Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : அறிவின் திறவுகோல்

பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : அறிவின் திறவுகோல் | 5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam

   Posted On :  21.07.2023 09:19 pm

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்

உரைநடை : அறிவின் திறவுகோல்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் : உரைநடை : அறிவின் திறவுகோல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

உரைநடை

அறிவின் திறவுகோல்

 

முதன்முதலில் அறிவு என்னும் கருவி செயல்படத் தொடங்கிய நாள், மனிதனுக்கு அச்சம் மிகுந்ததாகவே இருந்திருக்கும். தன் அறிவைக் கொண்டு, அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். காலையில் ஒளிவீசிக் கொண்டிருந்த கதிரவன், திடீரென மாலையில் மறைந்ததும் அவனது அறிவு விழித்துக் கொண்டது. அந்தக் கதிரவன் எங்கே போனான்? இப்படியே இருளாகத்தான் இருக்குமா? என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க மறுநாள் மீண்டும் கதிரவன் தோன்றினான். அப்போதே மனிதனின் அறிவு வேலை செய்யத் தொடங்கியது. இந்தக் கதிரவன் நேற்றுத் தோன்றிய இடத்திலேயே ஏன் இன்றும் தோன்றுகிறான்? இதுபோன்று அடுக்கடுக்காக அவன் உள்ளத்தில் சிந்தனை தோன்றியது. ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியபோதுதான் அறிவியல் வளரத் தொடங்கியது. அவ்வகையில் அறிவியலை வளர்த்த அறிஞர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் தேவை. இப்பாடப்பகுதியில் அறிவால் வளர்ந்த அறிவியல் சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஆப்பிளைக் கண்டார்; ஆற்றலைத் தந்தார்


தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? "ஆகா, நமக்கு ஓர் ஆப்பிள் கிடைத்ததே" என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா? ஆனால், அந்தச் சிறுவன், அப்படி நினைக்கவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தைநோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டான். இதில் ஏதோ ஓர் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான். இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தான். அன்று தன் பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். அன்று சிந்திக்கத் தொடங்கிய அந்தச் சிறுவன்தான், புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சர் ஐசக் நியூட்டன். அவர், பூமிக்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவியலறிஞர் ஆவார்.

வேடிக்கை பார்த்தார்; வியக்க வைத்தார்


பூங்கா ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் மருத்துவர் ஒருவர். சிறுவனொருவன், 'ஸீஸா' என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டூசியால் கீறிக்கொண்டிருந்தான்.

பலகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன். பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத் தெளிவாகக் கேட்பதைக் கண்டு அந்தச் சிறுவன் வியப்படைந்தான்.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அந்த மருத்துவர், சிறுவர்களின் செய்கையைக் கண்டார். அவர் உள்ளத்தில் மின்னல்போல் ஓர் ஒளிக்கீற்று தோன்றியது. தாம் விடை தெரியாமல் தவித்த ஒரு வினாவுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. அவர், அந்தச் சிறுவர்களை நோக்கிச் சென்றார். மரம் போன்ற திடப்பொருள்கள் ஒலியைப் பெருக்கும் தன்மையுடையவை. அதனால்தான், ஒரு முனையில் மெதுவாகக் கீறினாலும் மறுமுனையில் தெளிவாகக் கேட்கிறது என அவர்களிடம் விளக்கினார்.

அந்த விளக்கம் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும்தாம். ஏனெனில், நோயாளியின் இதயத் துடிப்பை எவ்வாறு துல்லியமாகக் கேட்கமுடியும் என்றுதானே அவர் கவலைப்பட்டார். இப்போது, அவருக்கே விடை காண முடிந்ததல்லவா? உடனே ஓட்டமும்நடையுமாக மருத்துவமனையை அடைந்தார். தாள்களை ஓர் உருளை வடிவமாகச் சுருட்டிக் கொண்டு, நோயாளியை நெருங்கினார். காகித உருளையின் ஒரு முனையை நோயாளியின் மார்பில் வைத்து, மறுமுனையில் தம் காதை வைத்துக் கேட்டார். என்ன வியப்பு! நோயாளியின் இதயத்துடிப்பு இவருக்குத் துல்லியமாகக் கேட்டது. அந்த மணித்துளியில் மருத்துவ உலகம் அதுவரை கண்டிராத மாபெரும் ஒரு முயற்சிக்கு வித்திட்டது. ஆம். ஸ்டெதஸ்கோப் எனப்படும் இதயத்துடிப்பைக் கண்டறியும் கருவி அப்போதுதான் உருவானது. அதைக் கண்டுபிடித்தவர், வேறு யாருமல்லர், அந்தப் பூங்காவில் சிறுவர்களின் விளையாட்டிலிருந்து ஓர் உண்மையைக் கண்டுபிடித்தாரே அந்த மருத்துவர்தாம். அவர் பெயர், இரேனே லென்னக்.

ஆவியைக் கண்டார்; நீராவி இயந்திரம் தந்தார்


அந்தச் சிறுவனுக்கு வயது பன்னிரண்டு. சமையலறைக்குள் நுழைந்த சிறுவன், தேநீர் தயாரிப்பதற்காகக் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நீர் நன்றாகக் கொதித்தவுடன் அந்தக் கெட்டிலின் மூக்கு வழியாகக் 'குப் குப்' என்று ஆவி வெளிவருவதைப் பார்த்தான். இந்த ஆவி வெளிவராதபடி கெட்டிலின் மூக்கை அடைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணினான். உடனே, அந்தப் பாத்திரத்தின் மூக்குப்பகுதியை மூடினான். இப்போது ஆவி வரவில்லை. சிறிதுநேரம் சென்றது. கெட்டிலின் மூடி மெல்ல அசையத் தொடங்கியது. அதனால், சிறிது இடைவெளி ஏற்பட்டது. இப்போது, நீராவி கொப்புளித்துக்கொண்டு வெளியேறியது. அந்தச் சிறுவன் பார்த்துக்கொண்டே நின்றான். மேலும் சிறிதுநேரம் சென்றபின், கெட்டிலின் மூடி மேலெழும்பத் தொடங்கியது. அப்புறம் ... அப்புறம் என்ன? மூடியைத் தள்ளிவிட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங்கியது. அந்தச் சிறுவனுக்கு வியப்பு மேலிட்டது. இந்த நீராவியும் புகையும்தான் அந்தச் சிறுவனை நீராவி என்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடிக்கத் தூண்டியது. அந்தச் சிறுவன்தான் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் வாட். இவர்தாம் நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தார்.

Tags : Term 2 Chapter 1 | 5th Tamil பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam : Prose: Arivin thiravuhole Term 2 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் : உரைநடை : அறிவின் திறவுகோல் - பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்