பருவம் 3 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : காணாமல் போன பணப்பை | 5th Tamil : Term 3 Chapter 2 : Arm, thathuvam, sindhanai
இயல் இரண்டு
துணைப்பாடம்
காணமல் போன பணப்பை
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தன்னிடமிருந்த ஆடுகளை விற்று, ஒரு பை நிறைய பணத்துடன் தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
திரும்பும்போது, அளவுக்குமிஞ்சிய கனவில் மிதந்துகொண்டே நடந்தான்.
"இந்தப் பணத்தைக் கொண்டு, மேலும் ஆடுகள் வாங்கி விற்றால், நிறைய லாபம் கிடைக்கும். நான் பெரும் பணக்காரன் ஆவேன்' எனக் கற்பனை செய்தான். அப்போது அவனையும் அறியாமல் தான்
வைத்திருந்த பணப்பையை நழுவவிட்டான்.
வீட்டுக்கு வந்த பிறகுதான் பணப்பை காணாமல் போனதை
உணர்ந்தான். அதை எண்ணி எண்ணி அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலாகிவிட்டது.
மறுநாள் அவன் தன் நாட்டுச் சிற்றரசனிடம் சென்று
முறையிட்டான். 'அரசே! என் பணப்பையை
வரும் வழியில் தொலைத்து விட்டேன். அதை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்தால் நாற்பது
பணம் சன்மானமாகக் கொடுத்து விடுகிறேன். அருள் கூர்ந்து இதை ஊர் மக்களுக்கு
அறிவிக்க வேண்டுகிறேன்" எனக் கேட்டுக் கொண்டான்.
அரசனும் அவ்வாறே முரசு அறைந்து நாட்டு மக்களுக்கு
அறிவித்தான்.
மூன்று நாள் கழித்து, வயதான மூதாட்டி ஒருவர், தான் கண்டெடுத்த பணப்பையை சிற்றரசனிடம் ஒப்படைத்தாள். சிற்றரசன்
அவளுடைய நேர்மையையும், நாணயத்தையும்
கண்டு மெச்சி அவளுக்குத் தக்க வெகுமதி அளிக்கும்படி வியாபாரிக்கு ஆணையிட்டான்.
அதற்குள் அந்த வியாபாரி பணப்பையைப் பெற்றுக் கொண்டு, பணம் சரியாக இருக்கிறதா என எண்ணிப் பார்த்துக் கொண்டான்.
எல்லாம் சரியாக இருந்தது. பணப்பையைத் திருப்பிக் கொடுப்பவருக்குச் சன்மானம்
அளிப்பதாக முன்பு கூறியிருந்தான். ஆனால், இப்போது அவன் மனம் சட்டென மாறியது. தான் சொன்ன சொல்லை அவன்
நிறைவேற்ற விரும்பவில்லை.
எனவே, அவன் பையில் அதிகப் பணம் இருந்ததாகவும், இப்போது பணம் குறைகிறது என்றும் பொய் சொன்னான்.
இதை அறிந்துகொண்ட அரசன், சொன்னபடி வெகுமதி கொடுக்காததைக் கண்டு வெகுண்டான். அந்த
வணிகனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான், "வணிகனே, உன்பையில் இப்போது இருப்பதைக்காட்டிலும் அதிகமாகப் பணம் இருந்தது இல்லையா? எனவே, இது உன் பை இல்லை; வேறு
யாருடையதோ தெரியவில்லை. பணத்திற்குச் சொந்தக்காரன் வந்து கேட்கும்வரை என்னிடமே
இருக்கட்டும். நீ இவ்விடத்தைவிட்டுப் போகலாம்" என ஆணையிட்டான்.
அவன் சென்றபின், "பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன்; சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன்
கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன்" என்று கூறிய அரசன், மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டிப் பணப்பையை அவருக்கே
பரிசாகவும் கொடுத்துவிட்டான்.
கஞ்சத்தனமுடைய வணிகன் பணத்தை இழந்ததுடன் மற்றவர்களுடைய
இகழ்ச்சிக்கும், கேலிப்பேச்சுக்கும்
ஆளானான்.
நீதி : 'நேர்மை நன்மை தரும்'