பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : மூவிடப்பெயர்கள் | 5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam
கற்கண்டு
மூவிடப்பெயர்கள்
மான்விழி : அடடே! கலையரசியா? ஆளே அடையாளம் தெரியவில்லையே? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?
கலையரசி : நானும்கூட உன்னைப் பார்த்து நெடுநாளாகிவிட்டது. எங்கள் குடும்பத்துடன் மும்பையில் அல்லவா இருந்தோம்,
சென்ற வாரம்தான் என் தந்தைக்குப் பணிமாற்றம் நம்ம ஊரிலேயே கிடைத்தது.
மேற்கண்ட செய்தியைப் படித்தீர்களா? நீங்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டீர்கள் என்று பார்க்கலாமா?
● நீங்கள் படித்த செய்தி, என்ன வடிவத்தில் உள்ளது?
உரையாடல் வடிவம்
● நீங்கள் படித்த பகுதியில் பேசுபவர் யார்? கேட்பவர் யார்?
பேசுபவர் மான்விழி, கேட்பவர் கலையரசி
● இருவரும் என்ன பேசுகிறார்கள்?
இருவரும் நெடுநாள் கழித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது குறித்துப் பேசுகின்றனர்.
சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆகவே, நீங்கள் படித்த உரையாடலில் பேசுவோர், கேட்போர், பேசப்படும் பொருள் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இங்கு பேசுபவர் யார்? மான்விழி. அதனால், பேசுவோரைக் குறிக்கும் இடம் தன்மை. அடுத்ததாக,
கேட்பவர் யார்? கலையரசி. ஆதலால், கேட்போரைக் குறிக்கும் இடம், முன்னிலை. இருவரும் யாரோ ஒருவரைப்பற்றி அல்லது ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆதலால்,
பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும் இடம், படர்க்கை.
❖ தன்னைக் குறிப்பது தன்மை.
❖ முன்னால் இருப்பவரைக் குறிப்பது,
முன்னிலை.
❖ இவ்விருவரையும் தவிர மற்றவற்றை/ மற்றவர்களைக் குறிப்பது,
படர்க்கை.
❖ ஒரு பெயர்ச்சொல்லை வேறொரு பெயர்ச்சொல்லால் குறிப்பது,
மாற்றுப் பெயர்ச்சொல்.
❖ இந்த மாற்றுப் பெயர்ச்சொல்தான் இடம் நோக்கித் தன்மை,
முன்னிலை, படர்க்கை என மூவிடப்பெயர்களாக அமைகிறது.
தன்மை - நான், நாம், யான், யாம், நாங்கள்
முன்னிலை - நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள்
படர்க்கை - அவன்,
அவள், அவர், அது, அவை
தற்போதைய வழக்கில், அவர் என்பது, ஒருவரைக் குறிக்கிறது; அவர்கள் என்பது, பலரைக் குறிக்கிறது. எ.கா. அவர் பேசினார்/ அவர்கள் பேசினார்கள்.
ஆனால், அது வந்தது, அவை வந்தன என்று இருப்பதைப்போல், அதுகள் வந்தது, அவைகள் வந்தன என்பன வழக்கில் இல்லை. அவை, வழூஉச்சொற்களாகக் (பிழையானவையாகக்) கூறப்படுகின்றன.
மூவிடப்பெயர்கள் - ஒருமையும் பன்மையும்