பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : இணைப்புச்சொற்கள் | 5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu
கற்கண்டு
இணைப்புச்சொற்கள்
செழியன் : இளந்தமிழா, நாளை வெளியூர் செல்வதாகக் கூறினாயே? மறந்துவிட்டாயா? உன்னுடன் யாரெல்லாம் வருகிறார்கள்?
இளந்தமிழ் : மறக்கவில்லை,
செழியா! நாளை நான் மட்டும்தான் செல்வதாக இருக்கிறேன். அதனால், என்னுடன் யாரும் வரவில்லை.
செழியன் : அப்படியானால் நீ கவனமாக இருக்கவேண்டும் அல்லவா?
இளந்தமிழ் : நான் ஏற்கெனவே சென்ற இடம்தான். ஆதலால்,
அச்சம் ஒன்றும் இல்லை.
செழியன் : அது சரி, இளந்தமிழ். மறுநாளே வந்துவிடுவாயா அல்லது வருவதற்கு நாளாகுமா?
இளந்தமிழ் : நான் திரும்பி வருவதற்கு இரண்டு நாளாகும். ஆகையால்,
தேவையான உடைகளைக் கொண்டு செல்கிறேன்.
செழியன் : ஏனெனில்,
இந்த வார இறுதியில், நமக்கு மட்டைப்பந்து போட்டி இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். நீ கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ஆகவே, மறந்துவிடாதே நண்பா!
குழந்தைகளே! மேற்கண்ட உரையாடலைப் படித்தீர்களா? உங்களிடம் வழக்கம்போல ஒரு வினா கேட்கலாமா? நீங்கள் படித்த உரையாடலில் எத்தனை இணைப்புச் சொற்கள் உள்ளன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அட,
மீண்டும் உரையாடலைப் படிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
நாம் கண்டுபிடித்த இணைப்புச் சொற்களைப் பட்டியலிடலாமா?
மட்டும், அதனால், அப்படியானால், ஆதலால், அல்லது, ஆகையால், ஏனெனில், ஆகவே
படித்தீர்களா? இவைபோன்றஇணைப்புச்சொற்கள், நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. நாம் தங்குதடையின்றிப் பேசவும் எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன.
தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். தொடர்களில் பயன்படும் சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு:
அதனால், அப்படியானால், அல்லது, அவ்வாறெனில், ஆனால், ஆகையால், ஆகவே, ஆதலால், ஆயினும், இருந்தபோதும், உம், எனவே, எனில், ஏனெனில், எவ்வாறெனில்