண்டுமென அக்பர் வலியுறுத்தினார்.


மீள்பார்வை

•இந்தியா பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடாகும். எனவே அனைத்து சமயங்களுடனும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது அவசியமாகும்.

•சமய அடிப்படையில் எவருக்கும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்பதே சமயச்சார்பின்மை ஆகும்.

•மக்களாட்சி நாடு சீராக செயல்படுவதற்கு சமயச்சார்பின்மை மிகவும் அவசியமாகும்.

•சமயச்சார்பற்ற நாடு என்பது எந்த ஒரு சமயத்தையும் அந்நாட்டின் சமயமாக அதிகாரப்பூர்வமாக ஆதரிக்காததாகும்.

•இந்திய அரசியலமைப்புட் தனிநபர்களை அவர்களின் சமய நம்பிக்கை மற்றும் நடைமுறைகளுடன் வாழ அனுமதிக்கிறது.

•சமய மேலாதிக்கத்தினைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது.




மேற்கோள் நூல்கள்

1. The Consitution of India, Government of India, Ministry of Law and Justice, New Delhi.

2. Sekhar Bandyopadhyay., and Aloka Parasher Sen., Religion and Modernity in India, Oxford Publication, 2017

 

இணையதள வளங்கள்

1. http:// legislative.gov.in contitution-of-india

2. http://legislative.gov.in/ sites/ default/files/ part1.pdf


Tags : Chapter 3 | Civics | 8th Social Science அலகு 3 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 3 : Understanding Secularism : Understanding Secularism Chapter 3 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் : சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் - அலகு 3 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்