பருவம் 3 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : மயங்கொலிச்சொற்கள் | 5th Tamil : Term 3 Chapter 2 : Arm, thathuvam, sindhanai
கற்கண்டு
மயங்கொலிச்சொற்கள்
மலர்: என்னப்பா, இது?
வளர்: நீதானே தவளையைக்
கொண்டுவரச் சொன்னே?
மலர்: என்னது? நான் தண்ணீர் பிடிக்க தவலை கேட்டா, நீ தண்ணீரில் வாழும் தவளையைக்
கொண்டு வந்திருக்கிறியே?
மலர்: பால் குக்கர்கிட்டே
நின்னுக்கிட்டு எதுக்கு மேலே இருக்கிற விளக்கையே பார்த்துக்கிட்டு இருக்கே?
வளர்: அம்மாதான் சொன்னாங்க, குக்கரிலிருந்து ஒளி
வந்தவுடனே அடுப்பை அணைக்கணும்னு, அதான் எப்ப விளக்கிலிருந்து ஒளி
வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.
மலர்: அட, குக்கரிலிருந்து
ஒலி (விசில் சத்தம்) தான் வரும். ஒளி வருமா என்ன?
மலர்: என்னப்பா இது, வெறுங்கைய வீசிக்கிட்டு வர்றே? நான் கேட்டது எங்கே?
வளர்: ஏன்? இப்ப என்னாச்சு? நீ
கேட்டதைத்தான் நான் கையிலேயே போட்டிருக்கிறேனே!
மலர்: அட, நான் மீன் பிடிக்க வலையச்
சொன்னா நீ கையில போடற வளையச் சொல்றியே?
மலர்: என்னப்பா, எப்பவும் இந்தக் கரையிலதான் உட்கார்ந்து படிப்பே இப்ப
அந்தக் கரையிலபோய் உட்கார்ந்திருக்கிறியே!
வளர்: அம்மாதான் சொன்னாங்க, அக்கரையிலே படிச்சா நல்லா முன்னுக்கு வரலாம்னு.
மலர்: அட, அம்மா சொன்னது அக்கரையில்லே, அக்கறை, அதாவது
கவனமாப் படிக்கணும்னுதான் சொல்லியிருப்பாங்க. அதைப்போய் நீ ?
மலர்: என்னப்பா, இங்கே நின்னுக்கிட்டுப் பனைமரத்தையே
பார்த்துக்கிட்டு இருக்கே?
வளர்: அப்பாதான் பனைய
எடுத்துட்டு வா, வேலி
கட்டணும்னு சொன்னாங்க அதான், இவ்வளவு உயரமா இருக்கே இதை எப்படி எடுத்துட்டுப் போறதுன்னு பார்த்துக்கிட்டு
இருக்கேன்
மலர்: அடப் போப்பா, எப்பப் பார்த்தாலும் தப்புத் தப்பாவே புரிஞ்சுக்கிற, அப்பா சொன்னது பணை.
அதாவது,
மூங்கில். மற்றவங்க பேசுற பேச்சில வர்ற சொற்களோட ஒலிப்பை நீ
கவனமாக் கேட்கணும். அதே சொல்லை நீயும் சரியாக ஒலித்துப் பழகணும் அப்பத்தான் இந்த
மாதிரி தவறெல்லாம் ஏற்படாது, சரியா?
மேற்கண்ட உரையாடல்களைப் படித்தீர்களா? இவை, படித்துச்
சிரிப்பதற்கு மட்டுமல்ல; சிந்திப்பதற்கும்தான்.
நாம் பேசும்போதும் எழுதும்போதும் ஏற்படுகின்ற ஒலிப்புப் பிழைகள்தாம் இவை. இதனால், நாம் பொருளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படும். இதனைத்
தவிர்க்க,
நாம் தெளிவாகவும் சரியாகவும் ஒலித்துப் பழகவேண்டும். நமக்கு
மயக்கம்தரக்கூடிய எழுத்துகளை அறிந்துகொள்வோம்.
இந்த எழுத்துகளைத் திரும்பத் திரும்பநன்கு ஒலித்துப் பழக வேண்டும். இவ்வெழுத்துகள் இடம்பெற்றுள்ள சொற்களின் பொருள் வேறுபாடு உணரவேண்டும். அப்போதுதான் பிழையைத் தவிர்க்க முடியும். இந்த எழுத்துகளை ஒலிக்கும்போது, அவை எப்படிப் பிறக்கின்றன என்பதுபற்றி மேல்வகுப்பில் விரிவாகப் படிப்பீர்கள்.