பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : மரபுத்தொடர்கள் | 5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai
கற்கண்டு
மரபுத்தொடர்கள்
முருகன் : அடடே, கபிலா, நீயா? என்னப்பா, இப்பத்தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?
கபிலன் : அட, அதை
ஏங்க கேட்கிறீங்க? உங்க
பேச்சையெல்லாம் கேட்காம, கிடைத்த
நல்ல வேலைய விட்டுவிட்டு வெளியூருக்குப் போனேன். அந்த வேலையத் தலைல வைத்துக்
கொண்டாடினேன். ஆனால், கானல்
நீரை உண்மையென்று நம்பிவிட்டேன். நான் செய்த இமாலயத் தவறு இதுதான். எப்பத்தான்
கரையேறுவேனோ தெரியல நம்ம ஊர்லய வேலை கிடைக்குமான்னு இப்ப பஞ்சாகப்
பறந்துகிட்டிருக்கேன்.
முருகன் : என்னாச்சு? ஏன் இப்படிப் பேசுகிறாய்?
கபிலன் : வேறென்ன? அவசரக்குடுக்கையா இருந்ததாலே ஆகாயத்தாமரையை உண்மைன்னு நினைச்சேன். இப்ப
வருத்தப்படுகிறேன். நல்ல ஊதியம் கிடைக்கும்னு பார்த்தா ஒரே பித்தலாட்டமா இருக்கு.
முருகன் : சரி, சரி,
வருத்தப்படாதே. நீ எங்கேயும் போகவேண்டா. நானே உனக்கு வேலை
வாங்கித் தருகிறேன்.
உரையாடலைப் படித்தீர்களா? கபிலன் என்ன பேசினான் என்று புரிந்து கொண்டீர்களா? அவன் தன் பேச்சில் மரபுத்தொடர்களைப்
பயன்படுத்தியிருக்கிறான். அவை,உங்களுக்குப்புரியவில்லையெனில், அவற்றின் பொருளைமுதலில் காண்போம். பின்னர், மீண்டும் அவன் பேசியதைப் படித்துப் பார்ப்போம்.
மரபுத்தொடர் : உணர்த்தும்
பொருள்
தலையில் வைத்துக் கொண்டாடுதல் - பெரிதும் மதித்தல்
கானல் நீர் - கிடைக்காத ஒன்று
இமாலயத்தவறு - பெரிய தவறு
கரையேறுதல் - துன்பத்திலிருந்து மீளுதல்
பஞ்சாகப் பறத்தல் - அலைந்து திரிதல்
அவசரக்குடுக்கை - ஆராயாமல் செயல்படுதல்
ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
பித்தலாட்டம் - ஏமாற்று வேலை
இப்போது, மீண்டும் படித்துப் பார்த்தீர்களா? அவன் கூறியதன் பொருள் புரிந்துவிட்டதல்லவா! இவ்வாறு, நம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள் பலவற்றை முன்பே நாம் அறிந்துள்ளோம். இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்டவை மரபுத்தொடர்கள். இவை மரபாகத் தொன்றுதொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதால், மரபுத்தொடர்கள் என்கிறோம்.